Tuesday 10 November 2015

வேதாளம்...

#வேதாளத்தின்_கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான்.. அங்கு தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தன் தோளில் சுமந்து கொண்டு இறங்கி நடந்தான்.. அவன் முதுகில் இருந்த வேதாளம் எள்ளி நகையாடியது.. உன் செயலிலேயே குறிக்கோளாய் இருக்கும் விக்கிரமா இந்தக் கதையை கவனமாகக் கேள்...

இதுவரை குறிப்பிட்ட கதாபாத்திரங்களை வைத்து கதை சொன்ன நான் இப்போது ஒட்டு மொத்த மக்களின் கதையை சொல்கிறேன்..அது கி.பி 2015 ஆம் ஆண்டு பூமியில் அறிவியல் வளர்ச்சி அதிகம் இருந்த ஆண்டு.. சமூக வலைத் தளங்கள் என்னும் பேரில் ஆளுக்காள் சரத்குமாராக (நாட்டாமை) இருக்கும் காலமது...

ஃபேஸ்புக் என ஆங்கிலத்திலும் தேவையே இல்லாது அதை தமிழில் முகனூல் என மொழி பெயர்த்து இருக்கும் காலமது.. அதில் எழுதுபவர்கள் தங்களை பதிவர்கள் என்றும் முகனூல் பிரபலங்கள் என்றும் வலையிலே கோட்டை கட்டி வாயிலே வடை சுட்டார்கள். தங்கள் எழுத்து இந்த சமூகத்தை திருத்த வந்ததாக மூடத்தனமாக நம்பினார்கள்.

அதிக பட்சம் அவரது 5ஆயிரம் நண்பர்களாலேயே 500 லைக்குகள் கூட வாங்காத பதிவை புரட்சி என நம்பினார்கள். தான் எழுதினால் எல்லாம் மாறிவிடும் என்ற மமதை அவர்களுக்கு இருந்தது. இப்படி நாட்டில் நடக்கும் எந்த விஷயத்தையும் கலாய்ப்பது.. உண்மையோ பொய்யோ ஊருக்கு முன் அதை பதிவாக வெளியிட வேண்டும் என்னும் வெறி அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.

செய்திகளை முந்தித் தருவது என்ற ஆசையில் முந்திரிக் கொட்டை தனமாக அதைத் தர ஆரம்பித்தார்கள்... இறக்காதவர்களை சாகடித்தார்கள்.. ஸ்க்ரீன் ஷாட்டுகளை நம்பினார்கள்.. ஆடியோ க்ளிப்பிங்கை ஷேர் செய்தார்கள்.. இயேசுநாதருக்குப் பின் பலரை உயிர்த்தெழச் செய்தார்கள்.

இங்கு தான் கதை ஆரம்பிக்கிறது.. சினிமாத் துறையில் இருந்து 5 முதல்வர்களை தேர்ந்தெடுத்து.. ஆட்சி புரிய வைத்தவர்கள்... சினிமா ஹீரோ நிஜத்திலும் ஹீரோ என நம்பியவர்கள்.. இன்று வரை கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தவர்கள்.. சினிமாவை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டவர்கள் இணையத்தில் தங்கள் இம்சைகளை தொடர ஆரம்பித்தனர்.

கேமிரா பற்றியோ எடிட்டிங் பற்றியோ திரைக்கதை பற்றியோ தெரியாதவர்கள் அதில் விற்பன்னர் போல எழுத ஆரம்பித்தனர்... ரசிகர்கள் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் 156வது பானிபட் போர் வரை நடத்தி விட்டார்கள்... பலர் ஹிட்லர் ஆனதை விட கோயபல்ஸ் ஆனது தான் அதிகம்.. ரசனை என்பது ஆளுக்கு ஆள் மாறும் என்பது கூட தெரியாமல் சரமாரியாக விமர்சித்தார்கள்..

சில ஸ்பானிஷ், கொரிய, ஈரானிய திரைப்படங்களை திரைப்பட விழாக்களில் ஓசி பாசில் பார்த்து விட்டு குறுந்தாடி ஜோல்னா பை கெட்டப்புக்கு போனார்கள் சிலர்.. உண்மையில் இது குறித்த ஞானம் உள்ளவர்கள் எழுதியது மறைந்து போனது.. நுனிப் புல் மேய்ந்தவர்களின் கூற்றை நம்ப ஆரம்பித்தது உலகம்.. அதை சாதகமாக்கிக் கொண்டனர்.

பலருக்கு பிடித்த சாம்பார் சிலருக்கு பிடிக்காது.. சிலருக்கு பிடித்த சில காய்கறிகள் பலருக்கு பிடிக்காது.. ஒரே ஒரு உணவிலேயே இப்படி வித்தியாசம் இருக்க தனக்கு பிடிக்காத படம் இன்னொருவருக்கு பிடிக்குமே எனத் தெரியாது எழுதினார்கள்.. கத்தி,வீரம்,புலி,வேதாளம் என பல போர்கள் நடந்தன.. டி.பியில் போலி முகம் வைத்து லட்சக்கணக்கானவர்கள் அஞ்சா நெஞ்சத்துடன்!!??? போரிட்டனர்.

இப்போது சொல் இவர்களுடைய விமர்சனம் சரியா? இதை எழுதும் இவர்கள் 5 கோடி கொடுத்தால் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் தருவார்களா? அல்லது இப்படியே திண்ணைப் பேச்சு வீரர்களாய் தொடர்வார்களா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்றது வேதாளம்.

பதில் தெரியாத விக்ரமன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறி இறந்து போனான்.. விக்ரமனிடம் இருந்து விடுதலை பெற்ற வேதாளம் தூங்காவனத்திற்கு பறந்து சென்றது.

No comments:

Post a Comment