Wednesday 30 December 2015

15. எல்லே இளம்கிளியே...

#ஆண்டாள்_பெருமை

இதற்கு முன் வந்த 14 பாடல்களில் கோபியரை எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார். ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா.. "நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான்.. ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான சென்னைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும்

எயுப்புறவங்கோ : இந்தாம்மே கிளி கணக்கா இர்க்குற பொண்ணே ! எம்மாநேர்ந்தான் தூங்கிகினு இர்ப்ப?

படுத்துனு இர்க்கற பொண்ணு : ஏ.. இன்னா அல்லாரும் கீச் கீச்னு கொரல் வுடுறீங்க? கம்முனு கிடங்கோ தோ வந்துரேன்....

எயுப்புறவங்கோ : நீ மெய்யாலுமே படா கில்லாடி தாம்மே நீ இன்னா பேசுவேன்னு எங்க அல்லாருக்கும் மின்னாடியே தெர்யும்.. வுன் வாய்ல இர்ந்து இன்னா வரும்ன்னும் தெர்யும்..

படுத்துனு இர்க்குற பொண்ணு : ஆரு நானா கில்லாடி.... நீங்க தாம்மே படா கில்லாடிங்கோ!  உங்க அல்லாரையும் கண்டுகினு தான் நான் கத்துகினு இருக்கேன்.....

எயுப்புறவங்கோ : தோடா... எயுந்து வராம பட்த்துகினே சொம்மா பேசிகினே இர்க்கே! சுகுரா எயுந்துரும்மே! விர்தம் இர்க்குறத வுட அப்டி உனுக்கு இன்னா பெர்ய வேல கீது?.

படுத்துனு இர்க்குற பொண்ணு : அல்லாரும் வந்துகினாங்களா?

எயுப்புறவங்கோ : அக்காங் ! அல்லாரும் வந்துகினாங்கோ!வோணும்ன்னா நீயே வந்து கரீட்டா கீதான்னு எண்ணிக்கோ....

மதுரா புரியில பெர்ய ஆனையவே பூன மேறி மிறிச்சி கொன்னவரு... எதுக்குரவன் நெஞ்சுல இர்க்குற மஞ்சா சோத்த எட்த்து அவன் ஆணவத்த உண்டுல்லைன்னு ஆக்குனபரு..அவர பத்தியே பாடினு இர்ப்போம் எயுந்து வா கண்ணு.. 

சென்னைத்தமிழ் பேசுபவர்கள் ஆண்டாளைப் படித்தால் இப்படித்தான் பேசுவார்களா எனக் கேட்டால் இல்லை அவர்கள் நல்ல தமிழுக்கு மாறி விடுவார்கள் என்பேன்.. ஏனெனில் பக்தியில் தமிழ் வளர்த்த தங்கத் தாரகை இதய தெய்வம் புரட்சித்தலைவி நிரந்தர முதல்வர் எங்கள் அம்மா ஆண்டாள் அருளிய பாசுரங்கள் அப்படி.

மார்கழி 15ஆம் நாள் பாடல்...

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment