Saturday 9 July 2016

ஈரோடு தோட்டத்து விருந்து

#தோட்டத்து_விருந்து

ஈரோட்டில் எனது க்ளையண்ட் ஒருவரை வியாபார நிமித்தமாக சந்திக்க போயிருந்தேன்.. வழக்கமாக அவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் மதிய உணவு அவருடன் தான்.. அவர் வீட்டுச் சாப்பாடே வரும்.. சில சமயம் புகழ் பெற்ற ஓட்டல்களுக்கும் அழைத்துச் செல்வார். இன்னிக்கு வீட்டில் சமைக்கல லஞ்ச் எந்த ஓட்டல் சார் போகலாம் சைவமா? அசைவமா? என்றார். உங்கள் பிரியம் சாரென்றேன் அவரும் நல்ல உணவுப் பிரியர்..

ஆகவே அவரது தேர்வு சரியானதாகத் தான் இருக்கும் என அறிவேன்.. தோட்டத்து விருந்து போகலாமா என்றார்..ஈரோடு பக்கம் இது போல கிராமத்து வீட்டு ஸ்டைல் ஓட்டல்கள் மிகப்பிரபலம் என்பது தெரியும்.. கிளம்பினோம். நசியனூர் சாலையில் இருந்து இடதுபக்கம் பிரியும் ரோட்டில் இருந்தது அந்த மெஸ்.. சுற்றிலும் காம்பவுண்ட் கட்டிய தோட்டம் அதன் நடுவில் முனிவர்கள் ஆசிரமம் போல 3 குடில்கள் தெரிந்தது.




சாலையின் இருபுறமும் ஏராளமான கார்கள் வரிசையாக நின்றன. எங்களது காரையும் அங்கு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். நல்ல கூட்டம் இருப்பினும் எங்களுக்கு இடம் கிடைத்தது. குடிலின் உள்ளே கடப்பா கற்களால் டேபிளும் இரும்பு சேர்களும் போடப்பட்டு இருந்தன. டேபிளில் ஒவ்வொருவர் முன்பும் கிட்டத் தட்ட ஒரு ஆட்டுக்குட்டியையே மூடி மறைக்கலாம் போல அஜீத் வாழை இலை விரிக்கப்பட்டிருந்தன.

ஒரு தட்டில் 3 எவர்சில்வர் மக்குகள் வைக்கப்பட்டன ஒன்றில் மீன் குழம்பு, இன்னொன்றில் மட்டன் குழம்பு மூன்றாவதில் நாட்டுக் கோழி குழம்பு இது எல்லாருக்கும் சாப்பாடு ஆர்டர் செய்தாலே போதும் இலவசமாக இவற்றை சாப்பிடலாம்.. பொல பொலவென சூடான சாதம் வந்தது முதலில் நாட்டுக் கோழி குழம்பை ஊற்றி சுவைத்தேன்.. மசாலா இல்லாமல் மஞ்சள்,சீரகம், மிளகாய் வத்தல்,தேங்காய் ஆகியவற்றை கையால் அரைத்து வைத்த குழம்பு.

மட்டன் குழம்பும் அப்படியே மீன்குழம்பிற்கு மட்டும் வத்தல் மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்த்து  அரைத்திருந்தார்கள் ஆஹா..! ருசி அள்ளியது. சிக்கன் கொத்துக்கறி, மட்டன் சுக்கா, ஈரல் என நாங்கள் மூன்று பேர் ஒவ்வொரு அயிட்டமாக ஆர்டர் சொல்லி ஷேர் மூன்றையும் செய்து கொண்டோம்.. எதிலுமே மசாலா கிடையாது கையால் அரைத்து சமைத்து இருந்தனர். செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் நல்லெண்ணெய் மட்டும்..



அளவாக பயன்படுத்தி இருந்தனர்.. அடுத்து ஆம்லேட் சொன்னோம் சின்ன வெங்காயத்தை சிப்ஸ் போல வட்டமாக வெட்டி பச்சை மிளகாய் போட்டு பிரமாதமாக செய்து தந்தனர் வறுத்த சீரகமும் மிளகும் இடித்த பொடி தூவி ஆம்லேட்டே அவ்வளவு ருசி.. அடுத்து ரசம்.. ஆஹா ஆஹா என்னா டேஸ்ட்டு கொங்கு பகுதியின் ஸ்பெஷலான பச்சைப்புளி ரசம் புளித் தண்ணியில் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி போட்டு கருவேப்பிலை சேர்த்து..

சாதத்தில் சுடச்சுட ஊற்றி சாப்பிட இது தான் தேவாமிர்தம் என்பது போல இருந்தது.. ஆம்லேட் காம்பினேஷனில் ரசம் சாதம் சென்டம் எடுத்தது. கடைசியாக தயிர் வாங்கிக்க மறந்துடாதிங்க இங்க அது ஸ்பெஷல் என்றார் க்ளையண்ட்.. அவர் சொன்னது போலவே கத்தி வைத்து அறுத்தது போல கெட்டித்தயிர் வந்தது.. புளிக்காத உப்பு தேவைப்படாத சுவையில் தயிர் அருமை ஊறுகாயுடனும் சுக்கா வருவலுடனும் செம காம்பினேஷன்.



இங்கு வறுத்த பொரித்த உணவுகளை விட குழம்பாக கூட்டாக சமைக்கப் படும் உணவுகளே பிரசித்தியானவை, தலைக்கறி, கொங்கு கோழிக் குழம்பு, நல்லி எலும்புக் குழம்பு காரக்கறி குழம்பு போன்றவை ஸ்பெஷல்.. சைவமும் உண்டு.. ஆனால் Wi-Fi  இருக்கும் இடத்தில் மொபைல் டேட்டாவுக்கு என்ன வேலை.. வயிற்றுக்கு பிரச்சனை இல்லாது வஞ்சனை இல்லாது அசைவம் சாப்பிட உகந்த இடம் தோட்டத்து விருந்து.! ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

No comments:

Post a Comment