Friday 18 March 2016

கெளபாய் காலத்தில் 1

#கெளபாய்_சிட்டி

பார்ட் - 1

டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஃபோர்ட் வொர்த்தில் இருக்கிறது கெளபாய் சிட்டி நாங்கள் தங்கியிருந்த டாலஸில் இருந்து அங்கு செல்ல 40 நிமிட கார்ப் பயணம். டாலஸ் மற்றும் ஃபோர்ட் வொர்த் இரண்டும் இரட்டை நகரங்களாகும். டாலஸில் நண்பர் நந்தா வீட்டில் காலை உணவாக சூடான இட்லி,பொங்கல்,சாம்பார் வடை, அப்புறம் உப்புமா தி கிரேட்  ரெடியாக இருந்தது இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு காரில் ஏறினோம்.

முகநூலில் என்னுடன் நண்பராக இருக்கும் நந்தா நான் உப்புமாவை ரசித்து சாப்பிடுவதை மிகமிக ஆச்சரியமாக பார்த்தார்.. அவர் மைண்ட் வாய்ஸ் அப்ப அத்தனையும் நடிப்பா கோப்பால் என்றது டெக்ஸாசுக்கே கேட்டது. காலை நேர டிராபிக்கால் கெளபாய் சிட்டி செல்ல ஒருமணி நேரம் ஆகிவிட்டது. நெடுஞ்சாலையில் இருந்து பிடிவாதம் பிடித்து ஓடிப்போகும் குழந்தை போல பிரிந்து சென்ற பக்கவாட்டுச் சாலையில் இறங்கியது எங்கள் கார்.

சில மீட்டர்களிலேயே அமெரிக்க கெளபாய் கிராமம் போன்ற அமைப்புகள் தென்பட்டன. முக்காலா முக்காபுலா பாடலில் சென்னை ரெட்ஹில்சை அங்கு சில செட் போட்டு டெக்ஸாஸ் என டைரக்டர் ஷங்கர் நம்மை நம்ப வைத்த கெளபாய் சிட்டி இப்போது ரியலாக எங்கள் கண்முன்.. அப்படியே ஒரு 10 நிமிடப் பயணத்தில் கெளபாய் நகரம் வந்தது. மஸ்கிடோ காயல்கள் முகத்துக்கு முன் சுழலாமலேயே நினைவுகள் அப்படியே பின் சுழன்றது.

பால்யத்தில் முத்து காமிக்ஸ் டெக்ஸ்வில்லர் கதைகளில் பார்த்த கருப்பு வெள்ளையில் வரும் இடங்கள் எல்லாம் எங்கள் எதிரே வண்ணமயமாக.. வாழ்க்கையில் இந்த வாய்ப்பினை அளித்த இறைவனுக்கு நன்றியை சொல்லிக் கொண்டேன். கெளபாய் ஷோ நடைபெறும் சாலைக்குள் நுழைந்தோம் திருமலை நாயக்கர் அரண்மனை போல பழங்காலக் கட்டிடங்கள் சாலையின் இருபுறம் அமைந்திருந்தன காரை நிறுத்தினோம்.

சாலையில் கெளபாய் தொப்பிகளுடன் பலர் தென்பட்டனர் ஆங்காங்கே குதிரைகளில் அமர்ந்தும் சென்று கொண்டிருந்தனர்.. நீள கோச் வண்டி பெரிய மீசைக்காரர்கள்.. ஆஹா கெளபாய் கதைகளுக்குள் நாங்கள் குதித்து அவர்களோடு உலாவினோம். மதியம் 12:30 மணி ஆகியிருந்தது. மாலை நான்கு மணிக்குத் தான் கெளபாய் ஷோ.. மற்ற இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். முதலில் கெளபாய் கால பொருட்கள் மார்க்கெட்.

நம்ம ஊரு கோவில் கடைகள் போல ஒரு பெரிய கூரை ஷெட்டுக்குள் இரு புறமும் கடைகள் வரிசையாக இருந்தன.. கெளபாய் தொப்பிகள்,ஷுக்கள், பீப்பாய்கள், சிலுவைகள், கொடிகள், துப்பாக்கிகள், சாட்டைகள், சவுக்கு, இப்படி பலவிதமான அலங்காரப் பொருட்கள் இவையெல்லாம் வாங்க நாம் கெளபாயாக இருப்பதைவிட திருபாயாக (அம்பானி) இருந்தால்தான் வாங்க முடியும் என்பது தெரிந்தவுடன் அவற்றுடன் புகைப்படம் மட்டும் எடுத்தோம்.

ஒருமணிநேரம் கடந்தது காலையில் சாப்பிட்ட ரவை (உப்புமா) வயிற்றை சுட்டது. வெளியே மெக்சிகன் & அமெரிக்க உணவகங்களில் கன்றோடு சேர்ந்த பன்றியும் பல தினுசுகளில் உணவாக கிடைத்தது.. அவற்றைச் சாப்பிடத் தயங்கி வேறு உணவு தேடினோம் வெஜ் சாண்ட்விச் விற்ற ஒரு தெய்வத்தை பார்த்தோம் பிறகு ரெட்புல் பானமும் கிடைத்தது.. அதை வாங்கிச் சாப்பிட்டு விட்டு பசியைத் தற்காலிகமாக போக்கினோம்.

மணி 2:30 சாலையில் இப்போது சில மாடுகளைப் பார்த்தோம் நம்ம கிராம சந்தைகளில் எம்.ஜி.ஆர், ரஜினி, சிவாஜி கட் அவுட்டுகளோடு நின்று புகைப் படம் எடுப்பது போல் அந்த மாடுகள் மீது அமர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாடும் நாஞ்சில் சம்பத்தின் இன்னோவா சைசில் இருந்தது.. அவை அம்மா அம்மா என்று வேறு கத்தியது. அந்த ஆஜானுபாகு கொண்ட மாட்டின் கொம்புகள் தான் எங்கள் அடிவயிற்றைக் கலக்கியது.. 

அதுபற்றி நாளை... (வரும்...)





No comments:

Post a Comment