Sunday 15 November 2015

மழைப் பாக்கள்...

#மழைப்_பாக்கள்

பேய்மழைக் காற்றுடன் சோவெனப் பெய்ய
நாய்நரி எல்லாம் பதுங்கிய தெருவில்
காய்கறி வாங்கிட வழியெதும் இன்றி
பாய்தனிலமர்ந்து பதிவுகள் இட்டேன்.

தெருவிலே ஓடிடும் தேங்கிய நீராம்
உருவிலே அதுவோர் சிறிய ஆறாம்
கருவிலிருக்கும் சுருண்ட சிசுபோல்
மருகினார் மக்களி வ்வூரில்.

இடியது முழங்கும் சத்தத்தில் நடுங்கி
தடியதால் தாக்குண்ட அரவமாய் நசுங்கி
விடியலில் கதிரவன் காட்சிக்கு ஏங்கி
கொடியது இந்த அடைமழை நன்னாள்.

காரிருள் சூழ் மழை அவனியில் பெய்ய 
ஊரினுள் சாலையில் ஏரியும் தேங்க
தேரதுபோல் மெல்ல வாகனம் ஊர
நாறுது வாழ்விங்கு மாநகர்தனிலே.

சீர்மிகு சென்னையில் மேவிய சாலைகள்
நீர்மிகு நதியாய் ஓடிடும் வேளைகள்
நேர்மிகு மனிதர்கள் இம்மழைக் காலையில்
பார்புகு(ந்து) போதையில் பணிந்தன ரன்றோ.

மும்மாரி பெய்த மாதங்கள் இல்லை
அம்மாரி ஒருநாளில் பெய்வதே தொல்லை
எம்மாரி பெய்தாலும் மக்களின் வாழ்க்கை
அதுமாறிப் போகா என்பதே இயற்கை.

வங்கக்கடல் சீற்றம் கண்டேன் இப்புயலில்
அங்கம் நடுங்கியது அப்பெரும் மழையில்
தங்கம் போல் விடுமுறை நாளது ஒன்று
சிங்கம் போல் சோம்பலில் கழிந்த தின்று.

புயல் அடிக்கும் இந்நாளில் நானும்
கயல் சமைத்து உண்கிறேன் வாரும்
முயல் அதுபோல் விரைந்தோடி
பயலிவன் கவிக்குப் பரிசு பல கோடி.

முன்னைப் பிறவியில் செய்திட்ட நற்பயன்
என்னை அழைத்திங்கு குடிபுக வைத்தது
சென்னை நகர்தனில் அமைந்திட்ட வாழ்வினை 
மொண்ணை யென்றாக்குதே பெய்கிற தொடர் மழை.

புள்ளின் வாய்மொழி கீழ்திசைக் கேட்க
வள்ளென ஞமலியின் போர்க்குரல் முழங்க
கள்ளென போதையாய் வந்ததோர் சேதி
நில் இன்று பணியில்லை விடுமுறை என்றால்.

#சென்னையைப் பத்தி என்னவோ ஒருப் பா.

1. 
சிற்றாறு சுழித் தோடுமந்த சிந்தாதிரியில்
காட்டாற்று வெள்ளமது பாய்கின்ற சைதை
அருவிகளைக் காண அசோக நகராம்
கேணிகள் பல காண் கே.கே.நகராம்
சுனைகள் குளங்கள் ஏரிகள் குட்டைகள்
மூழ்கியே போனது சென்னையின் பேட்டைகள்
நிலவிலே காணும் முழுவட்டக் குழிகள்
நிஜத்திலே பார்க்கலாம் சாலைகள் மீதே 
சிலநாள் மழைக்கே சிங்காரச் சென்னை
Sink ஆகிவிட்டதே அதுதான் உண்மை.

2. 
ஊறிய நெகிழிகள் ஊரெங்கும் மிதக்க
நிலத்தடிக் கழிவுகள் ஊர்வலம் நடத்த
வைகுந்த கைலாய லோகங்கள் அடைந்திட
சாக்கடை மூடிகள் அடைப்பது இல்லை 
சாலையில் தேங்கிய மழைநீர் அலைகள்
கழிவுநீர் கலந்து புரியுது கொலைகள்
பசுக்களை வளர்த்து வாழ்ந்த நற்றமிழர் 
கொசுக்களை வளர்த்து வீழ்ந்தன ரிங்கு
தலைநகர் இதுவென பெருமிதம் கொள்ள
எதுவொன்றுமில்லை என்னத்தைச் சொல்ல.

No comments:

Post a Comment