Sunday 20 March 2016

டிஜிட்டல் அயோத்தி.

அயோத்தி..

அதிகாலை பரபரப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தது தசரதனின் அரண்மனை.. தசரதன் துயில் நீங்கி தன் ஆப்பிள் மேக் ப்ரோ ஐ பேடை எடுத்து ஃபேஸ்புக்கில் இனிய காலை வணக்கம் என பதிவு போட்டதும் கடகடவென 64 ஆயிரம் லைக்குகள் விழுந்தன. மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டார் அவரது ஐ-போன் ராமனின் மோகனம் என ஒலிக்க டிஸ்ப்ளேவில் கைகேயி என ஒளிர்ந்தது. எடுத்து ஹாய் கை என்றார்.

மறுமுனையில் விசும்பல் வெடித்தது ஏன் ஏன் அழற என்றார் பதட்டமாக நீங்க என்னை ஏமாத்திட்டிங்க.. என்றது அழுகையின் ஊடே வந்த பதில் கொஞ்சம் எரிச்சலானார் இதோ பாரு டியர் ராமனுக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு பண்ணியிருக்கேன் செட் போட தோட்டா தரணி இன்னிக்கு வர்றாரு ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி வேற இருக்கு அவரையும் மீட் பண்ணணும் சோ நான் ரொம்ப பிசி எதுவானாலும் இப்ப பேச முடியாது.

எல்லாம் பட்டாபிஷேகம் முடிஞ்சு பார்த்துகலாம் ஓ.கே என்றார்.. மறுமுனை இல்ல பிரச்சனையே பட்டாபிஷேகத்துல தான் நீங்க உங்க மெயிலை ஓப்பன் பண்ணி பாருங்க 2 பைல் டீடெயிலா அனுப்பியிருக்கேன் படிச்சிட்டு கூப்பிடுங்க என்று சொல்லி கட் செய்தாள் கைகேயி. அவசரமாக தன் மெயிலை திறந்தார் ராமர் பட்டாபிஷேக டிவிட்டர் பேஜிற்கு வந்த மெயில்கள் தான் குவிந்திருந்தன கைகேயி என டைப் செய்து சர்ச்சினார்.

முதல் மெயிலாக வந்தது கைகேயின் மெயில்.. திறந்தார் ஒன்று வேர்டு ஃபைலாகவும் மற்றொன்று போல்டராகவும் இருந்தன.. சுருக்கமாக இதுதான்...இதற்கு முன்பு நீங்கள் தருவதாக இருந்த ரெண்டு வரங்கள் தற்போது உடனே வேண்டும்.. என ஓ.பி.எஸ்சிடம் கறாராக நடந்து கொண்ட அம்மா போல் கேட்டிருந்தார்.. போல்டரில் அவர் வரம் தருவதாக சொன்ன வாய்ஸ் மற்றும் வீடியோ கிளிப்புகள் இருந்தன. தசரதர் யோசித்தார்.

திடீரென கைகேயி இப்படி நடந்து கொள்ள காரணம் என்ன தன் அறையில் இருந்த சிசிடிவி பிரிவுக்குப் போனார்.. மொத்த அயோத்தி அரண்மனையும் ஒருங்கிணைத்த சிசிடிவி கண்ட்ரோல் ரூம் அது எதிரே இஸ்ரோ விண்வெளி தரைக்கட்டுபாடு ரூம் போல ஏராளமான டிவிக்கள் இருந்தன.. கைகேயியின் மாளிகை கேமிராவின் மெமரியை தேடி க்ளிக்கினார்.. எல்லா இடத்திலும் வெளியே எல்லாருக்கும் தெரிந்த கேமிரா ஒன்று இருக்கும்..ஆனால்..

அதே இடத்தில் யாருக்கும் புலப்படாத ரகசிய இடத்தில் ஒரு காமிரா இருக்கும் இதை பிக்ஸ் செய்த கம்பெனிக்கும் தசரதருக்கும் மட்டுமே அந்த உண்மை தெரியும். நேற்றைய சம்பவங்கள் திரையில் ஓடின ஓன்றும் அகப்பட வில்லை அதற்கு முன் தினமும் அப்படியே இப்படி நான்கு நாட்கள் முன்பு வரை விடியோவில் ஒன்றும் தெரியவில்லை தசரதர் சலித்து 5 வது நாளுக்கு போனார் சட்டென்று நிமிர்ந்தார் இது கூனியல்லவா.. இவள் ஏன் இப்படி..

பதுங்கி வருகிறாள் அவள் கைகேயி அறைக்குள் நுழைவதைப் பார்த்தார்.. அடுத்து மூன்று மணிநேரம் கழித்து தான் கூனி வெளியேறுவதைப் பார்த்தார். மெல்ல புன்முறுவல் பூத்தார். உடனடியாக தன் தகவல் தொழில் நுட்ப அதிகாரியை வரச் சொல்லி சில கட்டளைகள் இட்டார். வேகமாக குளித்து உணவை முடித்துவிட்டு கைகேயிக்கு உடனே வருகிறேன் என வாட்ஸ் அப் செய்தி அனுப்பினார். அவருக்குள் ஒரு திட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார் அவள் தலைவிரி கோலமாக அழுதபடி தரையில் கிடந்தாள்.இது அவர் எதிர்பார்த்தது தான் சொல் கைகேயி உன் மெயிலைப் படித்தேன் என்றார்.. நான் என்ன சொல்ல சொல்ல வேண்டியது நீங்கள் தானே என்றாள்.. என் முடிவை சொல்ல ஒரு அரைமணி நேரம் தருவாயா என்றார்.. தாராளமாக என்றாள் கைகேயி அதற்கு முன் ஒன்று கேட்கவேண்டும் இது உன் சுய முடிவு தானே..? 

தசரதர் இப்படிக் கேட்டதும் கைகேயி கொஞ்சம் தடுமாறினாள்.. ஆ..ஆ ஆம் இதில் வேறு யார் வந்து தலையிடப்போகிறார்கள் என்றாள் அவசரமாக. ஓகே அப்ப சரி வெயிட் ப்ளீஸ் என்றாள் அடுத்த 15 நிமிடத்தில் அயோத்தியே தேர்தல் கமிஷன் கெடுபிடியில் சிக்கிய கட்சிகளை போல பதறியது.. தசரதரைத் தேடி அவர் கைகேயி மாளிகையில் இருப்பதறிந்து அனைவரும் வாசலில் கூடிவிட்டனர் பிரபோ இதென்ன சோதனை வெளியே வாருங்கள்..

அவர்கள் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் தசரதர்.. என்ன என்னப்பா பிரச்சனை.. பிரபோ ராமர் பட்டாபிஷேகத்திற்கு எதிராக பெரிய சதி நடக்கிறதே அதுவும் உங்கள் குடும்பத்துக்குள் இருந்தே இப்படியே விட்டால் திமுகவை மிஞ்சிவிடுவீர்கள் போலேயே என அழுதனர் எனக்கு எதுவும் புரிய வில்லை விவரமாக சொல்லுங்கள் என்றார் தசரதர்.. அதை எப்படிச் சொல்லுவோம் பிரபு சதி செய்தது யார் தெரியுமா? வேண்டாம் பிரபு...

இதோ பாருங்கள் நடந்ததை தைரியமாகக் கூறுங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என தசரதர் சொல்ல ஒருவர் மட்டும் தயங்கித் தயங்கி உங்கள் மனைவியா? துணைவியா? அந்த கைகேயி அம்மையார் தான் காரணம் எனச் சொல்ல உள்ளே இருந்த கைகேயி திடுக்கிட்டாள் அரச ரகசியங்கள் எப்படி கசிகின்றன உளவுத்துறை கண்காணித்து இருக்குமோ இல்லையே சிசிடிவி இணைப்பை கூட தெளிவாக துண்டித்தேனே குழம்பினால்.

வெளியே தசரதர் குரல் கேட்டது "அபாண்டமாக கைகேயி மீது பழி சுமத்தாதீர்கள் இதற்கு ஆதாரம் இருக்கா" என்றார் ரின் சோப் விளம்பர நடிகர் போல இதோ பாருங்கள் சற்றுமுன் அயோத்தி முழுவதும் வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ கூனியும் கைகேயியும் நடத்திய சதியாலோசனை ஒன் மினிட் 56 செகண்ட்சில் அட்டகாசமாக எடிட் செய்யப்பட்டு இருந்தது.. அதைக் கேட்ட கைகேயி வங்கிகளைக் கண்ட மல்லையா போல பயந்தாள்.

இல்லை இது பொய்யான வீடியோ அதிலிருப்பது நானே இல்லை என்ற அரதப் பழசான நித்தியானந்தா பாணியில் அவள் கத்த போதுண்டா ரீல் அந்து போச்சு எல்லாத்தையும் நான் அவங்க கிட்ட சொல்லிட்டேன் என சத்யராஜிடம் கவுண்டமணி சொன்னது போல ஒரு குரல் ஒலிக்க யார் எனப் பார்த்தாள் கூனி நிமிர்ந்து நின்றாள் (பெண்ட்டை நிமித்தியதால்) பிரபோ என்னை மன்னியுங்கள் என கைகேயி கதறி தசரதர் காலில் விழுந்தாள்.

ஓ.கே.ஓ.கே..மன்னித்தேன் அமைச்சர்கள் பி.ஏக்களை நம்புவது போல இனி இது போல ஆட்களை எல்லாம் நம்பாதே உன் பேரை கெடுத்து விடுவார்கள். டெக்னாலஜி இருந்ததால் உண்மை தெரிந்தது இல்லாவிட்டால் ராமனை நான் காட்டிற்கல்லவா அனுப்பி இருப்பேன் இந்த அயோத்தியில் எனக்குத் தெரியாது எதுவும் நடக்காது ஏனெனில் இது டிஜிட்டல் அயோத்தி என்றார் தசரதர் எல்லாரும் அதை ஆமோதித்து கைகளைத் தட்டினார்கள்.

அதே நேரத்தில் இலங்கையில் ஃபேஸ்புக்கில் இருந்த இராவணன் People you may Know வில் சீதையின் படத்தை பார்த்து மயங்கி தன் ஃபேக் ஐடியில் இருந்து Friend Request அனுப்பினான்.. பின்னே ராமாயணம் நடக்க வேணாமா..! 

டிஸ்கி: இது புராணத்தையோ அவதாரத்தையோ கிண்டல் அடிக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.. இராமாயண காலத்தில் டெக்னாலஜி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே..போராளிகள் தங்கள் கோஷங்களையும் கொடிகளையும் சுருட்டிக் கொண்டு மாற்றுப்பாதையில் செல்லவும்.

No comments:

Post a Comment