Sunday 10 November 2013

பலகார அரசியல்........

தலைவர்களின் தீபாவளி பலகாரங்கள்...

கேப்டன் : குலோப்ஜாமூன்... எப்போதும் "திரவத்தில்" மிதக்கும் என்பதால் இது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்...உருண்டை வடிவமானது வேறு இடங்களுக்கு உருண்டோடி விடமால் ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்....

ராகுல் : கை" முறுக்கு...  மொறு மொறுப்பாக இருக்கும் போதே சாப்பிடாமல் பெரிசுகளிடம் கொடுத்து விட்டு நமுத்து போனபின் சாப்பிடுவது இவருக்கு பிடிக்கும்...

மோடி : ஜாங்கிரி.... காவி கலர் இனிப்பு என்பதால் இவருக்கு இஷ்டம்..... நிறைய சுத்தல் உள்ள ஸ்வீட் என்பது இவர் இந்தியா முழுவதும் சுற்றுவதை குறிக்கும்... பெரியவர் ஒருவர் சாப்பிட வேண்டியதை தட்டிப்பறித்து சாப்பிடுவார்....

நாராயணசாமி : அல்வா.... இது இவர் மட்டும் சாப்பிட்டாமல் எல்லோருக்கும் கொடுப்பார்... வாயில் போட்டால் வழுக்கி செல்லாமல் ரப்பராக இழுக்கும் பதத்தில் இருப்பதே இவருக்கு பிடிக்கும்.... 15 கிராம் துண்டுகளாக இருப்பின் கொள்ளை இஷ்டம்......

லல்லு : பால் கோவா.... பாலில் செய்ததால் மிகப்பிடிக்கும்......மாட்டில் பாலாக கறக்காமல்  பால் கோவாவாக கறக்க ஆசைப்பட்டு உள்ளே இருக்கிறார்.. பால் கோவா பிடித்தாலும் இந்த தீபாவளிக்கு பால் களி தான்.....

சுப்பிரமணிய சாமி : சீடை...... கரகரப்பாக வாயிலும் கரையும் கடக் முடக் என பல்லையும் உடைக்கும்.... கணிக்க முடியாத பலகாரம்.....சில வேளைகளில் வெடிக்கவும் செய்யும்...

சோனியா : பீட்ஸா.... இந்திய உணவு ஒத்துக் கொள்ளாது.... பார்லிமெண்ட் வடிவில் வட்டமாக இருக்கும் பீட்ஸா தான் பிடிக்கும்... கட்சி காரர்கள் துண்டு போட்டு சாப்பிடுவார்கள்.... சில நேரம் இவரே துண்டாக்குவார்...

மம்தா : காராசேவு.....  தீதிக்கு பிடித்தது அதிகாரமும் அதிக காரமும்..... காரா சேவை காரச்சட்னியோடு சாப்பிடுவார்... மொறு மொறுப்பாக இருந்தால் தான் பிடிக்கும்... "மாவோ"டு இருந்தா அவ்வளவு தான் ருத்ர தாண்டவம் ஆடிடுவார்....

கலைஞர் : லட்டு..... ஆளுக்கு ஏற்றார் போல பிடித்து தருவார்... சிலதில் முந்திரி அதிகம் இருக்கும்.... சிலதில் இருக்காது... ஆனால் முந்திரி உள்ள லட்டு குடும்பத்தினருக்கே இது வரை கிடைத்துள்ளது.... இதில் எதுவும் பிரச்சனை வந்தால் லட்டை பூந்தியாக்கி அவரே சாப்பிட்டுவிடுவார்.....

ஜெயலலிதா : கொழுக்கட்டை..... உள்ளே என்ன வைத்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.... இனிப்பு பூரணமும் இருக்கும்... கசப்பு அஜீரணமும் இருக்கும்...எந்த மாவிலும் அவர் பிடிப்பதே கொழுக்கட்டை....

வை.கோ. : ஜிலேபி...... "புளி"ப்பு சுவையுள்ளதால் மிக மிக பிடிக்கும்.... சுற்று உள்ள இனிப்பு என்பதாலும் சுற்றிவருபவரின் மனங்கவர்ந்த இனிப்பு... இதுவும் காவி நிறம் தானே என்றால் இல்லை அது நம் தேசிய கொடியின் நிறம் என்பார்....

ராமதாஸ் : மைசூர் பா..... மாம்பழ மஞ்சள் நிறத்தில் இருப்பத்தால் இது இவருக்கு பிடிக்கும்.... சாஃப்ட்டான பதத்தில் சாப்பிட நினைத்தாலும் கடினமான பதத்தில் தான் கிடைக்கிறது.... நல்ல ஜாதிக்கடலையை அரைத்து மாவாக்கினால் அது கிடைக்கும் என நம்புகிறார்...

தா.பாண்டியன் : அதிரசம்..... நல்ல சிவந்த நிறத்தில் இருப்பதால் மிகவும் பிடிக்கும்.... பக்குவமாக இடிக்காவிட்டால் உதிரும் பலகாரம் இது... ஆகவே யார் இடித்தாலும் பெண்களே அடித்தாலும் கலங்க மாட்டார்,,, அவருக்கு உதிராது ஒண்ணு கிடைச்சாலும் போதும்....

திருமா : சமோசா.... உள்ள இருக்குற கிழங்க வச்சு தான் இதுக்கு மதிப்பே... சில நேரம் கிழங்கு கெட்டாலும் இதுக்கும் கெட்டபேருதான்... இருந்தாலும் இவருக்கு இது பிடிச்சு போச்சு... எப்படி வேணா மடிக்கலாம் ஆனா பாக்கறதுக்கு வெறைப்பா நிக்குறா மாதிரியே தெரியும்....

ப.சிதம்பரம் : பாதாம் அல்வா...... ரொம்ப காஸ்ட்லி..... ஏழைங்க வாங்க முடியாது.... நாளுக்கு நாளு விலை ஏறிகிட்டே இருக்கும்... எல்லா கடையிலும் நிறைய இல்லாம கம்மியா பற்றாக்குறையிலதான் இருக்கும்... அதனால் தான் இவருக்கு இது பிடிக்கும்..

சரத்,பரிதி,&நாஞ்சில்: என்ன கொடுத்தாலும் பிடிக்கும்...ஆனா ஏதாவது கொடுக்கணும். கேசரின்னு சொல்லி காராபூந்தி கொடுத்தா கூட அது இனிக்குதுன்னு சத்தியம் பண்ணுவாங்க...இன்னோவால போகும் போது கொறிக்க ஏதாவது கொடுத்தாலே போதும்...

மன்மோகன் : மிக்சர்..... இதுக்கு பெருசா விளக்கம் வேணுமா என்ன!!!!!!

No comments:

Post a Comment