Monday 11 January 2016

27. கூடாரை வெல்லும்...

#ஆண்டாள்_பெருமை

இந்த காலத்து மாடர்ன் பெண்கள் ஜீரோ டயட் என்னும் பேரில் கொலை பட்டினி கிடந்து பொடி டப்பாவில் எல்லாம் லஞ்ச் கொண்டு செல்வதைப் பார்க்கிறோம்.. ஆண்டாள் காலத்திலெல்லாம் இப்படி டயட் கிடையாது ஆண்டாள் கேட்கும் சாப்பாடு என்ன தெரியுமா தட்டு நிறைய பால் சோறு இட்டு அதிலே கரண்டி கரண்டியாய் நெய்யை விட்டு அந்த பாலும் நெய்யும் முழங்கை வழியே சர்ரென சரிவில் இறங்கும் சைக்கிள் போல வழிய வழிய சாப்பிட வேண்டும் என்கிறார். எவ்வளவு கொழுப்புச்சத்து மிகுந்த உணவு.!

ஏற்கனவே பாலாம் அதுல நெய்யாம்.. இதெல்லாம் ஆயர்பாடியில் உள்ள பசுக்களின் பால் வளத்தையும் அவர்களுக்கு இதெல்லாம் அன்று விலை அதிகம் உள்ள பொருளாக இருந்திருக்காது என்பதும் தெரிகிறது. அன்று எல்லாமே ஹோம் மேட்.. நாம தான் இப்ப ஜங்புட் பிடியில் இருக்கிறோம். சோறு மட்டும் ஆடம்பரமாக இருந்தா போதுமா?அதை சாப்பிடப்போறவங்க அலங்காரமா இருக்க வேணாமா! அந்த சாப்பாட்டை சாப்பிடப் போகும் முன் என்னென்ன ஆடைகள் என்னென்ன ஆபரணங்கள் அணியவேண்டும்.? 

இதோ காஸ்ட்யூம் & பேஷன் டிசைனராக மாறி ஆண்டாள் ரெஃபர் செய்கிறார்.. கைகளில் அணிய தங்கவளைகள், இருதோளிலும் அணிய கைவங்கிகள், தங்கப்பூ போன்ற பெரிய தோடுகள், அதற்கு மாட்டல்கள், காலணிகள், இன்னும் பல நகைகள் அதுக்கு மேட்ச்சா உயர்ந்த ஆடைகள் இப்படி ஜோய் ஆலுக்காஸ் மாடல் போல கிளம்பி வந்து அதன் பிறகு தான் அந்த பால்சோறை அனைவரும் ஒன்றாகக் கூடி பின்பு சாப்பிடணுமாம். இத்தனையையும் பகைவரையெல்லாம் வெல்லும் கோவிந்தனைப் பாடி..

பயனைடைந்து நாங்கள் பெறும் பரிசுகள் என்கிறார். அது சரி தினமும் பாலும் நெய்யும் சாப்பிடும் பெண் உருவத்தில் பிந்துகோஷாக அல்லவா இருப்பாள்.. பின் ஏன் ஆண்டாள் அப்படிக் கேட்டார்..!பருத்திவீரன் படத்தில் ப்ரியாமணியை அவரது தந்தை வயது வந்த பெண்பிள்ளை என்றும் பார்க்காமல் மூர்க்கமாக தாக்குவார்.. அவர் அடித்து முடித்ததும் ஆவேசமாக ப்ரியாமணி பாட்டி கையிலிருந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கி அதிலிருக்கும் கறிச்சோற்றை அள்ளியள்ளி தின்று கொண்டே பாட்டியிடம் சொல்லுவார்..

இந்த அடி எல்லாம் தாங்க உடம்புல தெம்பு வேணாம்.. இன்னும் ரெண்டு கறியை போடு என்பார். அதே போலத் தான் சதா கண்ணனை நினைத்து நினைத்து உருகி உருகி அந்த ஏக்கத்தில் நிற்கவும் அவன் புகழ் பாடவும் ஒரு தெம்பு வேண்டுமல்லவா.. அவனை உருகி நினைக்க நினைக்க உடம்பில் சேரும் போஷாக்கும் உடலில் தேங்காமல் கரைந்தோடி விடும் அல்லவா.. ஆகவே நெய்யும் பாலும் கூட ஆண்டாளுக்கு ஜீரோ டயட் தான்.

மார்கழி 27 ஆம் நாள் பாடல்...

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment