Wednesday, 3 August 2016

12🐭🎊🎈டிஸ்னி என்ற மாயலோகம்🎉🐰12

டிஸ்னிவேர்ல்டின் எலக்ட்ரிக் பரேடு உலகப் புகழ் பெற்றது.. வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு தான் இதன் சிறப்பம்சம். கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட டிஸ்னியின் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டே ஒலிக்கும் பின்னணி இசைக்கு ஏற்றவாறு ஆடி அசைந்தபடி வரும் அழகு இருக்கிறதே அடடா அதைக் காண டிரில்லியன் கண்கள் வேண்டும். முதலில் காலையில்..

பார்த்த அதே அலபாமா கிறிஸ்டியன் பள்ளி மாணவர்கள் பேண்ட் இசைத்து நடந்து வர பின்னால் ஒவ்வொரு வாகனமாக ஊர்வலம் வந்தன. ஒவ்வொரு வண்டியும் ஹாலிவுட் தரத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. அதன் முன்னால் ஆடி வரும் நடனக் கலைஞர்களின் உடையிலும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன.. முதல் வண்டியில் மிக்கிமவுஸ் வர அதனை தொடர்ந்து ஆமை, நத்தை, காளான், என அதே உருவில் வண்டிகள்..

அதன் பின் பெரிய மணிக்கூண்டு, டைனாசர், சாரட் வண்டி ஆஹா ஒவ்வொன்றும் அற்புதம்.. சரியாக முப்பது நிமிடங்கள் பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தி வேறொரு வண்ண உலகிற்கு அழைத்துச் சென்றது இந்த எலக்ட்ரிகல் பரேடு.. அதற்குள் முடிந்துவிட்டதே என எல்லார் முகங்களிலும் ஏக்கம் தெரிந்தது.. அடுத்து நாங்கள் போனது மேஜிக் வேர்ல்டின் முகப்பு கோபுரத்துக்கு.. அதையே திரையாக்கி ஒரு லேசர் ஷோ.!

அந்த கோபுரத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஒளிவீச ப்ரிஸ்மா எஃபெக்டில் வண்ணத்தில் மிளிர்ந்தது அக்கோபுரம் அதிலேயே விடியோவும் திரையிடப்பட்டு டிஸ்னியின் புகழ் பெற்ற கார்ட்டூன்கள் வந்தன, ஆடின, பாடின, பேசின, மக்கள் எல்லாம் பரவச நிலை அடைந்திருந்தார்கள்.. இந்த ஷோவும் ஒரு 30நிமிடம் முடிந்தபின்பு வானில் வாணவேடிக்கை ஆரம்பித்தது வண்ணக் குவியலாய் வானெங்கும் வண்ணங்கள் சிதறி ஆர்ப்பரித்தன.

காலை 10 மணிக்கு உள்ளே நுழைந்தது இப்போது இரவு 10 மணி ஆகியிருந்தது.. எல்லார் முகத்திலும் களைப்பை மீறி ஒரு குதூகலம் தொற்றி இருந்தது.. ஒவ்வொரு அரங்கமும், ஒவ்வொரு விளையாட்டும், ஒவ்வொரு அணிவகுப்பும் ஃபாஸ்ட் ஃபார்வேர்டாக என் மனக்கண்ணில் வந்து போனது.. ஏற்கனவே கூறியபடி இங்கு போக வாய்ப்பு கிடைப்பது ஒரு வரம்.. அந்த வரம் நாங்கள் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் எங்களுக்கு கிட்டியது.

அலை அலையாக மக்கள் வாசல் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்.. சில குழந்தைகள் தூங்கிவிட்டன. மதுரை சித்திரை திருவிழாவில் கிராமத்து  ஆண்கள் தங்கள் குழந்தையை தூக்கி தோளில் வைத்துக் கொள்வார்கள் தனக்கு சாமி தரிசனம் கிடைக்காவிட்டாலும் தன் குழந்தைக்கு அது கிடைக்கட்டும் என்பதே இதன் பின்னணி.. வல்லரசு அமெரிக்க ஆண்களும் இங்கே தங்கள் தோளில் குழந்தையை வைத்துக் கொண்டு இருந்தனர்.

தான் காணாத காட்சியை தன் பிள்ளை காணட்டும் என்ற உயர்ந்த அன்பின் வெளிப்பாடு ஆண்டிப்பட்டியானாலும் அமெரிக்காவானாலும் ஒன்றே என்பதும் சாதி இனம் மதம் கடல் கடந்தாலும் மனிதன் உள்ளுணர்வு ஒன்றே என்பதும் அன்று எனக்கு விளங்கியது.. தாய்ப்பாசத்திற்கு ஆயிரம் உதாரணம் சொல்ல முடியும் ஆனால் தந்தைப் பாசத்திற்கு இந்த ஒன்றே போதும்.! ஆம்.. இந்த உலகம் முழுவதும் தந்தையர் ஒரே மாதிரி தான்.! இது எனக்கு டிஸ்னியில் கிடைத்த ஞானம்.. பரவசத்தோடு அன்று வீடு திரும்பினோம்.

நிறைந்தது..

No comments:

Post a Comment