#ஆண்டாள்_பெருமை
சரக்கிருக்கு ரபபப்பப்பா... முறுக்கிருக்கு ரபபப்பப்பா... இந்த வரிகள் ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல பாடலிலும், சரக்கிருக்கு.. முறுக்கிருக்கு.. எனக்கெதுக்கு மனக் கவலை.. இந்த வரிகள் புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன் பாடலிலும் வரும்.. முதல் பாடல் அபூர்வ சகோதரர்கள் படம் இரண்டாவது சிங்கார வேலன் படம்.
இரண்டுமே கமல் படம் இரண்டையும் எழுதியவர் கவிஞர் வாலி.. நான் கூட இவ்வளவு பெரிய கவிஞர் வாலிக்கு இந்த இருவரிகளை விட நல்ல வரிகள் அவர் கற்பனையில் வரவில்லையா என நினைத்ததுண்டு.. ஆண்டாளின் பாசுரம் படித்த பின்பு அதற்கு விளக்கம் கிடைத்தது.. ஆண்டாளும் ஒரே வார்த்தையை வேறு வேறு பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளார்.. அது மார்கழி 6ஆம் நாள் பாடல்.
6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில் அப்படியே உபயோகிக்கிறார்.. கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன்.. ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர்.
வெள்ளி முளைக்க வியாழன் மறைய கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே.. போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்.. கரு விழிகளை வண்டாகவும் கண்ணை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள். இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படி..
பள்ளி கொண்டு உறங்குகிறாய்.? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய்.. என செல்லமாகவும் உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.
மார்கழி 13 ஆம் நாள் பாடல்...
புள்ளின்வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment