Wednesday 6 January 2016

22. அங்கண்மா ஞாலத்து...

#ஆண்டாள்_பெருமை

ஹே.ஹே.ஹே.. இந்த பாஷா யாருக்கும் கெட்டது செய்யமாட்டான்.. தன்ன நம்பி வந்தவங்கள கைவிடவே மாட்டான்.. என்னை நம்பாம கெட்டவங்க அதிகம்.. நம்பிக் கெட்டவங்க யாருமில்லை இப்ப முடிவு பண்ணிக்கோங்க இந்த மாணிக் பாஷாவா இல்ல அந்த மார்க் ஆண்டனியா.? இப்படி பாஷா படத்தில் ரஜினி கேட்டதும் எல்லா பெரிய டான்களும் பாஷாவை கையில் முத்தமிட்டு ஏற்றுக் கொள்ளும் காட்சி நினைவிருக்கிறதா.!

அப்படி ஒரு காட்சியை ஆண்டாளும் பாசுரத்தில் வைத்திருக்கிறார் உலகின் பெரும் அரசர்கள் யாவரும் திருமால் வசம் சரணடைய அவன் காலடியில் வந்து காத்திருக்கிறார்கள் என்று. பார்த்தால் பசி தீரும்.. பாவம் தீருமா.? கண்ணனின் கண் பார்வை நம்மீது பட்டால் அது சாத்தியம் என்கிறார் அதற்கு அவனைச் சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியில்லை என்கிறார் ஆண்டாளின் உவமைத் திறன் மிளிரும் மற்றொரு பாடல் இது.

அலைகள் தாலாட்ட திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் நாரணன் அவரைக் காண உலகை கட்டியாளும் பெரிய சக்ரவர்த்திகள் அனைவரும் தங்கள் பராக்கிரமத்தை மறந்துவிட்டு அக்கடலோரம் வந்து அவன் செம்பாதங்களை தொழுது நிற்கிறார்கள். அவர்களோடு அடியவர்களாகிய நாங்களும் நிற்கின்றோம் எங்களை மெல்ல கண் திறந்து பார் கண்ணா என சொல்லி வைக்கிறார் பாருங்கள் ஒரு உவமானம்.அடடா என்ன அழகு.!

மெல்லக் கண்விழிப்பாய் கண்ணா மெல்ல மெல்ல... ஒரு கால் சலங்கை மணியின் வாய் பிளவு போல.. செந்தாமரைப் பூ மலர்வதைப் போல மெல்லக் கண் திற என்கிறார்.. எவ்வளவு அழகியல் பாருங்கள்.. சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்தது போல நீ விழித்து உன் பார்வை எங்கள் மீது பட்டால் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து போய்விடும் என்கிறார். இது ஆண்டாள் கண்ணனை துயில் எழுப்பும் மூன்றாம் நாள் பாடல்.

எனக்கென்னவோ 3 நாட்களுக்கு முன்பே விழித்துக் கொண்ட கண்ணன் ஆண்டாளின் தமிழமுதைப் பருகுவதற்காகத்தான் தூங்குவது போல நடிக்கிறான் என்றே நினைக்கிறேன். அவன் பொல்லாத கள்வன் அல்லவா. படிக்கும் நமக்கே இவ்வளவு இன்பமென்றால் பாடு பொருளான அவனுக்கு! நிஜத்தில் கண்ணனைக் கட்டிப் போட்டது யசோதையல்ல ஆண்டாள் தான்.

மார்கழி 22 ஆம் நாள் பாடல்...

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment