Sunday 27 December 2015

5. மாயனை மன்னு...

#ஆண்டாள்_பெருமை

நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.

இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்திருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

ஆனால் எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில்..

தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும்  என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.

மார்கழி 5 ஆம் நாள் பாடல்..

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment