Thursday 5 November 2015

அதிமுக ராக்கெட்...

ஆளுங் கட்சி சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ராக்கெட்...

ஓ.பி.எஸ். : அன்பின் திருவுருவாய் அகிலம் போற்றுகின்ற வாழும் இதயதெய்வம் தங்கத்தாரகை பெண் பெரியார் பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மா அவர்களின் பொற்பாதங்களை வணங்கி வருகின்ற நவம்பர் 14 ஆம் தேதி சுபயோக சுபதினத்தில் ராகு காலம் முடிந்து நல்ல நேரம் துவங்கும் வேளையில் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே எந்தக் கட்சியும் செய்யாதது..இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனையாக சொந்த ராக்கெட் ஒன்று அம்மாவின் ஆணைக் கிணங்க செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் படுகிறது.. அதனைக் காணொளி மூலம் மாண்புமிகு அம்மா அவர்கள் கவுண்ட்டவுன் சொல்லி அனுப்பி வைக்க உள்ளார் என்ற மகிழ்வான செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..

நத்தம் விஸ்வநாதன் : சாதனைகள் நாலாண்டு... சரித்திரம் படைக்கும் நூறாண்டு... என்னும் தாரக மந்திரத்திற்கு செயல் உருவம் தந்திருக்கும் இதயதெய்வம், தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்தது தான் இந்த யோசனை.. எல்லாரும் அறிவாகத் தான் சிந்திப்பார்கள் ஆனால் அம்மா அவர்களோ அறிவியலாகவே சிந்திப்பார் என்பதற்கு இதுவே ஒரு சான்று.. உலகில் எந்த முதல்வரும் ராக்கெட் அனுப்பியதாக வரலாறு உண்டா.. அந்த வரலாற்றை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.. அம்மாவின் ஆணைக்கிணங்க நம் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

பா.வளர்மதி : எங்கள் பாசமே எங்கள் நேசமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் நான் வணங்கும் இதயதெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி எங்கள் அம்மாவின் காலடி பணிந்து கேக்குறேன்.. எந்தக்கட்சியாவது ராக்கெட் விட்டு இருக்காங்களா.. இல்ல இந்த யோசனையாவது தோணியிருக்குமா பூமி மட்டுமில்ல அந்த வானத்தை பத்தியும் யோசிப்பாங்க அதான் புரட்சித் தலைவி.. எந்த விஞ்ஞானியை நம்பியும் எங்கம்மா இல்ல அவங்க நெனைச்சாஇந்த ராக்கெட்டை எங்கம்மாவே செலுத்துவாங்க அவங்க ஆணையிட்டா அதுவாவே கூட பறக்கும்..அதுக்கான தகுதியுள்ளவங்க எங்கம்மா அவங்க ஜான்சிராணி வீரமங்கை... அமெரிக்காகாரன் எல்லாம் சும்மா... அறிவாளின்னா அது எங்கம்மா.. 

கலைஞர்: உடன்பிறப்பே..இன்றைய செய்திகளில் அம்மையார் ராக்கெட் விடப் போகிறார் என்று அவரது அடிப்பொடிகள் அறைகூவல் விட்டதை நீ படித்திருப்பாய்.. இது ஒன்றும் புதியதல்ல.. இது அவர்கள் சிந்தையில் உதித்ததும் அல்ல.. பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா சென்றிருந்த போது அங்கு யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதை உலகம் அறியும். அப்போது அண்ணா அவர்களை சந்தித்த மாணவர்கள் சொன்னது தான் இந்த ராக்கெட் யோசனை 1968 ஆம் ஆண்டிலேயே இது குறித்து அண்ணா அவர்கள் என்னிடம் இந்த திட்டத்தை தயாரிக்கச் சொல்லி அதுப்படிப் படியாக வளர்ந்து கடந்த திமுக ஆட்சியில் செயல்படும் வேளையில் ஆட்சிமாற்றம் வந்ததால் நின்றது.. இதை ஏதோ இவர்கள் சாதனை போல கூவுவது விந்தையாக இருக்கிறது..செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் அம்மையாருக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன் நீங்கள் எந்த கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்பலாம் ஆனால் சூரியனுக்கு மட்டும் அது நடக்கவே நடக்காது.. உதயசூரியனுக்கு மேல் எந்த ராக்கெட்டும் பறக்காது.

ஈ.வி.கே.எஸ் : ஒரு முறை சத்தியமூர்த்தி பவனுக்கு இந்திரா அம்மையார் வந்திருந்த போது ராக்கெட் பற்றி பேசினார்.. அங்கிருந்த கூச்சல் கோஷ்டி சத்தத்தில் எங்கள் காதில் மார்க்கெட் என்று விழுந்தது... அதன் பிறகு தலைவர் ராஜீவை நான் டெல்லியில் சந்தித்த போது நிலாவுக்கு ஒரு ராக்கெட் என்னும் தன் கனவை சொன்னார்.அதன் பிறகு இளைய பாரதமான ராகுல் அவர்களும் தன் தந்தையாரின் கனவை நீட்டி செவ்வாய்க்கு ராக்கெட் என்று சொன்னார்... ஆனால் காங்கிரஸ் பேரியக்கத்தின் கனவான இத் திட்டத்தை அதிமுக செயல்படுத்தியது அதிர்ச்சி தருகிறது.. அதிமுகவிற்கு இந்த ரகசியத்தை அநேகமாக தங்கபாலு தான் சொல்லியிருப்பார் என்று சந்தேகப்படுகிறேன்.. ஏனெனில் ராகுல் அன்று சொல்லும் போது அவரும் உடனிருந்தார்.. மேலிடம் தான் இனி இதுபற்றி முடிவு செய்யவேண்டும்.

வை.கோ : உலகெங்கும் நீதி கேட்டு தமிழன் அலையும் இவ்வேளையில் செவ்வாய்க்கு ராக்கெட் அவசியமா.. தீபாவளிக்கு ராக்கெட் வாங்கவே காசில்லாத நிலையில் இருக்கிறான் ஏழைத்தமிழன் அவனுக்கு வழி செய்தீர்களா.? ஏழைத்தமிழனை விடுங்கள் ஈழத்தமிழர் கதி என்ன? செவ்வாய் பற்றி சிந்திக்கிறீர்களே  அந்தத் தமிழர்கள் வாயில் இடும் கதறல் உங்கள் செவிகளில் விழவில்லை.. உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை..இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்களே அது என்னவாயிற்று? தமிழகத்திலே அடிப்படை வசதிகள் இல்லையே அதை தீர்க்காமல் ராக்கெட் விடுவது நியாயமா.. ஆயிரம் முறை கேட்டாலும் சொல்லுவேன் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி சாதனை புரியும் நாளை விட தனி ஈழம் மலரும் அந்நன்னாள் தான் என் வாழ்வின் பொன்னாள்.

ராமதாஸ் : செவ்வாய்க்கு ராக்கெட்.. நினைத்தாலே சிரிப்பு வருகிறது.. நாடு இப்போது இருக்கும் நிலை என்ன மக்களின் தேவை என்ன என சிந்திக்காது எடுத்த முடிவு இது.. இதனால் தான் சொல்லுகிறேன் அன்புமணி முதல்வர் ஆக வேண்டும் என்று.. இவ்வளவு காலம் இரு திராவிட கட்சிகளும் நாட்டை சுரண்டியது போதும்.. எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் (அய்யா மீனிங் தப்பாகுதுங்களே) இது போல ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தாமல் காய்கறி மார்க்கெட் அதிகரிக்க பாடுபடுவோம்.. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக பாடுபடுவோம்.. நாட்டில் எங்கள் முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான்.மாற்றம்.. முன்னேற்றம்..அதிமுகவின் ராக்கெட் ஏமாற்றம்.

கேப்டன் : மக்களே உப்பு தண்ணிய குடிச்சவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்.. நான் கேக்குறேன்.. இப்ப எதுக்கு ராக்கெட்டு... இந்த கவருமெண்ட்டுக்கு ரெண்டு தான் தெரியும் ஒண்ணு டாஸ்மாக் டார்கெட்டு இல்லாட்டி பறக்குற ராக்கெட்டு.. கேப்டன் கோபப்படுறாரு முறைக்கிறாரு இப்படியெல்லாம் சொல்றாங்க ஆனா மக்களே நான் தப்பிருந்தா தான் கோவப்படுவேன்... சொல்லுங்க நாட்டுல இப்ப இருக்குற பிரச்சனையில எத்தனை தீர்ந்து போச்சு... ஒண்ணுமில்ல.. எல்லாம் தீராத பிரச்சனையா தான் இருக்கு..இந்த கேப்டன் முதலைமைச்சரா வந்து தான் தீர்க்கணுமுன்னு கிடக்கு.. நிச்சயம் அது நடக்கும் மக்களே.. கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன்.. எப்படி ஏமாத்துவாங்க தெரியுமா..? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எதுக்குடா..? ராக்கெட் பறக்கறதை பார்க்கடா..

சரத்: அயர்ன் லேடி ஆயிரம் மோடி எங்க புரட்சித் தலைவி அம்மா..(லா) அவங்க நினைச்சா செவ்வாய் கிரகம் கூட கீழே இறங்கிவரும்..(லா) அவங்க பாதம் பட்டா செவ்வாயிலும் செடி முளைக்கும் ஊர் வாயையும் அது அடைக்கும்.. (லா) அம்மாவை பார்க்கும் போதெல்லாம் வாழும் நீல் ஆர்ம்ஸ்டிராங்குன்னு பாக்குறதா வாழும் யூரிககாரின்னு பாக்குறதான்னு ரொம்ப யோசிச்சு தமிழகத்தின் சுனிதா வில்லியம்சா அவங்களை நான் பார்க்குறேன்(லா) எங்கம்மா கை பட்டா மண்ணுலேயும் வின்னு விண்ணுலேயும் வின்னு ஏன்னா அவங்க இந்த ஊரு பொண்ணு(லா) அம்மா நினைச்சா முடியாததும் இல்ல அவங்க அறிவுக்கு வானமே எல்லை (லா)

பிராக்கெட்டில் இருக்கும்(லா)ஒவ்வொரு டயலாக்கிற்கும் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி இசையான லால்லலலல..லாலாலா.என்று ஹம் செய்து படிக்கவும்.

ஜெயலலிதா : என் ரத்தத்தின் ரத்தமான அன்புப் பெரியோர்களே தாய்மார்களே இம்மாநிலத்தின் முதல்வரான எனக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது தெரியாதா.. உண்மையில் அன்று அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் செவ்வாயன்று வரும் தீபாவளிக்கு என் அன்புப் பரிசாக தமிழக மக்களுக்கு விலையில்லா ராக்கெட் வழங்கும் படி ஆணையிட்டேன்.. சிக்னல் பிராப்ளத்தில் அவருக்கு அது வேறு மாதிரி கேட்டு அவர் இஸ்ரோ வரை விசாரித்து எனக்கு பதிலளித்த போது விழுந்து விழுந்து சிரித்தேன்... இது வாட்ஸ் அப் ஃபேஸ்புக் காலம் இங்கு ஒரு செய்தி எப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை.. உலகிற்கு உணர்த்த எம் அமைச்சர் பெருமக்களோடு சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்த முடிவுசெய்தேன்.. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் தெரியாமல் எந்த மாநில அரசாவது ராக்கெட் விடுமா..? 

மத்திய அரசு தான் ராக்கெட் விடும் என்னும் அடிப்படை கூட தெரியாது அறிக்கை விட்ட தலைவர்களை பார்த்தீர்களா இவர்களின் முகமூடியை கிழிக்கத்தான் இந்த அறிக்கை.. தர்மத்தின் வாழ்வுதனை சூது எப்படி கவ்வுகிறது என்பதன் விளக்கம் தான் இச்செய்தி.. இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வாதர பிரச்சனைக்கு முடிவு கட்டி தமிழகத்தை இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாக்குவதே என் மூச்சு..லைக் கமெண்ட் போடுவது மட்டும் உங்கள் பணி அல்ல வாட்ஸ் அப் முகநூலில் வந்த செய்திகளை அப்படியே நம்பாது  இருப்பது தான் உங்கள் தலையாய பணி.. அன்புச் சகோதரியின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து நான் கேட்டதை செய்வீர்களா.. செய்வீர்களா.. நிச்சயம் செய்வீர்கள் அண்ணா நாமம் வாழ்க.. புரட்சித் தலைவர் நாமம் வாழ்க.. நன்றி.

No comments:

Post a Comment