Sunday 27 December 2015

6. புள்ளும் சிலம்பின...

#ஆண்டாள்_பெருமை

சங்கு ஊதிட்டாங்க என்றால் இப்போது கதை முடிஞ்சது ஆள் காலி என்று தான் அர்த்தமாகிறது.. சங்கில் ஊற்றி வாயில் பால் ஊற்றினால் பிறப்பு சங்கூதி வாயில் பால் ஊற்றினால் இறப்பு என ரைமிங்காக ஸ்டேட்டஸ் போடுகிறோம் ஆனால் பெருமாளுக்கு சங்கு ஓர் அடையாளம் ஓர் ஆயுதம். 

பொதுவாக நாஸ்டால்ஜியா நினைவுகளில் நமது இளம் பிராயத்தில் காலை 6 மணிச்சங்கு மதியம் 12 மணிச் சங்கு என சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எதையும் தொடங்கும் போது ஒலிக்கும் சப்தம்.

அப்போது ஏன் இறப்புக்கு ஊதவேண்டும்? அது முடிவல்லவா?இல்லை இறப்பு மனிதர்களுக்கு மறுமையின் தொடக்கம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அமர வாழ்வின் தொடக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்படி பிறப்பு இறப்பு ஆலயம் போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை 

அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம். அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலில் இருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய அந்த சப்தம் உன் காதுகளில் விழவில்லையா.?

என கேட்டு ஆரம்பிக்கிறார்.. அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி இவர்களுக்கு அம்மா புகழ்.. ஆண்டாளுக்கு அரியின் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..?

நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது சகடனை காலால் நிறுத்திக்கொன்றது பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதயதெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்... மனதில் நாரணனை நினைத்து

முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காகவாவது எழுந்து வா என்கிறார்.

பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டாள் அரி என்னும் சப்தம் காதுகளில் விழுந்தால் போதும் என்கிறார்.. அவருக்கு அதுவே போதும்.

பின்குறிப்பு:

பாடல்களில் அரி என்று உச்சரிக்காமல் ஆபாசமாக உச்சரித்து அதற்கும் பீப் போட்டு சாங்கு பாடி தனக்கே சங்கு ஊதிக் கொண்டவர்களின் சங்கொலி பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை.

மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

No comments:

Post a Comment