Friday 13 November 2015

காதல் வேட்டை பார்ட் - 2

#வேட்டைக்காரன்

பார்ட் - 2

துப்பாக்கியின் டுமீல் ஓசைக்கு எதிராக ஐயோ என குரல் ஒலித்ததும் நான் பதறி விட்டேன்... வேகமாக ஓடிப்போய் பார்த்தால் அந்த புதருக்கு எதிர் புறம் கொஞ்சம் பள்ளமான ஏரியா அங்கு முள் வெட்டிக் கொண்டிருந்த  என் எதாவது ஒரு மாமாக்களில் ஒருவரான பால் அல்லது வேல் பாண்டி...! கீழே விழுந்து கிடந்தார்.. ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.

நான் அவர் அருகில் சென்ற போது குபீரென எழுந்து உட்கார்ந்து செந்தமிழில் உயர்வான வார்த்தை ஒன்றில் எந்த ------- மவண்டா சுட்டது...ங்......  என ஆரம்பிக்க... பதறி மாமா நான் தான் சுட்டேன் என்றேன்.. நடந்தது இது தான்... நான் குறிபார்க்கும் அழகை நான்ஸி என் பின்னால் வந்து பார்ப்பதற்காக வந்து என் மேல் சாய...

நான் சற்று தடுமாறி சுட்டு விட செம்போத்தின் இறக்கையை உரசி பாண்டி மாமா காதில் பதிந்திருந்தது பெல்லட்.. புதரில் செம்போத்தின் ஐந்தாறு சிவப்பு சிறகுகள் உதிர்ந்து கிடந்தன பாதி செம்போத்து மீது பட்டதால் லேசாகத் தான் காதில் அடி நேரடியாக பட்டிருந்தால் காதில் ஒரு சிறு துண்டு காணாமல் போயிருக்கும்.. என்னை மேலும் கீழும் பார்த்தார்..

நீயாடா மாப்ள சூதானமா பார்த்து செய்யறதில்ல.. என்ற படி அந்த பெல்லட்டை பிய்த்தார்.. குபுக் என மிளகு அளவுக்கு ரத்தப் பந்தொன்று அவர் காதில் துளிர்த்தது.. அவர் அண்ட்ராயரில் கைவிட்டு சுண்ணாம்பு டப்பாவில் விக்ஸ் போல கொஞ்சம் சுண்ணாம்பு வழித்து அந்த ரத்தத்தை அடைத்தார்.. பூமார்க் பீடி ஒன்றை பற்ற வைத்து கோளாறா இரு மாப்ள..

என சொல்லிவிட்டு முள் வெட்ட ஆரம்பித்தார்.. இத்தனை களேபரத்தில் நான்ஸி வீட்டில் அத்தனைக் கதவையும் மூடிவிட்டு உள்ளே பதுங்கி விட்டாள். நான் திரும்பி வந்து கதவை தட்டியபோதும் திறக்கவில்லை.. ஒரு வழியாக கதவிடுக்கில் ஒண்ணும் பிரச்சனை இல்லை நான் தான் என கத்திய பிறகும் அரைமணி நேரத்திற்கு பின்பே கதவு திறந்தாள்.

யாருக்கும் அடிபடலையே..அது யாரு என நடுங்கியபடி கேட்டாள் பதில் சொன்னேன்.. அப்ப அந்த செம்போத்து என்றாள் ஏக்கத்துடன்... கொஞ்சம் பொறு மீண்டும் வரும் அப்போ சுட்டுத்தர்றேன் என்றேன்..ஆனால் அதன் பின் 3மணிநேரம் காத்திருந்தும் செம்போத்து தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்து சப்ஸ்க்ரைபர் இஸ் பிசி தயவு செய்து காத்திருக்கவும்..

என சொல்லாமல் சொல்லிற்று.. கடைசியில் இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என வராமல் போக நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.. கிளம்பும் போது என்னைப் பார்த்து நான்ஸி நீயெல்லாம்.. என்னும் அர்த்தத்தில் சிரித்த ஒரு ஏளனப் புன்னகை இதுவரை யாரும் என்னை இந்தளவிற்கு கீழ்தரமாக சித்தரித்திருக்க முடியாது.. என் வாழ்நாளிலும் மறக்க முடியாதது.

அதன்பின் வெள்ளக்கல்லில் நாரை கொக்கு சுடுவது... கவுதாரி காட்டுக் கோழி என எங்கள் வேட்டை உணவு சார்ந்ததாகவே இருந்தது.. சமையலும் கற்றுக் கொண்டேன் சுட்ட பறவைகளை சிறகு நீக்கி மசாலா தடவி நான் சமைத்தது அனைவருக்கும் பிடித்து போக வேட்டைக் குழுவின் ஆஸ்தான செஃப் ஆனேன் என் சமையலுக்கு மயங்கி துப்பாக்கி சுடவும் கற்றுத்தந்தனர்.

குறி பார்த்து சொல்லி அடிக்கும் கலை 2 மாதத்தில் கைவரப்பெற்றது ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லை அளவுக்கு வந்தபின்பு... மீண்டும் ஒரு ஞாயிறு துப்பாக்கியுடன் நான்ஸி வீட்டுக்கு ஓடினேன்... வீடே கல கலவென இருந்தது.. அவர்கள் உறவினர்கள் வந்திருந்தனர்.. நான்சியின் அம்மா வாப்பா என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

பொடிசுகளின் ரகளை பெண்களின் பேச்சு என இரைச்சலாக இருந்தது.. என் ஏஞ்சல் மட்டும் காணவில்லை.. சூடாக டீ வந்தது சாப்பிட்டேன் பிறகு 15 நிமிடம் ஆயிற்று.. மெல்ல ஆன்ட்டி நான்சி என்றேன்... ஓ அவளா வீட்டிற்கு பின்னால இருக்கா போயி பாருப்பா என்றார்கள்..அது அன்று அந்த செம்போத்து அடித்த அதே இடம்.. ஒடிப்போனேன் டுமீல் என சத்தம்..!

துப்பாக்கி என்னிடம் இருக்க எப்படி.. வியப்போடு அங்கு செல்ல கை தட்டி குதித்துக் கொண்டிருந்தாள் நான்ஸி.. அருகே... யாரவன் நல்ல ரகுவரன் உயரத்தில் சுருண்ட முடி டிசர்ட் மீறி தெரிந்த எக்சைர்ஸ் புஜங்கள் ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ் உடன் வாயில் பபுள்கம் அலட்சியப் பார்வை.. அவன் தோளில் ஒரு ஏர் கன் லேட்டஸ்ட் மாடல்.. நான்சி அவனிடம் கை குலுக்கினாள்..

அவள் கண்கள் பார்த்த இடத்தைப் பார்த்தேன்... கீழே... அன்று என்னிடம் நாட் ரீச்சபளுக்கு போன செம்போத்து.. தன் லைஃப்டைமை இழந்து கிடந்தது... நான் மெல்ல நான்ஸி என்றேன்.. திரும்பினாள்.. அவன் அந்த செத்த செம்போத்தை பார்த்த அதே பார்வையில் என்னையும் பார்த்தான்.. ஹே வெங்கி வா..வா இது என் அங்கிள் பையன் எட்வர்டு.. என்றாள்.

ஹாய் என என் கைகளை பிசைந்து அவன் வலிமையைக் காட்டி ஓடிடு என்றான் கண்களில்.. சரி நான் அப்புறம் வர்றேன்னு கிளம்பினேன்.. மெல்ல வீடு வந்து நான்சி அம்மாவிடம் ஏன்ஆன்ட்டி இந்த எட்வர்டு உங்க அக்கா மகனா என்றேன் அங்கிள் பெரியப்பாவாக இருக்கும் என நம்பிக்கையில்.. இல்லப்பா என் அண்ணன் மகன் என்றதும்.. டுமீல்.. என் இதயத்தில்...

அப்புறம் வேட்டைக்கு போவதே வெறுத்து போனது".நான்சியை அந்தப் பையன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறான் என்று ஊரே பேசிக்கொண்டார்கள்.. என் தந்தையார் அப்போது இறந்துவிட பொறுப்பான தலைமகனாய் குடும்ப பாரம் 21 வயதில் தோளில் ஏற இதயத்திலிருந்து நான்ஸியை இறக்கி வைத்தேன்.

5 ஆண்டுகளுக்கு முன் நான்ஸியை கொடைக்கானலில் பார்த்தேன்.. அப்படியே இருந்தாள் பக்கத்தில் பழைய நடிகர் சுரேஷ் போல ஒருவர்.. வெங்கி இது என் ஹஸ்பெண்ட் டாக்டர்...சிவானந்தம்..(அப்போ எட்வர்டும் இல்லியா) லவ் மேரேஜ் நான் பல்டாக்டருக்கு படிக்கும் போது லவ் .. மொதல்ல அப்பா அம்மா முடியாதுன்னாங்க ஒருவழியா ஒத்தக்காலில் பிடிவாதமா நின்னு மேரேஜ் ஆச்சு.. ஏங்க நான் சொல்வேனே இவர் தான் அந்த வெங்கடேஷ்.. என அறிமுகப்படுத்த..

ஹாய் என்றார் சிவானந்தம்.. நான் வெங்கடேஷ் ஸார் என்றேன்... தெரியும் ஸார் நீங்க தானே அந்த செம்போத்து சுட்டது என்றார்.. கட கடவென சிரிப்பு பொத்துக்கொண்டு வர கண்ணில் நீர் வர சிரித்தேன்.. டுமீல்.. அதிர்ச்சியுடன் திரும்பினால் அங்கு பலூனை ஒரு 15 வயது சிறுவன் சுட்டுக் கொண்டுருந்தான் என் பையன் ராம் என்றாள் நான்ஸி. 

ராம் உனக்காவது குறி தவறக்கூடாது என்றேன் முணுமுணுப்பாய்.. என்ன என்றாள் நான்ஸி இல்ல இவனுக்கு செம்போத்து சுடத்தெரியுமா என்றேன் அனைவரும் சிரித்தோம்... டுமீல்.... பலூனும் வெடித்து சிரித்தது.

நிறைந்தது...

No comments:

Post a Comment