Thursday, 4 August 2016

📽 திருவிழா கதை வசன ஆடியோ 📢

சேலம் கிச்சிப்பாளையத்தில் குடியிருந்த போது கோவில் திருவிழா நடக்கும் பெரும்பாலும் சந்து மாரியம்மன் கோவில் விழா என்பது சேலம் முழுவதும் பிரசித்தம்.. ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதங்களில் கொண்டாடப்படும் மாவிளக்கு, பணியாரம், பொரிவிளங்கா உருண்டை, பருப்புருண்டை என பல தின்பண்டங்கள் கிடைக்கும்.. அதிலும் தேங்காயை உடைக்காமல் கோல மாவில் உருட்டி அதன் ஓட்டை வழுவழுப்பாக்கி தேங்காய் கண்ணில்

துளையிட்டு வெல்லம் அவல் போன்றவைகளை திணித்து அதில் நீள குச்சி சொருகி அடுப்பில் விறகு எரியுமே அதில் வாட்டி அது நன்கு சுட்டதும்.. ஓட்டை உடைத்து வெந்த தேங்காயை ஊதி ஊதி தின்னும் போது.. "செண்பகப் பாண்டியனே உன் தமிழோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்" என கணீரென சிவாஜி கணேசன் குரல் தெருவில் கட்டப்பட்ட கூம்பு ஸ்பீக்கரில் இருந்து கசிந்து காதில் விழும்.. ஆஹா.. வாய்க்குத் தேங்காயின் சுவையும் காதுக்கு அந்த வசனமும் இனித்துக் கிடக்கும்..

பொதுவாக திருவிழா ஆடியோ கதை வசனம் என்றால் முதலிரண்டு இடங்களில் இருப்பது திருவிளையாடலும் சரஸ்வதி சபதமும் தான் இந்த படத்தில் வரும் வசனங்கள் எல்லாம் எங்களுக்கு தரவான மனப்பாடம். அன்று மட்டும் பள்ளியில் அவை பாடங்களாக இருந்திருந்தால் நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண்கள் வாங்கியிருப்போம்.. பொதுவாக அதிகாலையில் பக்தி படங்கள் கதை வசனமும் மாலை பக்தி படங்கள் அல்லாத வசனமும்...

ஒலிபரப்பாகும்.. அதிலும் ஒவ்வொரு சீன் முடியும் போதும் பியானோவில் வலது புறத்தில் ஆரம்பித்து இடது புறம் வரை கோடு கிழித்தார் போல எல்லா விசைக்கட்டைகளையும் அழுத்தினால் ஒரு சத்தம் வருமே அது போல ஒரு ஒலி ட்ட்ரைய்ங்ங்ங்ங்ங்.. கந்தன் கருணை, திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா, பராசக்தி இப்படி படங்கள் ஒலிகளாகவே எங்கள் செவிகளுக்குள் இன்றும் இருக்கின்றன.

அதிலும் விதி என்று ஒரு படம் மிகப் பெரிய கதை வசன புரட்சியே செய்தது.. அந்தப் படம் வந்த காலத்தில் அக்கம் பக்கம் வீட்டிலுள்ள பெண்கள் எங்களை அழைத்து சவுண்ட் சர்வீஸ் காரரிடம் போய் விதி கதை வசனம் போடச் சொல்லு என்பார்கள்.. ஆடியோ ஆபரேட்டர் அப்போது ஹீரோ அவர் சைட் அடிக்கும் பெண் சொல்லும் போது தான் அதை ஒலிபரப்புவார்.. அதெல்லாம் அந்த வயதில் எங்களுக்கு புரியாது கரண்ட் கட் ஆவது தான் அதன் இடைவேளை.

சினிமா ஒன்றே அன்றைய மிகப் பெரிய பொழுதுபோக்கு.. சில படங்கள் 200 நாட்கள் கூட ஓடும்.. இந்த கதை வசனங்கள் ரெகார்டு பிளேயரில் பிளேயரின் சுற்றும் இரைச்சலே தம்புரா ஸ்ருதி போல் பின்னணியில் ஒலிக்க "நாரதா நீ வந்த வேலை முடிந்ததா" சக்தி இல்லையேல் சிவம் இல்லை" முருகா ஞானப்பழமும் நீ உனக்கொரு பழம் தேவையா" அப்பாவின் திருவிளையாடல்களை எல்லாம் பக்தர்களோடு நிறுத்திக் கொள்ளக்கூடாதா" விறகு வாங்கலியோ விறகு தாயே" 

இதெல்லாம் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இந்த கதை வசனம் போடுவதெல்லாம் தற்போது வழக்கொழிந்து விட்டது.. போன வாரம் பழங்காநத்தத்தில் தெருவில் திருவிழா கொண்டாடினார்கள் ஆடியோவில் காசு பணம் துட்டு மணி..பாடல் கசிய எவரும் அதை பொருட்படுத்தவில்லை அநேகமாக கோயிலுக்கு கொடை கேட்க போட்ட பாட்டாக இருக்கும்.. நினைவில் நினைத்தால் இன்றும் காதில் கேட்குது அந்தக் கால சத்தம்..

"ட்ட்ரைய்ங்ங்ங்ங்ங்"

No comments:

Post a Comment