Thursday 7 January 2016

23. மாரி மலைமுழைஞ்சில்...

#ஆண்டாள்_பெருமை

சிங்கத்தை நீ காட்டுல பார்த்துருப்ப சர்க்கஸ்ல பார்த்துருப்ப டிவில பார்த்து இருப்ப படத்துல பார்த்துருப்ப நேர்ல பார்த்துருக்கிறியா பாக்குறியா பாக்குறியா என சிங்கம் படத்தில் ஹைடெசிபலில் சூர்யா பேசும் வசனம் நினைவிருக்கிறதா.! அதுபோல கத்தாமல் அதிகாலையில் துயிலெழுப்பும் வகையில் மென்மையாய் ஆண்டாள் பாடுகிறார் கண்ணன் எனும் சிங்கத்தை.

அடைமழைக் காலத்தில் தன் மலைக்குகையில் உறங்கி ஓய்வெடுத்த சிங்கம் அக்காலம் முடிந்ததும் விழித்தெழுந்து கண்ணில் தீ பறக்க வீரமாய் ஒரு பார்வை பார்த்து அதன் பிடரியை சிலிர்த்து உடம்பை உதறி நெட்டி முறித்து நான்கு பக்கமும் பார்த்து பின் கம்பீரமாக கர்ஜித்து தன் குகையை விட்டு வெளியேறுவது போல காயாம்பூ நிறக் கண்ணா நீயும் எழுவாயாக.

உன் பரந்த மாளிகையிலிருந்து வெளியேறி உனக்காக போட்டு இருக்கும் சிங்காசனத்தில் அமர்ந்து நாங்கள் உன்னிடம் கேட்டதை சீர் தூக்கிப் பார்த்து எங்களுக்கு வரமருள வேண்டும் என்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தியாவின் புவியியல் அமைப்புப்படி குஜராத் மாநிலத்துக் காடுகள் தான் சிங்கங்கள் வாழ்வதற்கான சூழல் அமையப் பெற்றவை

தமிழகத்திலோ ஶ்ரீவில்லிப்புத்தூரிலோ சிங்கங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை.. இருப்பினும் மலைக் குகையில் இருந்து வெளிப்பட்ட சிங்கம் என்பது அவர் காலத்து யாத் ரீகர்கள் யாரோ சொல்லக் கேட்டு எழுதி இருக்கலாம் இருப்பினும் அதன் பார்வை அதன் சுபாவம் இதெல்லாம் கேட்டு உள்வாங்கி கற்பனையில் இப்படி எழுதியதும் மிகுந்த ஆச்சர்யம் தான்.

சிங்கத்தின் பிடரி மயிர்க்கு வேரி மயிர் எனப்பெயர் அது வேர்க்கும் போது ஏற்படும் அரிப்பில் தான் அது தலையை சிலிர்க்குமாம்.. சிங்கக் கூட்டத்து தலைவனை அதன் பிடரி மயிர் மணத்தை கொண்டு தான் பிற சிங்கங்கள் தெரிந்து கொள்ளுமாம்.. இந்த அறிவியல் எல்லாம் தாண்டி ஆண்டாள் கண்ணனை சிங்கம் எனப்பாட நரசிம்ம அவதாரம் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். அவர் ஓங்கி அளந்தா உலகமே மூன்றடி தானே.

மார்கழி 23 ஆம் நாள் பாடல்...

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment