Wednesday 4 November 2015

தீபாவளி நினைவுகள்...

#80களின்_தீபாவளி

விடிஞ்சா தீபாவளின்னா அதுக்கு மொத நாள் ராத்திரி 10 மணிக்கு சுல்தான் டெய்லர் நியூஸ் பேப்பரில் சுற்றித்தரும் ஒரே ஒரு செட் புத்தாடை...

இரவு வீடு திரும்பி இருக்கும் அப்பா வாங்கிட்டு வந்த பட்டாசு பொட்டலம்... (தம்பி நாளைக்குத் தான் வெடிக்கணும்..)

அம்மா வீட்டில் சுட்ட அதிரசம் முறுக்கு ரவா லட்டு..

விடிஞ்சதும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கண்களில் வழிந்து எரிய கொதிக்கும் வெந்நீர் இருக்கும் விறகடுப்பின் புகையும் எரிச்சலை அதிகப் படுத்தும் சுகமான வலி..

கண்கள் சிவக்க குளித்துவிட்டு சாமி கும்பிட்டு அப்பா அம்மா காலில் விழுந்து ஓரத்தில் மஞ்சள் தடவப்பட்ட புத்தாடையை வாங்கி ஆசையுடன் அணிந்த சுகம்..

இட்டிலியோ தோசையோ சூடாக அம்மா கையால் இனிப்புடன் சாப்பிடும் ருசி..

பங்காளி என்னும் வார்த்தை பட்டாசு பிரிக்கும் போது பொருந்தும் சரி சமமாக தம்பி தங்கைகளோடு அதை பிரித்து எடுத்து வெடித்த குதூகலம்..

தெரு முழுவதும் நண்பர்களோடு கொட்டாங்குச்சிக்கு கீழே குருவி வெடி சுவர் இடுக்கில் ஊசி வெடி என வெடி வெடித்த உற்சாகம்..

ரேடியோவில் பாட்டு.. மதியம் கறிச்சாப்பாடு மேட்னி ஷோ சங்கத்திலோ, அலங்காரிலோ, கீதாலயாவிலோ எதாவது புதுப்படம்..

மாலை மீண்டும் பலகாரம் இரவு வெடிக்கும் வண்ண வெடிகள்.. அதுக்குள்ள தீபாவளி முடிஞ்சுடுச்சு என்ற அங்கலாய்ப்புடன் இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது..

அடடா நினைவுகளில் இருக்கும் அந்த பால்ய தீபாவளி என்றும் இனிக்கும்.. உங்களுக்கு....

No comments:

Post a Comment