Wednesday 31 December 2014

பாசுரம் - 38

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (38) புத்தகத்திலிருந்து...

38. எட்டாம் நூற்றாண்டில் சர்ஜரி...

இரண்டாம் நூற்றாண்டில் சுஷ்ருதர் எழுதிய நூல்களில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். தமிழிலக்கியத்தில் எனக்கு தெரிந்தவரை முதல் அறுவைசிகிச்சை பற்றி குறிப்பிட்டவர் குலசேகர ஆழ்வார். இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேர மன்னர்.!

இன்றைய கொல்லம் நகரம் அன்று கொல்லி என்று அழைக்கப்பட்டது. அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர் திடவிரதனின் மகன் குலசேகரர். பட்டத்திற்கு வந்து மெல்ல மெல்ல அரசியல் நாட்டம் குறைந்து திருமாலின் பால் ஈர்க்கப்பட்டவர். அதற்கு சாட்சியாக இருப்பதே அவரது 105 பெருமாள் திருமொழிப் பாடல்கள். இவற்றில் ஒன்றில் தான் இந்த சர்ஜரிக் குறிப்பு உள்ளது.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா!நீ,
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.

ஒரு மருத்துவன் கத்தியால் அறுத்து வடு போட்டாலும் அவனதை நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் செய்வதால் அவன் மீது நீங்காத அன்பு ஏற்படுவது போல விளையாட்டுப் போல் நீ எனக்கு விடாத துன்பம் தந்தாலும் உனக்கு அடிமை செய்ய உன் அருளையே எதிர் பார்த்து காத்திருப்பேன் என வித்துவக்கோட்டில் உள்ள பெருமானிடம் சொல்லுகிறார்.! இந்த ஊர் தற்போது கேரளாவிலுள்ளது.

பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் வித்துவக்கோடு உய்ய வந்த பெருமாள் கோவில் என்று சொல்கிறார்கள். இன்று இதைத் தேடிச்சென்று வணங்குபவர்கள் குலசேகரன் என்ற மன்னனையும் இப்பாடலையும் நினைத்துக் கொள்ளலாம். 

வாளால் அறுத்து வடு போட்டு.! அனஸ்தீஸியா வரும் வரை ஜனங்கள் பெருமாளை நினைத்துக் கொண்டுதான் வலியைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.!

- எழுத்தாளர் சுஜாதா...

No comments:

Post a Comment