Tuesday 17 December 2013

திருப்பாவை - 1

ராஜி சங்கர் இந்த திருப்பாவை பகிர்வுக்கு நண்பர்களை அழைத்த போது நானாக போய் ஆர்வத்துடன் கலந்து கொண்டதற்கு திருப்பாவை மீதுள்ள காதலும் முன்பு ஒரு பாவை மீது வைத்திருந்த காதலும் தான் காரணம்... ( அது பழங்கதை) இனி மார்கழி 12ஆம் பாடல்...

எனக்கு ராஜி தந்த முதல் வாய்ப்பு 12 வது பாடல்... !!! மிக்க மகிழ்ந்து போனேன் மெய் சிலிர்த்தும் போனேன்... ஏனெனில் ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்!! ஏதேச்சையாக அமைந்து விட்ட இவ் வாய்ப்பில் அந்த பன்னிரு ஆழ்வார்கள் யார் யார் என்று பார்த்தவிட்டு திருப்பாவைக்குள் நுழைவோம்... பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,பெரியாழ்வார்,ஆண்டாள்,குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார்....இவர்கள் பன்னிருவரும் தொகுத்ததே நாலாயிரத் திவ்ய பிரபந்தம்....


இனி 12ம் பாடல்....


கேதார கெளள ராகம்.....                     ஆதி தாளம்.......

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


விளக்க உரை:

இளங் கன்றுகளை உடைய எருமைகள் கனைத்து தம் கன்றுகளுக்கு பரிவு காட்டி, அக் 

கன்றுகளை உள்ளத்தால் நினைத்து தம் மடிகளின் வழியே பால் சொரிந்து வீட்டை நனைத்து 

பால் சகதி ஆக்குகின்றன. அத்தகைய எருமைகளை உடைமைகளாகக் கொண்ட நற் 

செல்வந்தனின் தமக்கையே! மார்கழி மாதத்து பனித்துளிகள் எங்கள் தலையில் படிய உன் 

வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம். தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனைக் 

கோபத்தால் அழித்த நெஞ்சிற்கினியனான இராம பிரானைக் குறித்துப் பாடுகின்றோம். 

கதவை திறப்பாயாக! இது என்ன பெருந்துயில்? நாங்கள் உன்னை இவ்வாறு அழைப்பது 

அனைத்து வீட்டாருக்கும் தெரிந்து விட்டது... இனியாவது எழுந்து வருவாயாக!


அயிலு குப்பம் ஆண்டாளு உரை :

 (குப்பத்து பொம்னாட்டி நானு ...ஏதோ என்க்கு தெர்ஞ்சா மேறி சொல்றேன்.. பெர்ய பெர்ய   பட்ப்பு பட்ச்சவங்க மேறி என்க்கு பேஸ் தெரியாத்து... அக்காங் )

காலங்காத்தால வுட்ல இர்க்குற எரும் மாடுங்க அல்லாம் அத்தோட குட்டிங்கள 

நென்ச்சிகினு அப்டியே பீல் ஆகி குரல் கொட்க்க சொல்லோ.. அப்டியே பாசத்துல்ல மெல்ட் 

ஆயி அதுங்கோ மடில இர்ந்து பால் சொர்ந்து வூடு முயுக்கா அப்டியே காவா கண்க்கா ஓடி 

சேறா ஆய்ட்ச்சி... இப்டியாப்பட்ட மாடுங்க நெர்ய வச்சினு இர்க்க பெர்ய சீமானோட 

தங்காச்சியே.... மார்களி மாசொம் கொட்டினு இர்க்குற பனி அப்டியே தலயில உயுந்து எங்க 

மண்ட மேல்யே ஒட்டினுருக்க உன் வூட்டாண்ட வந்து நின்னுக்கினு இர்க்குறோம்... பத்து 

தல இராவ்ணன் மேல காண்டாகி அவுன குளோஸ் பண்ண இராமர நெஞ்சில நென்ச்சுக்கினு 

குஜாலா பாட்டு எட்த்துவுட்றோம்... கதவ தொற கண்ணு ! இம்மா நேரமா தூங்கினு இர்க்க? 

உன் வூட்டாண்ட நின்னு நாங்க குரல் உடறது அக்கம் பக்கம் அல்லா வூட்டுக்கும் தெர்ஞ்சு 

போச்சும்மே... சுகுரா எயுந்து வா கண்ணு....

(வட்டார மொழியில் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இது... திருப்பாவையை கேலி செய்யும் நோக்கமில்லை....)




ஆங்கிலத்தில் : ( In English )

O sister of a fortune favoured cowherd who owns cows with boundless compassion, that pour milk from their udders, at the very thought of their calves, slushing the cowshed! We stand at your doorstep with dew dropping on our heads. Come open your mouth and sing the praise of the Lord dear to our heart, who in anger slew the demon-king of Lanka. At least now, wake up, why this heavy sleep? People in the neighborhood know about you now!


பதவுரை:

இள கன்று எரும

இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை

கனைத்து

(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக்கொண்டு

கன்றுக்கு இரங்கி

(தன்) கன்றின் மீது இரக்கமுற்று

நினைத்து

(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)

முலை வழியே நின்று பால் சோர

முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)

இல்லம்

வீட்டை

நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி

சேறு ஆக்கும் நல் செல்வன்

சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த  செல்வத்தை யுடையவனுடைய

தங்காய்

தங்கையானவளே!

பனி

பனியானது

தலை வீழ

எங்கள் தலையிலே விழும்படி

நின் வாசல் கடை பற்றி

உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,

சினத்தினால்

(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்

தென் இலங்கை கோமானை

தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை

செற்ற

கொன்றொழித்தவனும்

மனத்துக்கு இனியானை

சிந்தனை இனியனுமான இராமபிரானை

பாடவும்

(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்


நீ

வாய் திறவாய்

வாய்திறந்து பேசுகிறாயில்லை,

இனித் தான்

எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்

எழுந்திராய்

எழுந்திரு;

ஈது என்ன பேர் உறக்கம்

இஃது என்ன ஓயாத தூக்கம்?

அனைத்து இல்லத்தாரும்

(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக்காரர்களாலும்

அறிந்து

(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

 
வாய்ப்புக்கு நன்றி 
@ராஜி சங்கர்......



No comments:

Post a Comment