Sunday 23 February 2014

ஸ்வாமிஜி அருளுரைகள்..!

குருவே தங்களைப் பற்றி ஒரு கேள்வி..!

மகனே எதுவானாலும் கேள் சொல்கிறேன்..!

மகிழ்ச்சி, துக்கம் எது வந்தாலும் ஒரே மாதிரி எப்படி இருக்கிறீர்கள்.?

குழந்தாய் நான் துறவி அல்லவா எனக்கு இரண்டும் ஒன்றே..!

இல்லை இதை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்..? உங்கள் குரு யார்..?

மகனே எனது குரு நாதர் கழுதை தான்...!

ஸ்வாமி!!! ஒரு கழுதை உங்கள் குருவா!! எப்படி?.?

தினமும் அதிகாலை அழுக்குதுணிகளை சுமந்து கொண்டு அது ஆற்றங்கரைக்கு
வருகிறது மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து கொண்டு திரும்புகிறது..!

சரி கழுதை சுமக்கிறது..! இதில் என்ன குருஜி பாடம் இருக்கிறது.?

மகனே.. அது அழுக்கு துணிகளை சுமக்கயில் வருந்துவதும் இல்லை... தூய
துணிகளை சுமக்கயில் மகிழ்வதும் இல்லை.. இதைத்தான் அதனிடம் கற்றேன்..
இப்போது புரிகிறதா..!

இன்ப துன்பத்தை சமமாக கருதவே கடவுள் மனிதனோடு விலங்குகளையும்
படைத்தான்.. அவை மனிதனுக்கு பல நேரங்களில் குருவாக உள்ளது..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே அசரீரி என்றால் என்ன?

குழந்தாய் அசரீரி என்பது தேவக்குரல்..!

அதனால் என்ன பயன் குருஜி..?

குழந்தாய் அசரீரி நாம் தவறு செய்கையில் எச்சரிக்கும்..!

அப்படி என்றால் அது மனசாட்சியா ஸ்வாமி..?

கிட்டத்தட்ட அப்படித்தான் ஆனால் இது வெளியிலிருக்கும்..!

இந்த அசரீரி யாருக்கெல்லாம் கேட்கும்..?

தர்ம சிந்தனைகளும் அறத்தோடும் வாழ்பவர்களுக்கு கேட்கும்..!

அப்படியா ஸ்வாமி ஏன் இந்த காலத்தில் அது ஒலிப்பதில்லை..?

யார் சொன்னது அப்படி இப்போதும் அது வேறு வடிவில் உள்ளதே..!

அப்படியா..! இதுவும் நல்லவர்க்கு தான் கேட்குமா குருஜி..?

இல்லை... இப்போதுள்ள அசரீரி எல்லா மனிதர்க்கும் கேட்கும் நவீன அசரீரி..!

அப்படியா ஸ்வாமி அது என்ன..?

"எங்க இருக்கிங்க" என்று மனைவி கணவனுக்கு அனுப்பும் SMS தான்
இந்த காலத்து அசரீரி..! .

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே மனிதனுக்கு எது தேவை எது தேவையில்லை?

குழந்தாய் இரண்டிற்கும் ஒரே பதில் "பணம்"

குருஜி! எப்படி இரண்டுக்கும் ஒரே பதில்..?

மகனே..!  பணம் சம்பாதிப்பது எதற்கு?

வசதியாக வாழ வாழ்வை அனுபவிக்க குருஜி..!

சரி அப்படி என்றால் அந்த பணத்தால் நிம்மதியை வாங்க முடியுமா..!

ஸ்வாமி...! அது..அது..

குழந்தாய்... வாழ்க்கைக்கு பணம் தேவை தான்... ஆனால் அது மட்டுமே 
மனிதனின் எல்லா தேவையையும் பூர்த்தி செய்யாது... பணம் திறக்காத 
பல கதவுகளை உன் குணம் திறக்கும்.. அங்கு பணம் தேவையில்லை..!

நற்குணங்களுடன் நல்ல வழியில் சம்பாதிக்கும் பணமும், பிறர்க்குதவும்
மனமும் உன்னிடம் இருந்தால் உன் வாழ்க்கையில் பணம் ஒரு பிரதானமில்லை 
என்பதை உணர்வாய்... புரிகிறதா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..



குருவே சில ஆன்மீகவாதிகள் அரசியல் பேசுகிறார்களே இது சரியா?

குழந்தாய் ஆன்மீகவாதிகள் அக்காலத்தில் ராஜகுருவாக இருந்துள்ளார்கள்
அவர்கள் சொற்படி தான் ஆட்சியே நடக்குமாம்..!

குருஜி.. அரசாட்சி சரி.! இன்று அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவது சரியா?

மகனே அதுதான் பட்டுப் பூச்சிக்கும் சிலந்தி பூச்சிக்கும் உள்ள வித்யாசம்..!

குருஜி தங்கள் பதில் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை சற்று விளக்குங்கள்..!

குழந்தாய்!சிலந்திப்பூச்சியும் நூற்கிறது பட்டுப்பூச்சியும் நூற்கிறது...பட்டுப்பூச்சி
நூற்றதை நாம் விரும்பி அதை ஆடைகளாக ஏற்றுக் கொள்கிறோம்.!

சிலந்தி நூற்றதை ஒட்டடையாக கருதி நீக்கிவிடுகிறோம்..மேலும் பட்டுப்பூச்சி 
தன்னுயிர் தந்து நூற்பது பொதுநலம்! சிலந்தி பிற உயிர் பிடிக்க நூற்பது சுயநலம்.!

மக்களின் பொது நலனில் அக்கறை கொண்டு ஆள்வோர்க்கு நல்ல ஆலோசனை 
சொல்பவரை மக்கள் பட்டுப்பூச்சி போல ஏற்றுக்கொள்வார்கள்..!

தங்கள் சுயநலத்திற்காக துதி பாடும் ஆன்மீகவாதிகளை மக்கள் சிலந்தியின் 
ஒட்டடையாக ஓரம் கட்டி விடுவார்கள்... புரிந்ததா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...! 

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே இவ்வுலகில் எதிரிகளே இன்றி மனிதன் வாழ்வது எப்படி?

குழந்தாய் எதிரி இன்றி வாழ்வா?அதற்கு அவன் இறந்து விடலாம்.!

ஸ்வாமி..! என்ன சொல்கிறிர்கள்??

ஆம் மகனே மனிதனுக்கு எதிரி இன்றி வாழ்வு சிறக்காது..!

எப்படி குருஜி... விளக்குங்கள்..!

வாழ்வில் வெற்றி மட்டுமே இருந்தால் முதலில் கர்வம் வரும் தான் என்ற
அகம்பாவம் வரும் யாரையும் மதிக்காத குணம் தலை தூக்கும்..!அதே 
நேரத்தில் எதிரி இருந்தால் உனக்கு அவன் மேலும் அவனுக்கு உன்
மேலும் கவனம் இருக்கும்.. சிறு தவறு கூட செய்ய மாட்டீர்கள்..!

நீங்கள் வெற்றி பெறுவதை விட மற்றவர் வெற்றி பெறக் கூடாது என்று தான்
நினைப்பீர்கள்.!அவரை வீழ்த்தவேனும் பிறரை மதிப்பீர்கள்.!எதிரி ஜெயித்தால் 
கிடைக்கின்ற தோல்வி உங்களுக்கு பாடங்கள் சொல்லித்தரும்..!தோல்வி
கற்றுத்தந்த பாடங்கள் தான் உலகை வெல்லும்..!

மனிதனுக்கு எதிரி அவசியம் குழந்தாய்..!

இருப்பினும் எதிரிகள் இன்றி வாழ்பவன் நல்ல மனிதனில்லையா குருஜி?

மகனே சிந்தித்து பார் ஒருவனுக்கு எதிரியே இல்லை என்றால்.. அவனுக்கு
எப்படி நண்பர்கள் இருப்பார்கள்?எதிரி இல்லாதவனுக்கு நண்பனும் இல்லை
இது தான் உலக நியதி.. புரிகிறதா..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே மனசாட்சி உறுத்துகிறது என்றால் ஏன் தவறு செய்கிறார்கள்?

குழந்தாய் அது மனதனின் தோல்வி..!

எப்படி குருஜி விளக்குங்கள்..!

மகனே.. நல்லதை செய்யும் போது மனசாட்சி தனியாக வந்து கேள்வி 
கேட்காது..உனக்கும் அதை கேட்கவேண்டிய அவசியமும் வராது உன்
செயல்களோடு அது இணைந்திருக்கும்.. ஆனால்..

கெட்டதை செய்யும் போது மனசாட்சி கேள்வி கேட்கும், எச்சரிக்கும் 
அதற்கு பயந்தால் உன் செயலை கைவிடுவாய்....மீறி அந்தத் தவறைச்
செய்தால் அங்கு உன் மனசாட்சி தோற்றுவிடுகிறது.! 

குருஜி.. இது எப்படி மனிதனின் தோல்வி? தோற்றது மனசாட்சி தானே.!

மகனே மனசாட்சியை மீறுபவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்.! அதன்
சொல் கேளாது தவறிழைத்துவிட்டு சாகும் வரை நிம்மதியின்றி உறுத்தலுடன்
வாழ்வது வெற்றிகரமான வாழ்க்கையா?! இங்கு நான் மனசாட்சியின் தோல்வி 
என்று குறிப்பிட்டது அது உன்னை காப்பாற்ற முடியாது போனதே.!

மனசாட்சியின் எச்சரிக்கையை மீறுபவர்களுக்கு சாகும் வரை உறுத்தலான 
வாழ்வு தான்..! புரிகிறதா குழந்தாய்...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே பதிலில்லா கேள்வி எது?

குழந்தாய் உலகில் எல்லா கேள்விக்கும் பதில் உள்ளது..
அதற்கு நான் ஒரு சிறு கதை சொல்கிறேன்.. கேள்..!

காட்டில் சிங்கமும் நரியும் நண்பர்களாக இருந்தன.. 

நரியின் ஆலோசனைப்படிதான் சிங்கம் வேட்டையாடும்..

சிங்கம் சாப்பிட்ட பின் மீதி நரிக்கு..ஆனால் முதலில்..

சிங்கம் தான் சாப்பிட வேண்டும்.. பிறகு தான் நரிக்கு...

ஒரு நாள் சிங்கத்துடன் உறவினராக இருப்போம் வா..

என் ஒரு காட்டெருமையை வஞ்சகமாக பேசி அழைத்து..

வந்தது நரி.. அவ்வெருமையும் சிங்கத்தின் உறவினன் என்ற..

மகிழ்வோடு வர சிங்கம் அதை பாய்ந்து கொன்றது.. சரி நான்..

போய் குளித்துவிட்டு வருகிறன் இந்த இரையை பார்த்துக்கோ..

என நரியிடம் கூறிவிட்டு சென்றது.. சிங்கத்திற்கு முன் இதுவரை..

சாப்பிட்டிராத நரி இம்முறை சிங்கம் வருவதற்குள் எருமையின்..

மூளையை தின்றுவிட்டது.. திரும்பி வந்த சிங்கம் சாப்பிட துவங்கி..

மூளையை காணவில்லை என்பதை கண்டுபிடித்தது.. நரியே..

இந்த எருமையின் மூளை எங்கே என்றது கோபத்துடன்..

நரி பதறாமல் சொன்னது.. நண்பா மூளை மட்டும் இருந்திருந்தா..

இந்த எருமை இங்கு என் பேச்சை நம்பி வந்திருக்குமா..! என்றது.

நீ அறிவாளி என்றால் எந்த சமயத்தில் எவர் கேட்டாலும் எல்லா 
கேள்விகளுக்கும் உன்னிடம் பதில் இருக்கும்

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே கவலை இல்லாத மனிதன் இவ்வுலகிலுண்டா?

குழந்தாய் முதலில் கவலை என்றால் என்ன?

என்ன ஸ்வாமி சிறுவன் என்னிடம் கேட்கிறிர்கள்?

பரவாயில்லை உனக்கு தெரிந்ததை சொல் மகனே..! 

எனக்கு சொல்லத் தெரியவில்லை குருஜி நீங்களே கூறுங்கள்..!

நாம் நினைப்பது நடக்குமா என எதிர்பார்ப்பதே கவலை..!

நினைப்பது நடந்துவிட்டால் கவலை போய்விடுமா ஸ்வாமி?

அதுதான் இல்லை கவலைகள் எண்ணிலடங்காதவை...

அது எப்படி விளக்குங்கள் குருஜி..!

குடும்பம், உறவு, தொழில், நட்பு,சுற்றம், பணம், புகழ், அரசியல், கல்வி, 
வேலை, திருமணம், பந்தம், பாசம்,ஆரோக்கியம், நியாயம், அநியாயம், 
நீதி,நேர்மை,இன்னும் என்னனென்ன உண்டோ அத்தனையிலும் அது
பற்றிய கவலையைப் பார்ப்பதே மனித இயல்பாகிறது.! 

மனிதனுக்கு வாழ்வில் கவலை இல்லை என்பது தான் மிகப் பெரிய 
கவலையாக இருக்கும்.! உழைக்காது எதிர்பார்ப்புகளை வளர்த்துக்
கொள்வது கவலையின் தொடக்கம்..திட்டமிடுபவன் கவலைகளை
விரட்டி அடிக்கிறான்.! சோர்வுற்றமனமே கவலைப்படும்..எப்போதும் 
சுறுசுறுப்பாக இருந்தால் கவலையே வராது..!

பிரச்சனைகள் வரும்போது அதைக் கண்டு சோர்ந்துவிடாமல் அந்த
பிரச்சனைக்குள்ளும் ஒரு வாய்ப்பு ஒளிந்திருக்கிறதா எனக் கண்டு...
அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்..!
அவன் தான் கவலைஇல்லாத மனிதன்...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே புகழும் ஒரு போதையாமே?

ஆமாம் குழந்தாய்..அதில் சந்தேகமென்ன!

பிறகு ஏன் அதை எல்லோரும் விரும்புகின்றனர்?

புகழ் ஒரு சிற்றின்பம்.! மனிதர்கள் எப்போதும் சிற்றின்ப பிரியர்கள் அது தான்..!

புகழில் மயங்காது இருப்பது எப்படி ஸ்வாமி?

உன் பெயர் பட்டத்தினாலோ,புகழ்ச்சியாலோ பேசப்படுவதை
எப்போது நீ விரும்புகிறாயோ அன்று தான் நீ அதன் அடிமையாகிறாய்.!

நீ செய்த நல்லவைக்கு நல்லதும், தீயவைக்கு தீயதும் தொடர்ந்து வரும்.!
அதை எந்த புகழும் தடுக்காது..புகழுரை என்பதே பொய்யுரை 

உலகில் தாய் தந்தையரை விட புகழுதலுக்குரியவர் எவருமில்லை..! இது
மட்டும் நினைவிலிருந்தால் பெயர்,புகழ்,பட்டம் மனிதனுக்கு தேவையே இல்லை..!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!

என் ஞானக்கண்ணும் இன்று தான் திறந்தது துறவிக்கு எதற்கு பட்டங்கள்
என்ற ஞானோதயம் வந்ததால் பட்டங்கள் அனைத்தும் துறந்து விட்டேன்... 
இனி இதுவே என் பெயர்.. (ஜென் என்பது பட்டமல்ல... நிலை)

அருளுரை: 

ஜென் வெங்கடேஷானந்தா..


குருவே பெண்கள் மட்டும் எப்படி எதிலுமே திருப்தி அடைவதில்லை?

குழந்தாய் இந்த தவறான தகவலை உனக்கு சொன்னது யார்?

குருஜி நம் ஆசிரமத்திற்கு வரும் கணவர்கள் தான் சொன்னார்கள்..!

தவறுகளை அவர்கள் மீது வைத்துக் கொண்டு பெண்களை குறை சொன்னார்களா?

புரியவில்லை ஸ்வாமி..! இச் சிறுவனுக்கு அதை விளக்குங்கள்..!

குழந்தாய் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதே இல்லறம்.! அது நல்லறமாக
ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும்..உங்களது நேசிப்பு பரஸ்பரம் இருவரது 
எண்ணமும் ஒன்று போல் இருப்பது.. அப்படி இல்லாவிட்டால் அதற்கேற்றபடி
தம்மை மாற்றிக் கொள்வது அதாவது விட்டுக் கொடுப்பது..!அப்படிச் செய்யாது போனால்..

பெண்களுக்கு அது ஒரு வித தனிமை மனப்பான்மையை உண்டாக்கும் கணவனின் கவனம் தன் மீது திரும்ப எதிலும் திருப்தி இல்லாதது போல் அவர்களும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்..அவர்கள் அன்புக்கு ஏங்குபவர்கள் விட்டுக் கொடுத்து பாருங்கள்.. அவர்கள் நேசிப்பின் ஆழம் அனைவருக்கும் புரியும்..! சரியான புரிதலே மனைவியின் திருப்தி என்ன என எல்லா கணவர்களும் அறிந்து கொள்வர்..!

20 பவுன் நகை வாங்கித் தந்தால் வருகிற சந்தோஷத்தை விட..அன்போடு வாங்கித்தரும் 20 ரூபாய் மல்லிகைப்பூ போதும் பெண்களின் திருப்திக்கு...!

ஆஹா..ஆஹா... குருவே சரண்டர்...!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே போதும் என்ற மனம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

குழந்தாய் அதற்கு முதலில் நீ ஆசைகளை துறக்க வேண்டும்..!

அதைத்தவிர வேறு வழியில்லையா ஸ்வாமி?

ஏன் இல்லை ஆசைப்பட்டாலும் அதை கட்டுப்படுத்து...!

அதுதான் முடியவில்லையே ஸ்வாமி...!

எப்போதும் உனக்கு கீழ் உள்ளவரை நினைத்துப்பார் சரியாகும்..!

ஆக மனிதன் போதும் என்று சொல்வதே இல்லை.. சரியா குருவே?

தவறு மகனே..! எல்லா மனிதனும் போதும் என்று சொல்வார்கள்
அவர்கள்வயிறு நிரம்பியவுடன்...!

ஆஹா..ஆஹா குருவே சரண்டர்...!

வயிறு நிரம்பியதைப் போல நல்லெண்ணங்களால் மனதும் நிறைந்திருந்தால் போதும் என்ற குணம் அனைவருக்கும் கிட்டும்..இருக்கும்வரை இயன்ற அளவு இல்லாதவருக்கு உதவுங்கள்..
போதும் என்ற மனம் கிடைக்கும்...!

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே மறதி என்பது குணமா? நோயா?

இரண்டுமல்ல குழந்தாய்.! மறதி என்பது மருந்து..!

மறதி என்பது மருந்தா?எப்படி குருவே?

மகனே..! ஆசை, காதல், துன்பம் இவையெல்லாம் 
இல்லாத மனித வாழ்வு உண்டா நீ சொல்..!

இவையெல்லாம் கட்டாயம் இருக்கும் ஸ்வாமி..!

உனக்கு ஏற்பட்ட இன்பம் பற்றி கவலையில்லை ஆனால்
துன்பத்தை மறக்க வேண்டாமா? ஆக மறதி சிறந்த மருந்தே..!

ஆஹா..குருவே சரண்டர்...!

கால ஓட்டத்தில் மறதி தான் மிகப் பெரிய மருந்து... மனிதர்களாகிய நாமும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்து அதை உலகிற்கு உணர்த்துகிறோம்..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே ஏப்ரல் 1 மட்டும் தான் முட்டாள்கள் தினமா?

குழந்தாய் இவ்வுலகில் எல்லா தினமுமே முட்டாள்கள் தினம் தான்..!

எல்லா தினங்களுமா? எப்படி ஸ்வாமி?

பற்றாக்குறையாக சம்பாதித்து, மனைவி பிள்ளைகள் கேட்டது வாங்கித்தர முடியாமல், கடன் வாங்கி விழி பிதுங்கி, ஏமாற்றுவான் எனத் தெரிந்து ஓட்டு போட்டு,

நிம்மதியான வாழ்வு கிடைத்துவிடும் என்று ஆயுள் முழுவதும் ஏங்கி, தினமும் தூங்கி நாளை விழிப்போம் என நம்பி நகரும் நாட்கள் அனைத்தும் முட்டாள்கள் தினமே...

ஆஹா... குருவே சரண்டர்..!

புத்திசாலி என்பவன் தான் முட்டாளிலில்லை என்று நடிப்பவேனே..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"


குருவே எரிச்சலூட்டுவது என்றால் என்ன?

இனிய காலை வணக்கம்.. 

குருவே எனக்கெதற்கு இப்போது வணக்கம்?

இனிய காலை வணக்கம்...

சரி நானும் வணங்குகிறேன்... என் கேள்விக்கு பதில்?

இனிய காலை வணக்கம்...

ஸ்வாமி என்ன ஆயிற்று உங்களுக்கு?

இனிய காலை வணக்கம்...

என்னை ஏதும் சோதிக்கிறீர்களா குருவே?

இனிய காலை வணக்கம்...

ஸ்வாமி என்னை மன்னியுங்கள் தவறாக ஏதும் கேட்டிருந்தால்..!

இனிய காலை வணக்கம்...

நீங்கள் இன்று மன அமைதி இன்றி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..!

இனிய காலை வணக்கம்...

ஐயோ... போதும் ஸ்வாமி என்னால் முடியவில்லை...

இது தான் மகனே எரிச்சலூட்டுவது.....! புரிந்ததா?


எல்லா பதிவிலும் வீட்டில் நோட்டீஸ் போடுவது போல காலை வணக்கம் போடும் காலை வணக்க டிஸ்ட்ரிப்யூட்டர்களே...காலை வணக்கம் என்று ஒருவர் பதிவு போட்டிருந்தால் அங்கு போய் காலை வணக்கம் சொல்வதில் தப்பில்லை..! 

எல்லா பதிவிலும் நீங்கள் போடும் காலை வணக்கம் மேற்க்கண்ட உரையாடல் போலத்தான் எரிச்சல் தரும்.! ஒரு பதிவிற்கு அது சம்பந்தமாக ஒரு பதில் அளித்து அதோடு கூட உங்கள் காலை வணக்கத்தை சேர்க்கலாம்..! அது நீங்கள் அந்த பதிவிற்கு அளிக்கும் அங்கீகாரம்..!

காலையில் வணங்கியே தீர வேண்டும் எனில்பெற்ற தாய் தந்தையை வணங்குவீர் புண்ணியமாவது கிடைக்கும்..! இங்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்காது..! இதற்கும் காலை வணக்கம் சொல்லி நீங்கள் கடமையாற்றினால் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... திருட்டை ஒழிக்க முடியாது...


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       ஜென் "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே பித்து என்றால் என்ன?

குழந்தாய் அதுவும் ஒரு வகை ஞானமே..!

என்ன.! பித்து ஞானமா? எப்படி ஸ்வாமி?

பித்து என்பது ஆசையையும் குறிக்கும் புத்தி பேதலிப்பதையும் குறிக்கும்..!

ஆம் குருவே அது தெரியும்..! அது எப்படி ஞானமாகும்?

ஒன்றின் மீது பித்தாக இருப்பது ஆசை..! அந்த பொருள் உனக்கு
அளவுக்கு அதிகம் கிடைத்தால் உண்டாகும் சலிப்பே ஞானம்..!

ஆஹா..! அடுத்து ஸ்வாமி?

புத்தி பேதலித்தவர்க்கு மனித ஆசாபாசங்கள் தேவையில்லை.! அவர்கள்
எந்த பற்றும் இல்லாது வாழ்கிறார்கள் ஆகவே அதுவும் ஞானமே...!

ஆஹா...ஆஹா... குருவே சரண்டர்...


ஆசைப் பித்தினால் பேதலித்து பேசுகின்ற அனைவரும் "ஞானதேசிகர்களே..!


குறிப்பு :  (இது அரசியல் உரை அல்ல அருளுரை)


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே ஜென் நிலை என்றால் என்ன?

குழந்தாய் இது நல்ல கேள்வி..! ஃபேஸ்புக்கில் பலர் இது பற்றி ஒன்றும்
தெரியாமல் சல்லியடித்து கொண்டு இருக்கிறார்கள்..!

ஆமாம் ஸ்வாமி அதைப் பார்த்து தான் கேட்டேன்..!

மகனே நீயும் ஜென் தான் நானும் ஜென் தான்..!

நானும் ஜென்னா..?? புரியவில்லையே குருவே..!

செய்யும் செயலை ரசித்து செய்வதே ஜென்னிசம்..அப்படி செய்பவர்கள்
தான் ஜென்கள்..!

ஸ்வாமி..இதற்கு சற்று விரிவாக விளக்கமளியுங்கள்...

ஒருவர் செய்யும் செயல் அது தேநீர் அருந்துவதாக இருந்தாலும்அதை 
ரசித்து பருகுவதே ஜென்நிலை...!

டீக்குடிப்பதில் என்ன குருவே ஜென்நிலை?

அந்த தருணத்தில் அதைத் தவிர வேறு உன்னதம் உலகில் இருக்க முடியாது 
என அனுபவித்து அருந்துவதே ஜென்நிலை..!

சரி..ஸ்வாமி...! நானும் நீயும் ஜென் என்றீர்கள் அது எப்படி?

நீ என்னிடம் கேள்விகளை சளைக்காது கேட்பதால் நீயும் ஜென்..!
அதற்கு சலிக்காமல் பதில் தருவதால் நானும் ஜென்..! புரிந்ததா..!

ஆஹா...ஆஹா குருவே சரண்டர்...


ரசித்து செய்வது ஜென்நிலை என்றால் ரசித்து மனமார பாராட்டுவது தெய்வ நிலை..!
இதைப்படித்து லைக்கிட்ட நீங்கள் தெய்வங்கள்...!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர
        
       "வெங்கடேஷானந்த பார்வதி"



குருவே.! இவ்வுலகில் எளியது எது? வலியது எது?.

குழந்தாய்.! சொல்வதும் செய்வதும் தான் அது.! 

புரியவில்லை குருஜி..?! 

மகனே சொல்லும், செயலும் என்று சொன்னதா புரியவில்லை..?

ஆமாம் குருஜி..சற்று தெளிவாக விளக்கவும்..!

குழந்தாய் பிறருக்கு அறிவுரை சொல்வது எளிது.!அதை சொன்னவரே
அதை செயல் படுத்துவது வலியது இப்போது புரிகிறதா..!

ஆஹா... குருவே சரண்டர்..!

நம்மால் செய்ய முடியாதவற்றை பிறருக்கு அறிவுரையாகக் கூறக்கூடாது..! 

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண சன்மார்க்க சாகர வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே.! நேற்று டிவியில் டெய்லர்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி..!

அப்படியா..! மகனே நன்றாக இருந்ததா?

இருந்தது... நீங்கள் சொல்லுங்கள் குருவே சிறந்த டெய்லர் யார்?

ஒரு டெய்லர் இருக்கிறார் அவரால் எல்லோரையும் திருப்தி படுத்த முடியும்!

அப்படியா ஸ்வாமி...! அவரது சிறப்பென்ன?

யாருக்கு எது சரியென்று பார்வையிலேயே பார்த்து அவரவர்க்கு ஏற்றபடி அளந்து தருபவர்..!

குருவே..! ஒரு வேளை அவர் தருவது பிடிக்கவில்லை என்றால்?

அதற்கு வாய்ப்பே இல்லை.! அவரைக்கூட உனக்கு பிடிக்காமல் போகலாம்
அவர் தருவதை மறுக்க கூடிய அதிகாரம் எவருக்குமில்லை..! 

ஓ அப்படியா..! அந்த டெய்லர் யார் ஸ்வாமி?

அவரா...! அந்த டெய்லரின் பெயர் இறைவன்..!

ஆஹா..! குருவே சரண்டர்...!


வாழ்க்கை எனும் ஆடையை வடிவமைத்து தருபவன் இறைவன்..! உன் தகுதியை உயர்த்த உயர்த்த உனக்கு புகழாடைகளை தைத்து தந்து கொண்டே இருப்பான்.! ஆணவமிருப்பின் அதை கிழித்து கந்தலாக்கியும் விடுவான்..!


அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண வெங்கடேஷானந்த பார்வதி...!

 (லேட்டஸ்ட் பட்டம் அட்டாச் ஆகியுள்ளது)


குருவே..! குருவே...!

குழந்தாய் ஏனிந்த பதட்டம்?

நம் ஆசிரமத்திற்கு ஒரு கூட்டம் வந்திருக்கிறது.!

அதனாலென்ன மகனே அனைவரையும் அன்போடு உபசரி..!

அதெல்லாம் செய்தாகிவிட்டது ஆனால்....

ஆனால்..? என்ன பிரச்சினை குழந்தாய்...

அவர்கள் நாம் என்ன சொன்னாலும் சொன்னதயே சொல்கிறார்கள்..

குழந்தாய் அவர்கள் அனைவரும் முகநூலில் உள்ளவர்களா?

அட..! எப்படி குருவே கண்டு பிடித்தீர்கள்? உங்கள் ஞானக்கண்னிலா?

ஞானக்கண் எதற்கு.?என்ன சொன்னாலும் அவர்கள் சொன்னதயே 
சொல்கிறார்கள் என்ற போதே அவர்கள் முகநூலில் யார் என அறிந்து கொண்டேன்..!

அவர்கள் முகநூலில் யார் ஸ்வாமி?

நீ என்ன கருத்துகள் போட்டாலும் கண்ணும் கருத்துமாக அதற்கு "காலை வணக்கம்" 
கமெண்ட் போடும் கருத்து பெட்டகங்கள் தான் அவர்கள்...

ஆஹா..! ஆஹா...! குருவே சரண்டர்...

பலனை எதிர்பாராது கடமையை செய்வது வேறு... நம் கடமையே யாருக்கும் எந்த பலனும் போய் சேர்ந்து விடக்கூடாது என்பது வேறு...

அருளுரை: 

சுவாமி ஶ்ரீலஶ்ரீ விஜயபூஷண வெங்கடேஷானந்த பார்வதி...!

 (லேட்டஸ்ட் பட்டம் அட்டாச் ஆகியுள்ளது)


குருவே நிலையானது எது? நிலையில்லாதது எது?

மகனே இவ்வுலகில் நிலையில்லாதது தான் நிலையானது.!
நிலையானது தான் நிலையில்லாதது இது தான் நியதி.!

ஒன்றும் விளங்கவில்லையே குருஜி....?

அதாவது அரசியல்வாதிகளுக்கு நாம் போடும் ஓட்டு நிலையானது.!
ஆனால் வரும் அரசாங்கம் நிலையற்றது... புரிகிறதா...?

இல்லை குருஜி சற்று விளக்கவும்..

எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இறக்கும் வரை உன் ஓட்டு நிலையானது..!
ஆனால் 5 வருடமே ஆளும் ஆட்சி நிலையற்றது.. நிலையில்லா அவர்கள் தான் 
நிலையான ஆட்சி தருவதாக சொல்லுகிறார்கள்.. நீயும் நம்புகிறாய் புரிகிறதா? 

ஆஹா குருவே சரண்டர்...!

நிலைத்து நிற்பது நிலை இல்லாததை தேர்ந்தெடுக்கிறது.. 
நம் நிலையை நிலையில்லாமல் ஆட்டி எடுத்து விடுகிறது...!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!


குருவே நான் ஒரு கிரிக்கெட் வீரன்..!

அப்படியா குழந்தாய் உனது மனக்குறை என்ன?

குருவே அடிக்கடி என்னை அணியில் இருந்து தூக்கிவிடுகிறார்கள்..!

ஓ..அதுதான் உன் குறையா?

அதுமட்டுமல்ல குருஜி என்னால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை..!

மகனே வேறு எதாவது?

இல்லை குருஜி நான் நிரந்தரமாக அணியில் இடம் பிடித்து நிறைய 
சதங்கள் அடிக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

நீ குடித்துவிட்டு நடிகைகளோடு பாரில் ஆடுவதை விட்டு கிரவுண்டிலே ஆடு..!
அது தான் தீர்வு இனி நோ ரவுண்ட் ஒன்லி கிரவுண்ட்...!

ஆஹா குருவே சரண்டர்...!

எங்கு ஆட வேண்டுமோ அங்குதான் ஆட வேண்டும் இடம் மாறி ஆடுவது எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிடும்..! ஆடாத ஆட்டம் போட்டவர் ஆடி அடங்கிவிடுவர்...!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே சோதனைகளை தாங்கிக் கொள்வது எப்படி?

குழந்தாய் அவைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.!

புரியவில்லை குருவே..!

அதாவது உனக்கு இன்பம் வந்தால் ஏற்றுக் கொள்வதைப்போல்.!

அது எப்படி ஸ்வாமி இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்பது?

ஆம் மகனே இரண்டையும் ஒன்றாகத்தான் பார்த்தல் வேண்டும்..!

குருவே இரண்டும் ஒன்றென்றால் ஏன் அதை இன்பம் துன்பம் என
வேறு வேறு பெயர்கள் வைக்க வேண்டும்?

சரி உன் மனைவி பெயர் என்ன? 

அவள் பெயர் மங்களம் ஸ்வாமி..! 

அப்படியென்றால் மங்களம் உன் மனைவியா?

என்ன ஸ்வாமி இது இரண்டும் ஒன்று தானே..!

மகனே...! இப்போது புரிகிறதா இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்பது..!

ஆஹா... ஆஹா... குருவே சரண்டர்...!

இன்பமும் துன்பமும் நம்மிடமே இருக்கின்றது அதை அணுகுவதில் தான் சூட்சமம் இருக்கிறது, மனைவியின் அன்பை அவளது கண்டிப்பு என தவறாக நினைப்பது போல்..



அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே ஒருவன் எப்போதும் உண்மை சொல்வது சாத்தியமா?

மகனே சத்தியம் தான் நிலைக்கும் அதை கடைபிடிப்பதில் தவறில்லை.!

யாராவது அதனால் பாதிக்கப்பட்டால் கூடவா?

ஆம் மகனே உன் மனசாட்சி அதை மறைப்பது தவறு என்று சொல்லி விட்டால்
பிறர் பாதிப்பைப் பற்றிக் கவலைப்படக்கூடாது..!

நேற்று கூட என் உள்ளதை உறுத்திய ஒரு உண்மையை சொல்லி விட்டேன்..!

சபாஷ்..! நீ தான் என் சீடன்..! அப்படி யாரிடம் உண்மை கூறினாய்...!

நேற்று நம் ஆசிரமத்துக்கு வந்த வருமான வரி அதிகாரிகளிடம் குருவே..!

நம்மால் மறைக்கப்பட்ட சில உண்மைகள் மற்றவரால் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது..!

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே மகாபாரதத்தில் காந்தாரிக்கு என்ன சிறப்பு?

அவளது கணவன்திருதராஷ்டிரன் கண் பார்வையற்றவன்.!

நான் படித்து இருக்கிறேன் குருவே..! 

தனது கணவன் காணாத எதையும் என் கண்களும் காணக்கூடாது
என்று தன் கண்களை கட்டிக் கொண்ட தியாகத் திருவுருவம் அவள்.!

ஆஹா..! மெய் சிலிர்க்கிறது..! ஏன் குருவே இந்தக் காலத்தில் 
பெண்கள் அப்படி தன் கணவருக்காக காந்தாரி ஆவார்களா?

ஏன் இல்லை எல்லாப் பெண்களும் அப்படி காந்தாரி ஆகிறார்களே..!

குருவே..! இந்தக் கால நவ நாகரீக பெண்களா? எப்படி?

கணவனின் உறவினர்க்கு துன்பம் என்றால் எல்லா பெண்ணுமே காந்தாரி தான்..!! 

ஆஹா... ஆஹா... குருவே சரண்டர்


பிறர் படும் துன்பத்தை கண்டு கொள்ளாது இருப்பதும் பெரும் துன்பத்தை தரும்..!


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி..!



குருவே தாங்கள் வசிக்கும் இவ்விடம் ஏன் ஆசிரமம் என அழைக்கப்படுகிறது.?

துறவிகள் இருக்குமிடம் அப்படித்தான் அழைக்கப்படும் குழந்தாய்.!

சற்று விளக்குங்கள் ஸ்வாமி...!

மகனே இன்று துறவு பூண்டவர்கள் சந்தேகத்திற்கு 
அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும், இல்லையா?

ஆமாம் குருவே மிக்க சரி.!

நமது சீடர்களை ஜாக்கிரதையாக தேர்வு செய்வது,பெண்களிடம் கண்ணியமாக பழகுவது, ஆசிரமத்தின் வரவு செலவுகளை முறை படுத்துவது, அரசியல்வாதிகளை அனுசரித்து போவது, நற்காரியங்களுக்கு நன்கொடையளிப்பது, ஆசிரம புகழ் பரப்புவது, அயல் நாட்டு பக்தர்களை கவர்ந்திழுப்பது,ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை செல்வது,செய்திகளில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக்கொள்வது, தியான வகுப்புகள், யோகநிலை கூட்டங்கள், நடத்துவது அதை பிரபலப்படுத்துவது,அதனை விளம்பரம் செய்வது இதைபோல இன்னும் பல.

ஆ.!, இவ்வளவு சிரமமா..! 

அதுதான் ஆசிரமம்...!!!!!!


"சிரமங்கள் பலப்பல இருந்தாலும் சிரத்தையுடன் நம் பணிகளில் ஈடுபடுவதே தெய்வீகம்"

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!



குருவே என் மனைவியை சந்தேகப்பேய் பிடித்து ஆட்டுகிறது.!

மகனே அது மிக மிக கொடூரமான பேய்..

அந்த பேயை அழிக்க முடியாதா குருவே?

அழிப்பது சுலபமல்ல அதற்கு ஆன்ம பலம் வேண்டும்..!

அதை எவ்வாறு பெறுவது குருவே.!

ஆசை,காமம்,துரோகம் இம்மூன்றையும் ஒழிக்க வேண்டும்.!

அய்யோ இல்லறவாசி என்னால் இது எப்படி குருவே சாத்தியம்..?

சாத்தியமானால் தான் மகனே சாந்தி கிடைக்கும்.

அந்த "சாந்தியால்" தானே ஸ்வாமி என் வீட்டில் இப்பிரச்சனையே..!

மகனே இது ஓயாது உன் மனைவி தான் இதற்கு நீதிபதி போய் வா..!

"பிரச்சனையின் வேர்கள் உனக்குள் இருந்தால் வாழ்க்கையில் வேறு யாராலும் உனக்கு நிம்மதி கிடைக்காது"


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...!


குருவே கவலையை போக்குவது எப்படி?

குழந்தாய் கவலை ஒரு ஆடை போல அதை களைந்து விடலாம்.!

பிறகு ஏன் அனைவரும் அதை அணிந்து கொள்கிறார்கள் குருவே?

குழந்தாய் அணியும் போது அது அவர்களுக்கு தெரிவதில்லை.!

எனக்கு விளங்கும்படி சொல்லுங்கள் குருவே..!

மகனே சந்தோஷமாக திருமணம் செய்து கொள்கிறார்கள் அல்லவா.!?

ஆமாம் குருவே...!!

அதே தான்..! அப்போது அவர்கள் இருவருக்கும் தெரியாது 
அது தான் கவலை என்று..!

ஆஹா..! ஆஹா.... ! குருவே சரண்டர்...

நமது சந்தோஷங்கள் தான் பின்னாளில் கவலைகளாக மாறுகின்றன.! 

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....


குருவே துறவறம் இல்லறம் என்ன ஒற்றுமை?

மகனே..! இரண்டிலும் அறம் இருப்பதே ஒற்றுமை.!

ஓ,,அப்படி என்றால் ஏன் நீங்கள் துறவறம் பூண்டீர்கள்?

மகனே அவ்வறம் உடல் சார்ந்தது இது மனம் சார்ந்தது..!

ஓ நீங்கள் ஆண்-பெண் உறவை சொல்கிறிர்களா?

மகனே உடல் சார்ந்தது என்றால் அது தானா?

பிறகு வேறென்ன இருக்க முடியும்..குருவே?.!.?

நீ படுகின்ற காயங்களும் அடி உதைகளும் உடல் சார்ந்தது தானே.!

ஆஹா...அடி தூள்..! குருவே சரண்டர்..

நீயும் பொய்.. நானும் பொய் காயமே அது மெய்...! இல்லறமே பெருங்காயம்..!

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே புலனடக்கம் கடினமா?

உலகில் கடினம் என்பது எதுவுமில்லை குழந்தாய்.!

அடக்குவது சிரமமாக உள்ளது குருவே..

அப்படியா உனக்கு என்ன பிரச்சனை சொல்.!

என்னால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை நிறுத்த முடியவில்லை..

அப்படியா அவை உன் பார்வையில் படாதபடி பார்த்துக் கொள்.

குருவே பார்க்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் ஞாபகம் வருகிறது

ம்ம்ம்..மனதை நிலைப்படுத்தி ஆசையை விழுங்கிவிடு.!

முயற்சிக்கிறேன் குருவே.. வருகிறேன்.

நில்..ஆசிரம நிர்வாகியிடம் சொல்லி எனக்கு 4 ஐஸ்க்ரீம் கொண்டு வரச்சொல்.!

குருவே என்ன இது!!!!!!!!! எனக்கு அறிவுரை சொல்லிவிட்டு தாங்களே..

நிறுத்து நான் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில் உனக்கு என்ன ஆச்சரியம்! புலனடக்கம் என்பது ஐஸ்க்ரீம் சாப்பிடாமல் இருப்பதல்ல..! 

50 தின்றால் திணறிவிடுவாய் நமக்கு பிடித்ததே ஆனாலும் வயிறு நிரம்பியிருந்தால் மறுப்போம் அல்லவா.. 

அதே தான்.! எனக்கு ஐஸ்க்ரீம் வேண்டாம்.! உனக்கு உணர்த்தவே அப்படிச் சொன்னேன் புரிகிறதா.! 

ஆஹா.! குருவே சரண்டர்...

"உனக்குள் பேரின்பம் நிறைந்து இருந்தால் சிற்றின்பம் உள்ளே வராது"


அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே இல்லறத்தில் இருப்பவருக்கும் பரவச நிலை கிட்டுமா?

ஏன் கிட்டாது மகனே.! கட்டாயம் கிட்டும்.

அது தாம்பத்ய உறவில் அல்லவா கிடைக்கும்..

யார் சொன்னது அப்படி இன்றியும் அந்நிலையை அடையலாம்.!

ஆச்சரியமாக உள்ளதே..! அதெப்படி குருவே?

உன் தாய் வீட்டுக்கு போய் வா என்றதும் மனைவிக்கும்...

அப்படி அவள் கிளம்பிவிட்டால் கணவனுக்கும் ஏற்படும் நிலையே

                           பரவச நிலை...!

"வாழ்க்கை ஒரு நவரசம்....நிம்மதியே பரவசம்"

அருளுரை: 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே நம் பிறவிப்பயன் என்பது என்ன?

குழந்தாய் அது சொல்லியவுடன் புரியாது.

நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

அதற்கான காலம் இன்னும் கனியவில்லை..

எவ்வளவு காலம் அதற்கு காத்திருக்க வேண்டும்..

நீ ஞானம் பெற வேண்டும் அறுதியிட்டு கூற முடியாது

ஞானம் பெற என்ன செய்ய வேண்டும்?

கற்றுக்கொள்ள வேண்டும் இப்படி அவசரப்படக் கூடாது..

மன்னியுங்கள் குருவே இனி நான் உங்கள் சொல் கேட்பேன்.

ஆஹா நான் பிறவிப்பயனடைந்தேன் குழந்தாய்...!


கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் நீ தேடியவை உன்னைத் தேடி வரும்.


அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே மாயை என்பது என்ன?

சீடா .! இல்லாத ஒன்றை இருப்பது போல நினைப்பதே மாயை.

எனக்கு புரியவில்லை குருவே.!

பொய்யான கற்பனையில் வாழ்வது

இப்போதும் விளங்கவில்லை குருவே.!

மாயை ஒரு சுழல் அதில் சிக்கியவர்கள் அதற்குள் தான் உழல்வார்கள்..

மன்னிக்க வேண்டும் குருவே இன்னும் புரியும் படி சொல்லவும்.!

மாயை நம் பொன்னான வேளைகளையும் வேலைகளையும் தின்றுவிடும்.

குருவே என் அறிவுக்கு மாயை என்ன என்பது பிடிபடவே இல்லை

(குரு கண்மூடி யோசித்து) சீடா.! இப்போது விளங்குகிறதா பார்....

மாயை என்பது #ஃபேஸ்புக்...

ஆஹா தீர்ந்தது என் சந்தேகம்... குருவே சரண்டர்..


மாயலோகத்து மனிதர்களுக்கு அவ்வுலகே மாயம் என்ற எண்ணம் மாயமாகிவிடுகிறது.!


அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



குருவே ஆசையை அடக்குவது எப்படி?

நீ எதன் மீது ஆசைப்பட்டாய் சீடா?

நமது ஆசிரமத்திலுள்ள ஒரு மாதாஜி மீது.!

ம்ம் பெண்ணாசை...இயல்பு தானே..

இருப்பினும் அது தவறோ என மனம் குழம்புகிறது

ஓ.. அப்படியா எப்படி அவள் உன்னை கவர்ந்தாள்

அவள் சேலை உடுத்தும் விதம் ஸ்வாமி அதை 
பார்த்ததும் ஆசையை அடக்க இயலவில்லை.

மன்னிக்கவும் சீடனே இனி நீ துறவில் இருக்க முடியாது 
நீ லெளகீக வாழ்விற்கு திரும்பிவிடு..

வேறு வழியில்லையா குருவே?

இல்லை போய்விடு... (சீடன் கிளம்புகிறான்)

குரு (மனதிற்குள்) ஆசிரமத்தின் யூனிஃபார்மை உடனே மாற்ற வேண்டும்...!

பிறர் கெடுவதில் நமது பங்கும் இருக்கிறது..!

அருளுரை: சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி....



நிம்மதி எங்கிருக்கிறது குருவே... குரு பதில் பேசாமல் சீடனை உற்றுப் பார்க்கிறார்...

குருவே நிம்மதி எங்கிருக்கிறது? மீண்டும் குரு மெளனம்....

உங்களைத் தான் குருவே நான் கேட்டது உங்கள் காதில் விழவில்லை...! குரு மெளனம் தொடர்கிறது... 

அடச்சே.! சீடன் கோபமாக வெளியேற குரு அவன் வெளியேறி தொலைவில் போனதை பார்த்துவிட்டு சொன்னார்...

"அப்பாடா போயிட்டான் நிம்மதி"

"நிம்மதி எங்கே என்று நாம் தேடப்போய் பிறர் நிம்மதியை கெடுத்து விடுகிறோம்"

"அருளுரை" - 
சுவாமி வெங்கடேஷானந்த பார்வதி...

No comments:

Post a Comment