Tuesday 10 February 2015

அக்னி வடசித்திரம்.

4. பாட்டி வடை சுட்ட கதையை நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் இயக்கியிருந்தால் ஒரு ஜாலி கற்பனை...

இயக்குநர் மணிரத்னம்...

கும்மிருட்டு (பாஸ் அதான் டைரக்டர் பேரு சொல்லிட்டிங்களே கதைக்கு வாங்க) ஒரு தீக்குச்சி மட்டும் பற்ற வைக்கிறார்கள். அந்த ஒளியில் ஒரு பாட்டியின் முகம் தெரிகிறது.. அந்த பாட்டி அந்த குச்சியால் இப்பொது விறகடுப்பை பற்ற வைக்கிறாள் இப்போது வெளிச்சம் நன்கு பரவ ரியலாக அடுப்பு எரிக்கும் ஒளியில் அந்த குடிசை தெரிகிறது.. வெளியே சோ வென மழை.. மழையை சபித்துக்கொண்டே பாட்டி...

வடை சுடுகிறார்.! அப்போ வாசலில் ஹஸ்கி வாய்ஸில் ஒரு குரல் "வேணும்.. வடை வேணும்" அதற்கு பாட்டியும் ஹஸ்கியாக "எத்தனை" குரல் "நாலு" பாட்டி "பத்து ரூபா" குரல் "இல்ல எங்கிட்ட இல்ல" பாட்டி "ஏன்" குரல் "அதான் இல்லேங்கறேன் இல்ல" பாட்டி "அதான் ஏன்னு கேக்கறேன் இல்ல" குரல் "ஏன்னா..ஏன்னா.. நான் காக்கா" இதைக்கேட்டதும் பாட்டி காக்காவா பேசுதுன்னு பாக்க வெளியே வர..

அது எதிர் வீட்டு டிவியில் ஓடுற இன்னொரு மணிரத்னம் பட சவுண்டுன்னு தெரிய வருது.! இந்த கேப்புல அந்த அஷோக் காக்கா ஷோக்கா ஜன்னல் வழியா வந்து வடையை தூக்கிட்டு பறந்துடுது... பாட்டிக்கு அதிர்ச்சி..! வடையோட போன அஷோக் காக்கா வழக்கம் போல தன் பிரண்ட்ஸோட அதை ஷேர் பண்ண எல்லா காக்காவும் "காக்கா காக்காதி காக்கனிந்த காக்கா" என ஆடிப்பாடுகின்றன.!

அஷோக் காக்காவோட கொட்டத்தை அடக்க பாட்டி கெளதம்ன்னு ஒரு காக்காவை வளக்குறா.. அந்த காக்காவும் அஷோக்க்கு எதிரா நிறைய நடவடிக்கை எடுக்குது அதுவும் அஷோக் காக்காவும் சந்திக்கும் போதெல்லாம் மோதிக்கிறாங்க.. அஷோக் காக்காவுக்கு ஏன் பயம் இல்லைன்னா கெளதம் காக்காக்கு முன்னாடி பாட்டிகிட்ட வளர்ந்த காக்கா தான் அஷோக்.. கெளதமும் அஷோக்கும் சகோதரர்கள்.!

பாட்டி கடைக்கு அடிக்கடி வந்து போற வில்லன் "நரியாபதி"அக்கவுண்ட்ல சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போவார். ஒரு நாள் பாட்டி பாக்கியை செட்டில் பண்ண கேட்டப்ப அவரு பணம் தர மறுக்கிறாரு.. அப்ப தான் பாட்டிக்கு அவர் ஏப்பம் விட்டதுக்கான உண்மையான அர்த்தம் புரியுது.. தன்கிட்ட காக்காவை விட அதிக வடையை சுட்ட இந்த நரியாபதி தான் பெரிய நரின்னு பாட்டிக்கு தெரியவருது.!

விஷயத்தை அஷோக் கெளதம் காக்காக்களிடம் பாட்டி சொல்ல.. இதுவரை எதிரும் புதிருமா நின்ன ரெண்டு காக்காக்களும் தீயைப்போல வெகுண்டு எரி(ழு)ந்து.. ஒண்ணா சேர்ந்து போய் அந்த நரியாபதியுடன் பொறி பறக்க மோதுகிறார்கள்.. தப்பி ஓடிய நரியாபதி ஒரிடத்துல ஒளிஞ்சுகிட்டு பாட்டியை அடிக்க ஒரு நரிக் கூட்டத்தை அனுப்பி விடுறாரு.. அந்த நரிகளிடம் அடிபட்ட பாட்டி ஆஸ்பத்திரியில் அட்மிட ஆக..

பாட்டியின் வடைகளோடு நரியாபதி ரயிலில் ஏறி வேறு ஊருக்கு ஓட பார்க்க அஷோக் காக்காவும் கெளதம் காக்காவும் பறந்து போயி ஓடும் ரயிலிலின் ஜன்னல் வழியாக நுழைந்து அந்த வடைகளை எடுத்துகிட்டு திரும்பி வரும்போது நரியாபதியின் கண்ணிலயும் கொத்திவிட்டு வருகிறார்கள்.. கண்ணில் ரத்தம் வடிய நரியாபதி அடுத்த ஸ்டேஷனில் டிரெயினை விட்டு இறங்குகிறார்..

கண் தெரியாது நடக்கும் போது தடுமாறி பிளாட்பாரத்தில் இருக்கும் டீக்கடையின் அடுப்பில் விழ அவர் உடல் பற்றி எரிந்து சாம்பலாகிறது..! வானத்தில் பறந்தபடியே இதை பார்க்கும் சகோதர காகங்கள் வடையோடு பாட்டியிடம் திரும்புகின்றன. ஆஸ்பத்திரியில் இப்ப பாட்டி கண்முழிக்க காகங்கள் கண்ணீருடன் வடையை அவருக்கு ஊட்ட.. ஆனந்தமாக மூவரும் சிரிக்க தூரத்தில் ரயிலின் சத்தம்.!

வண்ணாரப்பேட்டை டாக்கீஸ் வழங்கும்...

மணிரத்னத்தின்.. #அக்னி_வடசித்திரம்

No comments:

Post a Comment