Monday 20 June 2016

குற்றாலக் கும்மாளம் 3

#குற்றாலம்_கும்மாளம்

பகுதி -3

ஐந்தருவிக்கு சென்று இறங்கிய போது மழை வலுத்திருந்தது.. தமிழ்சினிமா க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டைக்காட்சி போல அனைவரும் நனைந்து கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.. அனைவர் முகத்திலும் சிறு குழந்தையின் உற்சாகம்.. சீறும் விமான இஞ்சின் சத்தம் போல ஐந்தருவி தன் ஐந்து வாயிலும் இரைச்சல் விசில் அடித்துக் கொண்டிருந்தது எங்கள் காதுகளில் விழுந்தது.. நனைந்து கொண்டே நடந்தோம்.

கீழே ஆஹா கண் கொள்ளா காட்சி ஃபார்முக்கு வந்த கிறிஸ் கெயில் போல ஆர்பரித்துக் கொண்டிருந்தாள் ஐந்தருவி.. ஆக்டோபஸ் போல விரிந்த அவளது 5கைகளில் இருந்தும் தண்ணீர் சிக்ஸர்கள் பறந்து கொண்டிருந்தன ரிப்பேரான பைப்பில் ஒழுகும் அளவிற்கு நீர் இருந்தாலே இங்கு குளிக்க 400 பேர் இருப்பார்கள் இப்போது 4000 பேர் நின்றனர்.கூட்டம் அலைமோதியது வான் மழை தண்ணீர் சற்று கதகதப்பாகவும் அருவி நீர் சில்லென்றும்.. ஆஹா



என்னவொரு காம்போ.. அருவிக்கு அருகில் போய் அதிர்ந்தேன்.. கூட்டமாக முறையின்றி குளித்துக் கொண்டிருந்த மக்களின் அறியாமை தெரிந்தது. ஐந்தருவியின் நடு அருவி தான் ஆண்களுக்கு இதில் பாறையை ஓட்டி ஒரு ஆள் நிற்கும் அளவிற்கு ஒரு பாறை குடைவு உண்டு அதன் வலப்புறம் பாறைக்குள் ஒரு கவிழ்த்த ஆங்கில C எழுத்து போல ஒரு குடைவு உண்டு அதில் நின்று கொண்டு பாறையில் முதுகை சாய்த்துக் கொண்டால்..

அருவி நீர் உங்களுக்கு முன்பாக விழும்.. அதாவது அருவியை ஒட்டிப் பாறையில் நீங்கள் உங்கள் முன்னால் அருவி இப்போது நீங்கள் மெல்லத் தலை நீட்டி குளிக்க வேண்டும்.. குளியல் சொர்க்கம் என்பது இது தான் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.. அந்த இடத்திற்கு இரண்டடிக்கு முன்பு நின்று தான் கைக்கெட்டும் தூரத்திலிருந்த சொர்க்கத்தை அனுபவிக்காது குளித்துக் கொண்டிருந்தனர் மக்கள் அங்கே போகவும் வழிவிடவில்லை.

அருகில் இருந்த காவல் துறையின் உதவியை நாடினோம்.. அவர்கள் உதவிக்கு வந்த சில நிமிடங்களில் அந்த சொர்க்க வாசலில் நுழைந்தோம்.. சுளீர் பளீர் என சவுக்கடி சாட்டையடி உருட்டுக் கட்டையடி என அடித்தாலும் செல்லமாக எங்களை ஆவேசமாகத் தழுவிக் கொண்டாள் ஐந்தருவி.. கால் கை விரல்கள் வெளிறி ஊறிப்போகும் அளவிற்கு 25 நிமிடக் குளியல்.. பேரானந்தம் அருவி நீர் போல எங்களுக்கும் பெருகி வழிந்தது. 

கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்து உதவிய காவலர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு நேரே வண்டி பார்டர் ரஹ்மத் கடை அங்கு நாங்கள் குளிரக் குளித்த குளியலுக்கு சூடான நாட்டுக்கோழி புரோட்டாவுடன் பசியாறினோம்.. ஐந்தருவியை விட இங்கு தான் கூட்டம் அதிகம்.. மாலை 4 மணிக்கு அறைக்கு திரும்பி ஓய்வு... இரவு 9 மணிக்கு எழுந்து மீண்டும் மெயினருவியில் அருவிக் குளியல் பிறகு சிறு ஓய்வு மீண்டும் ரஹ்மத் கடை..



இரவு மீண்டும் ஒரு பெப்பர் கோழி வறுவலுடன் இடியாப்பம் ஆம்லேட் நேராக மீண்டும் ஐந்தருவி இந்த முறை விடியற்காலை 5 மணி வரை குளியல் காருக்கு வந்து ஓய்வு பிறகு குளியல்.. பிறகு ஓய்வு.. அதிகாலை சூரியன் எழும் போது அறைக்கு திரும்பி படுத்தோம் எழுந்திருக்கும் போது பகல் 11 மணி.. கணவருடன் வந்திருந்த தங்கை ப்ரியதர்ஷினியை சந்தித்து பேசிவிட்டு மீண்டும் ஒரு குளியல் ரஹ்மத் கடையில் லஞ்ச் அப்படியே மதுரை பயணம்.



இரண்டு நாட்கள் குளித்த குளியலும் வயிற்றுக்குள் இருந்த சுவையான உணவும் தென்பொதிகைச்சாரலும் தென்றலும் சுகமாய் தாலாட்ட கார் ஏறி கண்ணயர்ந்தது தான் தெரியும் விழிக்கும் போது கார் திருமங்கலம் வந்தது.. ஒரு டீ சாப்பிட காரிலிருந்து இறங்கினேன்.. என் காதுகளில் பதுங்கியிருந்த அருவி நீர் சூடாக வெளியே வந்தது அதைத் தொட்டேன் சில்லென்றது அந்த ஒரு துளி நீரே குற்றால சுகத்தை நினைவூட்ட எனக்கும் ஒரு சிலிர்ப்பு.

நிறைந்தது.

No comments:

Post a Comment