Wednesday 30 December 2015

16. நாயகனாய் நின்ற...

#ஆண்டாள்_பெருமை

பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.

இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.

நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில்  ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.

ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.

இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக்  குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.

மார்கழி 16 ஆம் நாள் பாடல்...

நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment