Wednesday 23 March 2016

கார் காலம் 1

#மோட்டார்_ராஜ்ஜியத்தில்

ஒபாமா முந்தா நேத்து வந்துட்டு போனார் நீங்க இன்னிக்கு வர்றிங்க என கேஷுவலாக நண்பர் பிரகாஷ் சொன்னார்.. அமெரிக்க அதிபர் நேரில் வந்து பார்த்துச் செல்லும் அதே கண்காட்சிக்கு சாமானியர்களான நாங்களும் செல்ல வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். டெட்ராய்ட்... உலக மோட்டார் வண்டிகளின் மெக்கா.. உலகின் மோட்டார் சந்தையை தீர்மானிக்கும் மையப்புள்ளி.. இவர்கள் ஆண்டுதோறும் நடத்துவதே இந்த..

கார் எக்ஸ்போ.டெட்ராய்ட் ஆற்றங்கரையில் பிரம்மாண்டமாக எழும்பி இருக்கும் ஜெனரல் மோட்டார் தலைமையகம் அமைந்திருக்கும் சாலையில் தான் அந்த எக்ஸ்போ நடைபெறும் அரங்கமும் இருந்தது. மைனஸ் 13 டிகிரி குளிர் மதியம் 1மணிக்கு வீசிக்கொண்டிருக்க டெட்ராய்ட் ஆறு ஓடாமல் பனி விழுந்து உறைந்து நின்றது. ஆற்றின் அக்கரையில் கூப்பிடும் தொலைவில் கனடா நாட்டின் ஆண்ட்டாரியோ (ஆண்ட்ரியா அல்ல) நகரம் தெரிந்தது.

டெட்ராய்ட் ஆறே பங்காளி சொத்து போல இரு நாடுகளுக்கும் சரிபாதியாக பிரிக்கப்பட்டு உள்ளது என்ன கோடு தான் போடலை ஒரு கட்டத்தில் அந்த ஆறே ஒரு இடத்தில் அட போங்கப்பான்னு லெப்டில் கனடாவிலும் ரைட்டில் அமெரிக்காவிலும் பிரிந்து விடுகிறது. அந்த ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து சுரங்கச் சாலை போக்குவரத்து உள்ளது. ஆம் இது தான் உலகின் இரு நாடுகளை இணைக்கும் ஒரே ஒரு சர்வதேச சுரங்கச் சாலை.!

அந்த சுரங்கச் சாலை வின்ட்ஸர் என்றழைக்கப்படுகிறது. டெட்ராய்ட்டில் இருந்து கனடா வெறும் 10 நிமிட கார்ப்பயணம் தான். ஆற்றின் மேலேயும் பாலம் கட்டப்பட்டுள்ளது அதன் பெயர் அம்பாசிடர். நாங்கள் காரில் இருந்து அழகிய அந்த ஆற்றைப் பார்த்தோம்.. வற்றிப்போய் ஆங்காங்கே வெங்காயத் தாமரை வளர்ந்து கிடக்கும் நம்ம ஊரு வைகை ஆற்றைப் பார்த்தே காய்ந்து போன கண்களுக்கு ததும்பி உறைந்து நிற்கும் அழகு குளிர்ச்சியாகத் தெரிய

சட்டென காரில் இருந்து இறங்கிவிட்டோம் இப்போ எங்களுக்கு குளிரே தெரிந்தது.. போட்டு இருந்த தெர்மல் வேர் அதன் மீது ஸ்வெட்டர் அதன் மீது ஜெர்கின் இதையெல்லாம் அநாசியமாக தாண்டி எங்கள் உடலிடம் வந்து ஹலோ என்றது குளிர்.. எங்கள் பற்களில் இருந்து நோட்டிபிகேஷன் சவுண்டுகள் கிளம்பின கை கிளவுசை கழட்டி 4 போட்டோ எடுப்பதற்குள் விரல்களில் தேள் கடித்தது போல வலித்து விறைக்க.. அப்பப்பா அவஸ்தை.

திடீரென காற்றடிக்க ஆரம்பித்தது புயல் காற்றெல்லாம் கிடையாது தென்றல் காற்றுக்கு கொஞ்சம் கடுப்பு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சிறுவேகம் பரந்த ஆற்றங்கரையில் நின்றதால் கட்டிட தடுப்பு ஏதுமின்றி அப்படியே எங்கள் மீது மோத அந்த வேகம் தாங்காது கண்களில் மூக்கில் எல்லாம் நீர் வடிய ஆரம்பித்தது.. கிளவுசை மாட்டிக்கொண்டு வேகமாக கார் ஏறினோம்.அப்படா கார் ஹீட்டர் வெப்பம் தான் அப்போது சொர்க்கம்.

அதிக பட்சம் 5 நிமிடம் அதற்குமேல் வெளியே நிற்க முடியவில்லை. கார் மெல்ல ஆற்றங்கரையின் அடுத்த சாலைக்கு திரும்பியது. ஜார்ஜ் வாஷிங்டன் சிலையாக நின்று வரவேற்றார்.. முந்தா நாள் வந்த ஓபாமா அவருக்கு மாலை ஏதும் அணிவிக்கவில்லை போலும் மூளியாக வெறும் கழுத்தில் நின்றார். சரி முந்தா நாள் தானே ஒபாமா வந்தார் ஒரு கொடி இல்லை ஒரு தோரணம் இல்லை ஒரு ஆர்ச் இல்ல பிளக்ஸ் பேனர் இல்ல அட ஒரு போஸ்டர் கூடவா!

ச்சே என்ன ஒரு அரசியல் அநாகரிகம்.. இப்படி இருந்தா அமெரிக்கா எப்படி வல்லரசாகும் என நம்மூர் அரசியல்வாதி போல யோசித்தேன்.. அந்த சாலை தான் உலகின் முதல் போர்டு கார் ஓடிய சாலையாம். இப்போது இறக்கி விட்டால் நாங்கள் அதைவிட வேகமாய் ஓடுவோம் அடித்த குளிர் அப்படி.
கார் எக்ஸ்போ வாஷிங்டன் சிலையில் இருந்து ஒரு 600 மீட்டர் தூரமே ஆனால் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம் என்றார்கள்.

நடப்பது அதை விட கஷ்டம் இப்போது பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது.. ஆனது ஆகட்டும் என காரிலேயே கிளம்பினோம்.. சென்னையில் டேக் டைவர்ஷன் போர்டு போல பார்க்கிங் ஃபுல் போர்டுகள் எங்கள் காரை திருப்பிக் கொண்டே இருந்தது.. கடைசியில் ஒரு கார் பார்க்கிங் அபார்ட்மெண்ட் வந்தோம்.கார் கட்டிடத்தின் மாடிக்கு ஏற ஆரம்பித்தது.. சென்னை தி.நகரில் இருந்து மீனம்பாக்கம் செல்லும் தொலைவு..

அந்த கட்டித்திலேயே ஏறி மொட்டை மாடியில் போய் ஒரு வழியாகக் காரை நிறுத்தினோம். அழகான டெட்ராய்ட் ஆறும் கனடாவும் அழகாகத் தெரிந்தன. இப்போது குளிர் இல்லை இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என கவுண்டமணி சொல்வது போல குளிரிடம் சொல்லிவிட்டு கார் எக்ஸ்போ அரங்கத்திற்குள் நுழைந்தோம்.கூட்டம் கூட்டமாக சித்திரைத் திருவிழா போல மக்கள் நடந்து கொண்டு இருந்தார்கள். 

அமெரிக்க, கனடிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன முகங்கள் கலவையாக தெரிந்தன.எங்கள் இந்திய முகமும் அதில் கலந்தது. எக்ஸ்போ டிக்கெட் கவுண்டர்கள் ஏராளமாக இருந்ததால் இவ்வளவு கூட்டத்திலும் 2 நிமிடத்தில் டிக்கெட் எடுக்க முடிந்தது. எங்களுடன் மிச்சிகன் தமிழ் மன்றத் தலைவர் அண்ணாதுரையும் நண்பர் பிரகாஷும் வந்திருந்தார்கள். கார் எக்ஸ்போ உள்ளே நுழைந்தோம் அப்படியே விழி விரிய நின்றோம் அங்கே நாங்கள் கண்ட காட்சி...ஆஹா.. அதுபற்றி நாளை..!

வரும்...

No comments:

Post a Comment