Monday 21 March 2016

கெளபாய் காலத்தில் 2

#கெளபாய்_சிட்டி

பார்ட் - 2

கிரிக்கெட்டில் வைடு பால் போட்டால் அம்பயர்கள் இரு கைவிரித்து வைடு என்பார்களே அதைவிட 2 மடங்கு நீளக்கொம்புகள்மாட்டுத் தலையின் இருபுறமும் ஹோண்டா பைக் சைலன்ஸர் தடிமனில் ஆரம்பித்து கடைசியில் கவிழ்த்த ஐஸ்க்ரீம் கோனின் முனை போல சிறிதான தடிமனில் கூர்மையாக முடியும். இதை டெக்ஸாஸ் நீளக்கொம்பு மாடுகள் (Texas Longhorns bull) என அழைப்பார்கள். வளர்ந்த ஒவ்வொரு மாடும் கிட்டத்தட்ட 2 டன் எடை.!

அந்த மாட்டின் மீது ஏற நம்ம ஊரு ஸ்டேஜ் பங்ஷனில் மேடையேற படி போட்டது போல் மரப் படிகள் போட்டிருந்தனர். இதிலிருந்தே அந்த மாடு எவ்வளவு உயரம் என்பது உங்களுக்குப் புரியும். நம்ம ஊரில் யானை மீது ஏற பணம் தருவது போல இதற்கும் தரவேண்டும், அதற்கு கட்டணம் 10 டாலர்கள் (680ரூபாய்) இடையில் அந்த மாடு தலையை சிலுப்பி ஒரு பெரு மூச்சை வேறு விட்டது... அதைப் பார்த்ததும் எங்கள் மூச்சு நின்றது. 

இத்தனைக்கும் நாங்கள் பார்த்தமாடு பெரிய மாடல்ல இளையது.. அதுவே அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. அந்த மாட்டின் உரிமையாளர் ஒரு கெளபாய் இளைஞன்.. அவரை மாட்டுக்கார நோலன் என வைத்துக் கொள்வோம் ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு மாட்டுக்கார நோலனிடம் 10 டாலர் நீட்டினேன்..பதிலுக்கு அவர் ஒரு படிவத்தை நீட்டினார் அதில் கையெழுத்து இட்டுவிட்டு மாட்டின் மீது அமரவேண்டுமாம்.

அந்த படிவத்தில் ஆரோக்கிய பார்வை உள்ளவர்களே சட்டென படித்துவிட முடியாத சைசில் இந்த மாட்டின் மீது ஏறுவது என் சுயவிருப்பமே, இதற்கும் இதன் முதலாளிக்கும் சம்பந்தமில்லை அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. இதை நான் சுயவிருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறேன் .. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் அதற்கு நானே பொறுப்பு என அச்சிட்டு இருந்தார்கள். அதற்குத் தாம் கையொப்பம்.!

ஒரு கணம் வாலண்டியரா மாடு ஏற வந்துட்டமோன்னு ஒரு பயம் சூழ்ந்தது. ஏனெனில் முதுகில் அமர்ந்திருந்தாலும் அந்த மாடு தலையைச் சிலுப்பி இட வலமாக கொம்பை ஆட்டினால் அது முதுகில் அமர்ந்து இருக்கும் ஆளின் வயிற்றில் ஒரு பொத்தல் போட்டு விடுமாம். இவ்வளவும் கேட்டு விட்டு நான் ஏறு தழுவவா அல்லது நைசாக நழுவவா என்று யோசிப்பதற்குள் ஈரோடு மகேஷ், சசி போன்ற ஸ்லிம் பியூட்டிகள் வெற்றிகரமாக மாடேறினார்கள்.

அவர்கள் ஏறும் போதெல்லாம் அமைதியாகத் தான் இருந்தது அந்த நீளக் கொம்பன் அடுத்தது நான்.! அந்த மாடு நான் ஏறப்போவதை தன் சைடு கண்ணால் பார்த்தது அந்த வினாடியில் அம்மாட்டின் மைண்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன்.. அடப்பாவிகளா மாடு மீது யானையை ஏத்துறீங்களே என அதன் குரல் என் காதில் விழுந்தது. அந்த மாட்டின் மீது அமரும் சேணத்தில் முன்புறம் ஒரு சிறிய குமிழ் போல இருந்தது அதை ஒட்டி அமரக்கூடாது என்பது இன்ஸ்ட்ரக்ஷன்.. அதற்குக் காரணம் உள்ளது.

மாடு இட வலமாக தலையைத் திருப்பினாலும் கொம்பு அந்த குமிழ் வரை வருமாம் அதனால் தள்ளி அமர்ந்து கொள்ளுதல் மிக நல்லது என்றார் நோலன். சூட்சுமம் தெரிந்ததால் சற்று அலட்சியமாக ஏறி அமர்ந்தேன். அமர்ந்த உடன் ஒரு குலுங்கு குலுங்கியது மாடு.. எனக்கு வயிறு கலங்கியது என் தொப்பையின் முன்னே ஒரு இஞ்ச் தூரத்தில் வாம்மா மின்னலு போல் அதன் கொம்பு நுனி இட வலமாக விஸ்க் விஸ்க் என கிராஸ் ஆகியது.

ஒரு சில அடிகள் முன்னாலும் பின்னாலும் நகர்ந்து உடலை குலுக்க ஆரம்பித்தது எனக்கு சற்றுமுன் சாப்பிட்ட மதிய உணவு சட்டென ஜீரணம் ஆகி இருந்தது. எல்லாம் சில வினாடிகள் தான் பிறகு என்ன நினைத்ததோ நம்ம ஓனருக்கு பத்து டாலர் வருமானம் இவனை ஏன் கீழே தள்ளணும்? பேசாம இருந்தா நம்ம ஓனர் புண்ணாக்கு பர்கர் வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையில் சாதுவாக நின்றது. வெற்றிக் களிப்பில் போட்டோ எடுத்துக் கொண்டு காளைச் சண்டை மைதானத்தை காணக் கிளம்பினோம். 

அது பெரிய இண்டோர் மைதானம்.ஐ.பி.எல் சீசன் போல குறிப்பிட்ட மாதத்தில் இந்த மைதானத்தில் சண்டை நடக்கும் என்றார்கள். நாங்கள் மைதானத்தின் காலரி, மாடு திறக்கப்படும் கெளபாய் வாடிவாசல், அந்த மைதானத்தில் உள்ள மண்தரை, எல்லாம் பார்த்துவிட்டு கிளம்பினோம். அடுத்து சாலையோரத்தில் பிரிந்து சென்ற கிளைச் சாலை ஒன்றில் பயிற்சி செய்து கொண்டிருந்த கெளபாய்குதிரை வீரர்களை சந்தித்தோம்.

அவர்கள் தாம் மாலை கெளபாய் ஷோவில் பங்குபெறும் வீரர்கள் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு மாட்டு தொழுவத்திற்கு கிளம்பினோம் மாட்டுத் தொழுவமா அது இல்லை அது பெரும் யானைத் தொழுவம் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது.. அது பற்றி... வரும்....

No comments:

Post a Comment