Sunday 27 December 2015

11. கற்றுக் கறவை...

#ஆண்டாள்_பெருமை

இடையோ இல்லை.. இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல அசையும்.. என எம்.ஜி.ஆர் படப் பாடலையும், உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா.. மின்னல் இடை அல்லவா..! சிவாஜிப் பட பாடலையும் கேட்டிருப்போம்.

இஞ்சி இடுப்பழகி, ஒல்லிக் குச்சி உடம்புக்காரி,போன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சொல்லப்படும் உவமைகள் போல ஆண்டாள் தன் பாடலில் இடை பற்றி குறிப்பிடுகிறார். ஆண்டாளின் உவமையில் அவளது இடை பாம்பின் படம் போல என்கிறார். சரேலென விரியும் போது தான் அது தெரியும் அதற்கு முன் அது இருக்கிறதா என்பதே தெரியாது என்கிறார். எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்.

கன்றுகளோடு கறவைப் பசுக்களும் கூட்டமாக நிற்க பாலைக் கறந்து கொண்டிருக்கும் ஆயர் குலத்தினர் பாலைக் கறப்பதிலும் தம்மை எதிர்க்கும் பகைவர் குல வேரை அறுப்பதிலும் வல்லவர்கள் அக்குலத்தில் பிறந்த தங்கக் கொடியே..புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற அல்குல் உடைய மெல்லிடையாளே.. மயில் போன்ற பெண்ணே.. 

உன் தோழியர் யாவரும் உன் வீட்டு வாசல் வந்து கார் முகில் வண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்..எதற்கும் அசராமல் உனக்கு ஏனிந்த உறக்கம்? செல்வச் சீமான் பெற்ற செல்லப்பெண்ணே நீ அசையாமல் படுத்துறங்கும் நோக்கமென்ன? எழுந்திடுவாய் எம்பாவாய் என அழைக்கிறார்.

அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது.. எப்படியோ இரண்டிற்கும் அந்த உவமை அழகாகப் பொருந்துகிறதே!

அரவமின்றி உறங்கும் பெண்ணிற்கு அந்த அரவம் விரிக்கும் படத்தையே உவமையாகச் சொன்ன ஆண்டாளின் பாசுரம் பக்தி இலக்கியத்தின் மகுடி... இதற்கு மயங்காத பாம்புகள் ஏது.! (அரவம் = பாம்பு & ஓசை)

மார்கழி 11ஆம் நாள் பாடல்...

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment