Sunday 27 December 2015

12. கனைத்து இளம்...

#ஆண்டாள்_பெருமை

நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்னும் சொற்றொடரை சுபிட்சத்திற்கும் செழிப்பிற்கும் உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆண்டாள் வீட்டுச் சுபிட்சத்திற்கு இதை ஒப்பிடுகிறார்.. போகிற போக்கில் தாய்ப்பாசம், பேரன்பு இவையெல்லாம் மிருகங்களுக்கும் உண்டு என அழகாக சித்தரிக்கும் அவரது கற்பனையைப் பாருங்கள்..

தங்கள் கன்றுகளின் குரல் கேட்ட எருமைகள் தாய்ப்பாசம் பொங்க தம் கன்றுகளை நினைத்து தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன.. அப்படி சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஓடி வீடே பால் சகதியாக உள்ளது.. இத்தனை பால் தரும் செழிப்பான மாடுகள் பல வைத்திருக்கும் செல்வந்தனின் தங்கையே..

மார்கழி மாதம் பெய்யும் அதிகாலை பனியின் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருக்க நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம்.. இராவணனை வதம் செய்த இராமன் பேர் பாடுகிறோம் நீயும் வந்து வாய் திறந்து பாடு.. வா கதவைத்திற.. உனக்கு ஏனிந்த பெரு உறக்கம்.. நீ இப்படி உறங்குவது அக்கம் பக்கத்திலிருப்போர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டது எழுந்து வா பெண்ணே..

இந்த வர்ணனையைப் படித்ததும் ஒரு பால் பண்ணைக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது அல்லவா! பால் மணம் கூட மூக்கில் உணர முடிகிறது.. இது பாலின் மணம் மட்டும் அல்ல ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணம்.. ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு புனிதமானது.

மார்கழி 12ஆம் நாள் பாடல்..

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment