Tuesday 5 January 2016

21. ஏற்ற கலங்கள்...

#ஆண்டாள்_பெருமை

கறந்தபால் அடுப்பின்றி பொங்குமா? பொங்கும் என்கிறார் ஆண்டாள். வழக்கம் போல கண்ணனுக்கு இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கு ப்ளக்ஸ், பேனர், போஸ்டர், ஆர்ச்சில் கொடுக்கும் அடை மொழி போல் அவர் காலத்து வாசகங்களுடன் போற்றிப் பாடிப் புகழ்ந்து எழுப்புகிறார்.

19ஆம் நாள் 20ஆம் நாள் ஆகிய இரண்டு நாட்களும் பாடிய பாசுரங்கள் கேட்டு கண்ணன் எழுந்திருக்கவில்லை.. இப்போது என்ன செய்வது? சரண்டர் தானே! அதையும் அழகான உவமையுடன் சொல்லி ஆண்டாள் அடையும் சரணாகதியைப் பாருங்கள்.

பசுவிடம் இருந்து பால் கறக்கும் போது அதன் மடியில் இருந்து பாத்திரத்தின் அடியில் விழும் பால் வேகமாக மேலேறி பொங்குகிறது.. (இந்த உவமை நியூட்டனின் விதியை நினைவு படுத்துகிறது)அப்படியென்றால் எவ்வளவு பால்வளம்! எவ்வளவு ஆரோக்கியமான பசுக்கள். இதுபோல பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மகனே.

உலகை காப்பவனே, பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே,ஒளிவடிவனே, நீ தூங்கலாமா? உன் எதிரிகள் கூட உன் பலம் அறிந்து உன்னுடன் மோத பயந்து உன் வாசல் வந்து காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்கின்றோம்.. நீ எழுந்து எமக்கு அருள் புரிவாய்.

ஆண்டாள் கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர். எதற்கும் மசியவில்லை என்றால் படாரென்று கண்ணனின் காலில் விழுந்துவிடுவாள்.. அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் இன்றைய அமைச்சர்கள் போல் காலில் விழுபவள் அல்ல.. கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்.

மார்கழி 21 ஆம் நாள் பாடல்...

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment