தாய்மொழியில் பிழையாய் எழுதுவது என்றும்
பெற்றதாயை உதைப்பது போல்.
பிறமொழியை கற்பது தவறில்லை எப்போதும்
தாய்மொழியில் கற்பது இனிது.
பிறமொழி ஆதிக்கம் எந்நாளும் தேசத்தின்
பண்பாட்டை அழித்து விடும்.
தன்மொழி நேசிக்கா மனிதன் இவ்வுலகில்
கண்விழி அற்றவன் ஆகும்.
நம்மொழி நலமாய் வெகுகாலம் வாழ்ந்திட
தாய்மொழியில் பேசுவ தழகு.
தாய்மொழி என்ற மரத்திற்கு எப்போதும்
இலக்கியமும் இலக்கணமும் வேர்.
பன்மொழி அறிஞனாய் இருந்தாலும் பழித்திடுவார்
தாய்மொழி தெரியா தவனை.
மொழியே தன்னுயிரென்று வாழ்வோர் என்றென்றும்
இழிவாய் போனது இல்லை.
தாய்மொழி என்றும் உயர்ந்தது என்றாலும்
பிறமொழியும் மதிப்பது அழகு.
தாய்மொழியை காத்து வைப்பதே எதிர்கால
தலைமுறைக்குச் செய்யும் சேவை.
டிவிட்டுறள்...!
ஒரு புதிய முயற்சி...!
திருக்குறள் பாணியில் இரு அடியில் நச்சென சொல்ல முயன்று இருக்கிறேன்,விளக்கவுரை தேவையில்லாமலேயே புரியும் வகையில் எழுதிக் கொண்டு வருகிறேன்..குறள் வார்த்தைகள் சில இடங்களில் அப்படியேவும் இன்றைய ஆங்கில வார்த்தைகள் சில இடங்களிலும் பயன் படுத்தி உள்ளேன்..
ஒண்ணே முக்கால் அடி முதல் இரண்டு அடி வரை என்ற கட்டுப்பாடு மிகாமல் குறளின் ஓசை நயத்தில் சொல்ல முயன்று உள்ளேன் குறள் யாப்பிலக்கணம் பல இடங்களில் தவறியிருக்கலாம் அதை கருத்தில் கொள்ளவில்லை இக்கால சந்ததியினருக்கு குறள் போல இருக்கிறது என ஒப்புக் கொண்டால் போதும்.. இப்போதைக்கு ஒரு 500 டிவிட்டுறள் எழுத ஆசை..! பார்க்கலாம்...500 வருகிறதா என்று.. இதற்கு நான் எதிர் பார்ப்பது வழக்கம் போல் உங்கள் ஆதரவு..! டிவிட்டருக்காக எழுதினாலும் முகனூலிலும் பதிவிடுகிறேன்... இன்று முதல் தொடங்குகிறது..
முதல் டிவிட்டுறள்...
குடியினிது புகையினிது என்பர் குடிமக்கள்
வெகுகாலம் வாழா தவர்.
டிவிட்டுறள்....
சீரியல்பேய் பிடித்தாட்டும் மாந்தர் தம்வாழ்வு
சீரழிந்தே சிதறி விடும்.
பிறர்க்கென்று கண்மூடி ஜாமீனேற்பின்; நமக்கென்று
ஜாமீன் நாளை வரும்.
நட்புக்கு கடனளித்து செய்கின்ற உதவி
அன்றே மறத்தல் நலம்.
முதலை வாய்க்குள் சென்றதும் திரும்பிவிடும்
திரும்பாதே கொடுத்த கடன்.
மிஸ்டுகால் தருவது லவ்வரெனில்; விரைந்து
டாப்-அப் செய்யெனப் பொருள்.
ஈ.சி.ஆர் செல்கின்ற காதலெல்லாம்;விரைவில்
ஈசியாய் கழண்டு விடும்.
மனைவி சொல்லே நலமென்பார்;அவர்வாழ்வு
சிறக்குமே சிக்கல் இன்றி.
மெய்யான காதல் மணக்குமே;நெய்யோடு
சேர்ந்த சோற்றைப் போல்.
பல்சரோ ஹோண்டாவோ உனதெனினும்;எந்நாளும்
ஹெல்மெட்டே காக்கும் தலை.
சீட்பெல்ட் அணியாது செல்கின்ற பயணம்
சீட் தருமே எமனுலகிற்கு.
சாலை விதிகளை மதித்திடுவோர் தலைவிதிகள்
என்றும் இன்பத்தால் எழுதப்படும்.
சிக்னலை மதியாதோர் வாகனம் என்றும்
சிக்கலைச் சேர்த்து விடும்.
போதையில் செலுத்திடும் வாகனம்;விரைந்து
சேர்த்திடும் இறைவ னடிக்கு.
கண்கூசும் வாகன விளக்கொளி நம்வாழ்வில்
மண்ணள்ளிப் போட்டு விடும்.
மிதவேகத்தில் செல்லும் பயணம்;என்றென்றும்
தந்திடுமே ஆயுள் பலம்.
எரிபொருள் சிக்கனம் மறப்பின்;எதிர்காலம்
எரிந்தே கருகி விடும்.
முன்சென்று கேட்கும் மன்னிப்பு உன்வாழ்வில்
பின்னின்று உயர்த்தி விடும்.
பண்பும் பணிவும் உடனிருந்தால்;எப்போதும்
பறித்திடலாம் வெற்றிக் கனி.
ஆத்திரத்தில் எடுக்கும் முடிவானது; தந்திடுமே
ஆறாத புண்ணின் வலி.
கிணற்றில் விழுந்த கல்லைப்போல் மூழ்கடிக்கும்
சினத்தில் உதிர்த்த சொல்.
ஐந்தறிவு என்பது யாதெனில் ; ஒருவன்
சினத்தோடு செய்யும் செயல்.
கோபம் அடக்கக் கற்பவர் தம்வாழ்வில்
சோகம் விலகிடும் சிறப்பு.
முதுகுக்கு பின்நின்று பேசுதல் எந்நாளும்
கொலையினும் கொடிய செயல்.
பெருங் கள்வனையும் நம்பலாம்; நம்பாதே
துரோகம் செய்த நட்பை.
பிறர்க்குதவும் நற்குணமும் பெருஞ்செல்வம்;அச்செல்வம்
மானிடர்க்கு எல்லாம் தேவை.
பொருத்தம் இல்லா வார்த்தை உதிர்ப்பின்
வருத்தம் வாசல் வரும்.
பொறாமைக் கண்ணால் பார்த்தால் தெரியாது
நல்லவை நான்கும் உனக்கு.
உள்ளத்துள்ளே விஷம் வைத்து;நாவினிக்க
பேசுவார் தம்நட்பை விலக்கு.
அலுவலில் உறங்கும் ஒருவன் எந்நாளும்
அடைவதில்லை வெற்றியின் படி.
சோம்பலில் தள்ளிவைத்த பணிகள் எப்போதும்
சோகத்தை அள்ளித் தரும்.
வட்டமிட்டு வாழ்வது வாழ்வல்ல;இவ்வுலகில்
திட்டமிட்டு வாழ்வதே சிறப்பு.
அஞ்சாதவர்க்கு சாவென்பது ஓர்முறை;அஞ்சுவோர்
வாழ்வில் தினந்தினம் சாவு.
சிரித்த முகத்தோடு பழகும் குணமுடையோர்
சிறப்பாய் வாழ்வ துறுதி.
முகத்தில் புன்னகையும் அகத்தில் நற்குணமும்
நிகரில்லா செல்வம் உனக்கு.
பெரியவர்க்கு தந்திடும் மதிப்பு எந்நாளும்
பெருமையைச் சேர்க்கும் உனக்கு.
மூத்தோர் சொல்கேட்டு வாழ்கின்ற வாழ்க்கை
முன்னேற்றம் தருமே நமக்கு.
விட்டுக் கொடுத்து வாழ்கின்ற தெப்போதும்
கெட்டழிந்து போவ தில்லை.
பிறர்பற்றி பழிபேசும் குணமிருந்தால்;வெறுத்திடுவாள்
பெற்றத் தாயும் உனை.
ஏழையின் பசிதீர்க்க பேசுகின்ற பொய்யுனக்கு
ஏற்றத்தை தந்து விடும்.
பிறர்க்குதவ பணம் தேவையில்லை:அதற்கான
மனமிருந்தால் அதுவே சிறப்பு.
நண்பனின் துன்பத்திற்கு செய்யும் உதவி
நட்பை செழிக்க விடும்.
அக்கறையில்லா நட்பானது சுடுநீரில் கரையும்
சர்க்கரையாய்க் கரைந்து விடும்.
பூக்கும் காய்க்கும் செடிகளில் எந்நாளும்
பூக்காதே வெள்ளிப் பணம்.
முறையின்றி முளைத்திட்ட முகநூல் நட்பு
துயரத்தில் முடித்து விடும்.
சாட்டிலே செய்கின்ற சேட்டைகள் பின்னாளில்
சாட்டையாய் மாறி விடும்.
நற்பதிவு முகநூலில் யாதெனில் படிப்போரை
எழுதத் தூண்டும் பதிவே.
நிலைக்கும் பதிவுகள் எழுதுவோர்க்கு எந்நாளும்
லைக்குகள் பொருட் டில்லை.
அளவோடு அளவளாவும் நற்பண்பு உள்ளவரால்
ஃபேஸ்புக்கும் பெருமை பெரும்.
மின் சிக்கனம்:
சி.எப்.எல் பல்புகள் இல்லத்தில் ஒளிர்ந்தால்
சீராகும் மின்சக்தி யங்கு.
குண்டுபல்பு எரிகின்ற வீடெப் போதும்
இருண்ட எதிர்காலந் தரும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சிறப்பான
சி.எப்.எல் விளக்கே விளக்கு.
பொன்சேமிக்க மறப்பினும் குற்றமில்லை பெருங்குற்றம்
மின்சேமிக்க மறப்ப தின்று.
தேவையின்றி பயன்படுத்தும் மின்சாரம் குறைப்பது
தேனாய் இனித்து விடும்.
குண்டாயிருப்பது ஆரோக்யத்தின் கேடு குண்டுபல்பு
மின் சிக்கனத்தின் கேடு.
குறைவாய் பயன்படுத்தும் மின்சாரம் நம்வீட்டில்
நிறைவாய் நிலைத்து விடும்.
மின்சிக்கனம் என்றும் உடனிருந்தால் மின்வெட்டை
காணலாம் கல் வெட்டில்.
வருங்காலம் உணராது வீணாக்கும் மின்சக்தி
உலகிற்குச் செய்யும் துரோகம்.
மின்சிக்கனம் கொள்ளாதோர் வாழ்வு தள்ளாடும்
சம்சாரமிழந்த முதியவன் போல்.
மரம் வளர்ப்போம்....
உலகம் தகித்து கொதிப்பது தடுக்க
மரங்கள் வளர்ப்ப தறிவு.
எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்
மரத்தடி மண் வளத்தை.
மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்
மரங்களை அழிப்பதன் பரிசு.
மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால
நலம் வளர்ப்போ ரெனச்சொல்.
பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை
நீருற்றி வளர்ப்பது மொன்று.
மனிதர் நம்கடமை எந்நாளும் மரம்
வளர்த்து செழிக்க விடல்.
விதையிட்டு மரம் வளர்த்து விட்டோர்க்கு
மழையால் நன்றி வரும்.
வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை
கட்டிப் போட்டு விடும்.
விழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே
விழுதுகள் விடுகின்ற மரம்.
மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி
சாய்ப்பதும் இரண்டு மொன்று.
புத்தக வாசிப்பு...
புத்தகம் படிப்பது பரவசம் அதென்றும்
காட்டிடும் புது உலகு.
புத்தகம் வாசிக்க விரும்பாதோர் பின்னாளில்
யாசிப்பர் நல் அறிவை.
புத்தகமே உயிர்த் தோழன் என்பாருக்கு
புவியெங்கும் கிடைத்திடும் சிறப்பு.
நூலறிவின்றி பெறுகின்ற பட்டம் எப்போதும்
நூல் அறுந்த பட்டம்.
பள்ளிப்பாடம் மட்டும் கற்றவன் சிறியோன்
புத்தகம் படிப்பவன் முன்.
புத்தகம் படிப்பது அருந்தவம் படிக்காதோர்
உயிர் வாழ்கின்ற சவம்.
பண்டிதனாக படிப்பது நன்று அதனினும்
பண்படப் படித்தல் நன்று
தாய்மொழியில் படிப்பதன் சிறப்பு எந்நாளும்
தாய்ப்பால் குடிப்பதற் கிணை.
நன்னூல்கள் படிக்காது வாழ்கின்ற வாழ்வு
நல்லறிவை மறைத்து விடும்.
கற்றறிந்த பாடங்கள் மேன்மை பெறும்
புத்தக வாசிப்பிருப் பின்.
No comments:
Post a Comment