Tuesday 19 January 2016

பொருட்காட்சியும் மனசாட்சியும்...

#பொருட்காட்சியும்_மனசாட்சியும்

ஏங்க.. பொருட்காட்சியில் ஒரு ஸ்டால் எடுக்கலாம்ன்னு இருக்கேன் நீங்க என்ன நினைக்கிறிங்க? அதுவா அது சரிப்படாதே..அங்க என்ன குடுத்தாலும் சாப்பிடுவாங்க ஆனா நமக்கு என்ன பேர் கிடைக்கும்.? ஐ வாண்ட் ரிபீட் கஸ்டமர்ஸ்... இல்லைங்க இங்க கடை போட்டால் நம்ம கடை பேரு நல்லா பிராண்டிங் ஆகுமில்லையா.! அதான்..ஓ.. நீ அப்படி வர்றியா.. ஓகே.. சரிம்மா

செல்வம் என் ஆபீஸ் அட்டெண்டர்.. ராஜா என் டிரைவர்..மதிய சாப்பாட்டை வீட்டில் இருந்து ஹாட் பேகில் வாங்கி வந்து நியூஸ் பேப்பர் விரித்து அதன் மீது தட்டு வைத்து நான் கை கழுவும் வரை பரிமாறி என் தட்டையும் கழுவி வைப்பார்கள். என்னிடம் நிரந்தரப் பணியாளர்கள் 45 பேர்..  பகுதி நேரப் பணியாளர்கள் 400 பேர் அத்தனை பேருக்கும் என் மேல் அதிக அக்கறை.!

நம்ம கடை போல 5 பேருக்கு அதே கேட்டகிரியில் கடை கொடுத்து இருக்காங்கப்பா.. ஓ.. அதென்ன கடை.? டீ காபி பால் & சூப் வகைகள்.. அவ்ளோதான்.! இதுக்கா ஒரு கடை.? இல்லைங்க நல்லா போகும் உங்க ஐடியா ஏதாவது தாங்களேன்... நானா? ம்ம் சரிசரி.. யோசிச்சு சொல்றேன் இன்னொண்ணு நீங்களும் கடைக்கு வியாபாரத்துக்கு கண்டிப்பா வரணும்.

ஸார் ரெடியா வீட்டுக்கு வரவா.? இது என் டிரைவர் ராஜா! வீடும் ஆபீசும் ரெண்டு தெரு தள்ளியே.! இதுக்கு கார்! வாழ்வில் எல்லா கஷ்டமும் எல்லா ஏற்றத் தாழ்வுகளும் கண்டு வந்தவன் நான். வெளியூர் போகையில் ரயில் ஆனாலும் விமானம் ஆனாலும் இறுதி வரை வந்து என் சூட்கேசை உருட்டி இழுத்து வந்து வழியனுப்பிவிடும் வேலைக்காரர்கள் தான் எனக்கு அதிகம்.

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் இதுக்குத் தான் அதிக கூட்டம் இருக்கும் அன்னைக்கு மட்டுமாவது நீங்க கண்டிப்பா ஸ்டாலுக்கு வந்து ஹெல்ப் செய்யணும் என்றாள் என் மனைவி... சரின்னுட்டேன் விபரீதம் புரியாமல் தீவுத்திடல் கண்காட்சி ஒரு மிகப்பெரும் கடல்அங்கு போய் நான் நிற்பதா? தயக்கமாக இருந்தது ஏற்கனவே என் கார் சென்னை வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்து கிடக்கிறது.. இப்ப நான் மனைவிக்கு உதவணும்..

காலை 6 மணிக்கு எழுந்து பால்,காய்கறி வாங்கி சர்க்கரை, டீத்தூள் ஸ்டாக் வைத்து.. அத்தனையும் எடுத்துக் கொண்டு தீவுத்திடல் போக வேண்டும்... வெள்ளத்தில் என் கார் செயலிழந்துவிட என் ஒரே போக்குவரத்து ஓலா டாக்ஸி மட்டுமே.. என் மகளின் ஸ்கூட்டியும் அவ்வப்போது உதவிக்கு வந்தது.. செயலில் இறங்கினேன்.. இனி.. பொங்கல் விடுமுறை தினங்கள்.!

பத்தடிக்கு பத்தடி ஸ்டாலில் வெயில் தடுப்பு ஏதுமின்றி கல்லாப் பெட்டியில் அமரும் வாய்ப்பு எனக்கு.. தரை சமதளமாக இல்லாததால் சேர் போட்டு அமர முடியவில்லை நின்று கொண்டே இருந்தேன் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை.. கால்கள் கடுக்கும், இடுப்பு வலிக்கும், தோள்கள் கழண்டு விடும். இத்தனையையும் தாங்கிக் கொண்டுதான் நின்றேன்.

ஒரு சின்ன வேலைக்கே என்னை வேலை செய்யவிடாத என் பணியாளர்கள் நினைவுக்கு வந்து போனார்கள்.. ஆனால் என் மனதில் உற்சாகம்.. எத்தனை மனிதர்கள்.. எத்தனை குணாதிசயங்கள்.. எத்தனை விருப்பு வெறுப்புகள்.. எத்தனை வகையான எண்ணங்கள்.! மனிதர்களைப் படிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பு இந்தத் தொழில் என்பதை முதல் நாளே அறிந்தேன்.

டோக்கன் கொடுத்து, பணம் வாங்கி, சப்ளை செய்து, எச்சில் கிளாஸ்களை அப்புறப் படுத்தி, டேபிள் துடைத்து.. ஆஹா.. எனக்குள் இன்னும் சாதித்து விட்டேன் என்ற அகம்பாவம் இல்லை.. இன்னும் உழைக்க ரெடி.. நான் பிரஸ்டீஜ் பார்க்கலை இது அத்தனையும் என்னை கண்காணித்த நண்பர்கள் சொன்னது.. இதை நான் பப்ளிக்காக செய்ததும் இன்னும் பாராட்டினர்.

எனக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லை எந்த நேரத்திலும் எனக்குச் சவால் வந்தால்...மீண்டும் முதல் பரோட்டாவிலிருந்து சாப்பிடும் அந்தத் தன்னம்பிக்கை உள்ளது.. என் ஸ்டாலில்.. கால் கடுக்க நின்றதில் இடுப்பு தோள் கால் குதிகால் பாதம் அத்தனையும் வலித்தது..இரவு வீடு வந்து சாப்பிட்டுப் படுக்க 1 மணி ஆகிவிடும்.. இது மூன்று தினங்களாக..

ஒரு வழியாக எல்லாம் சிறப்பாக நடைபெற்றது.. என் அனுபவத்தில் பல தரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் நிகழ்வாக அமைந்தது இந்த வேலை.. எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு மேல் கடையைக் கழுவி சுத்தப்படுத்தி அதை அடைத்து டேபிள் துடைத்து வீட்டுக்கு வரும் போது உடலெல்லாம் அடித்துப் போட்டது போல வலி பின்னி பெடலெடுக்கும். ஆனால்...

என் வேலையை செய்யவே எனக்கு 40 ஆட்கள் இருக்கையில் நான் உடல் வணங்கி வேலை பார்த்தது மிக சந்தோஷம். நான் கடைக்கு வேலைக்கு கேட்ட ஆட்கள் எல்லாம் ஐ.டி. கம்பெனி ஹெச்.ஆரை விட மும்மடங்கு சம்பளம் கேட்டதால் களத்தில் நானே இறங்கிவிட்டேன். இறைவா இதே போல எத்துணை உயரம் உயர்ந்தாலும் இதே போல எளிமையாக இருக்கும் குணத்தைக் கொடு என வேண்டிக்கொண்டேன்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஹென்றி ஃபோர்டு உள்ளிட்ட நண்பர்கள் சிலர் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வார்களாம் நடுக்காட்டில் கிடைத்ததை வைத்து சாப்பிட்டு வாழும் அன்றைய மேன் அண்ட் வைல்ட் நிகழ்வு அது அடுத்த ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு புத்துணர்வு தருமாம்.. கோடிகளில் சம்பாதித்தாலும் குணம் ஏழையாக இருந்து பயன் இருக்காதல்லவா..?

இதோ இன்று ஒரு சாக்கு மூட்டையில் என்னைக் கட்டி சுற்றி பத்து பேர் உருட்டுக் கட்டையால் அடித்தது போல உடலெல்லாம் வலி இருக்கட்டுமே..
இது என் ஆணவத்தை அழித்த வலி.. வசதிகள் பல இருந்தாலும் கொஞ்சமாவது உடலுழைப்பு வேண்டும்  என எனக்கு உணர்த்திய வலி.. சிந்தித்து பார்க்கிறேன் என் தவறுகளை.. அதை நான் மாற்ற வேண்டும்.. 

இந்த  சுகமான வலியை அனுபவிக்க வேண்டும்.. ஈகோ இன்றி நான் செய்த வேலைகள் தான் என் அடையாளம்.. இதில் ஒரு ரூபாய் லாபம் எனினும் அது ஒரு கோடிக்குச் சமம்.. ஆயிரம் வசதிகள் இருந்தாலும் ஆத்ம திருப்தியைத் தருவது உடலுழைப்பு ஒன்று மட்டுமே என புரிந்து கொண்டேன்.. இப்போது என் மனசாட்சி  என்னை உறுத்தவே இல்லை.

இது பொருட்காட்சியல்ல... என் மனசாட்சி... 

No comments:

Post a Comment