Sunday 27 December 2015

7.கீசு கீசு என்று...

#ஆண்டாள்_பெருமை

தயிர் சப்தம் போடுமா?போடும் அது தான் தயிரரவம் என்கிறார் ஆண்டாள்.. அரவம் என்றால் பெருஞ் சப்தம் பேரொலி என்னும் அர்த்தமும் உண்டு. ஆண்டாளின் அழகிய வர்ணனையைக்  கேளுங்கள்.. அதிகாலையில் வாசனைக் கூந்தலுடைய ஆயர்குலப் பெண்கள் மத்தினால் தயிர்கடைய தயிரரவம் எழும்புகிறது.

இந்த ஒரு சப்தத்திற்கு துணையாக இன்னும் சில இசைகளை  இதனோடு இணைக்கிறார் ஒரு இசைஞானி போல ஆண்டாள்.. ஆனை சாத்தான் குருவிகளின் கீச்சென்ற பேச்சு தயிர்கடையும் போது அசையும் பெண்களின் மீதிருந்து கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும் காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்.. 

இத்தனை ஒலிகளுடன் நாங்கள் கேசவனைப் பற்றி பாடும் பாட்டு இத்தனையுமா உன் காதுகளில் விழவில்லை? அல்லது கேட்டும் கேட்காதது போல இருக்குறாயா! அடி பேய்ப்பெண்ணே எழுந்திரு என்கிறார்.. உண்மையில் பேய்ப் பெண் ஆண்டாள் தான்.. கண்ணனை பேய் போல நினைத்து துதிக்க அவர் ஒருவரின்றி யாரால் முடியும்..!

மார்கழி 7ஆம் நாள் பாடல்..

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment