Sunday 28 December 2014

காட்டுக்குள் வலைச்சிரிப்பு..

#காட்டுக்குள்_வலைச்சிரிப்பு

சிங்கம் தன் லேப்டாபில் ஆழ்ந்திருந்தது வயிற்றில் பசி குடைந்தது.. சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆனதால்.. மருந்திற்கும் கடந்த நான்கு நாட்களாய் மான், முயல், எருமை, போன்ற மிருகங்கள் கண்ணில் தென்படவே இல்லை தன் உதவியாளனான நரிக்கு இ மெயில் அனுப்பி காரணம் கேட்டிருந்தது நேற்று முன்தினம்.. நரியிடம் இருந்து இதுவரை பதிலில்லை திடீரென திரை ஒளிர்ந்தது.. நரியின் ரிப்ளை..!

சிங்க ராஜாவே நாம் மிகுந்த ஆபத்திலிருக்கிறோம்..இனி உங்களைப் போன்றவர்கள் 
உணவுக்கே வழியின்றி சாகப் போகிறீர்கள் என்றது அச்செய்தி.. சிங்கம் திடுக்கிட்டு தன் செல்போனை எடுத்து நரிக்கு டயல் செய்தது.. மறுமுனையில் "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்"பாடலின் ரிங் டோன் ஒலித்தது.."முடிவே இல்லாதது" என்ற கடைசி வரி ஒலித்து வரை பாடல் முடிந்து நீங்கள் டயல் செய்த நபர் இந்த அழைப்பை ஏற்கவில்லை என்ற அறிவிப்புடன் அந்த கால் நிறைவடந்தது.!

சினத்தில் சிங்கம் நரி நம்பருக்கு டேய் ஏன் என் கால் அட்டெண்ட் பண்ணலை? நீ என்ன பெரிய அப்பா டக்கரா..! நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என SMSடைப் செய்து கொண்டிருக்க அதை Send செய்யும் வினாடியில் நரி வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்து வணக்கம் சொன்னது.. மன்னா மன்னிக்கவும் எனது ஆண்ட் ராய்டு போனில் சீக்கிரம் சார்ஜ் குறைவதால் அதை சார்ஜ் போட்டு இருக்கிறேன்....

அதுதான் கால் அட்டெண்ட் பண்ணவில்லை தவறாக நினைக்க வேண்டாம் என்று இளைத்துக் கொண்டே சொன்னது.. ஓ.. அதுவா விஷயம் பரவாயில்லை ஏன் அப்படி ஒரு மெசேஜ் அனுப்பினாய் தகுந்த காரணம் சொல் என பலகீனமாக கர்ஜித்தது சிங்கம் (பசியினால்) மன்னா மிகப் பெரும் ஆபத்து என்றது நரி மறுபடியும்.! முட்டாளே அது தான் என்னவென்று கூறு என்றது சிங்கம் மீண்டும் பலகீனமாக.!

மன்னா நமது காட்டில் எல்லா மிருகங்களும் இணையத்தில் இணைந்து விட்டன ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்+, டம்ப்ளர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என சகல சமூக வலைத்தளங்களிலும் இணைந்துவிட்டன பேராபத்து என ஊளையிட்டது நரி ஓ...அதனால் எப்படி நான் பட்டினி அதற்கு விடை சொல் என்றது சிங்கம்.! மன்னா மிருகங்கள் இணையத்தை பயன்படுத்தி தாங்கள் பலியாகாமல் காத்துக் கொள்கின்ற விந்தை முற்றிலும் புதியது.. உமக்கு அது கொடியது என்றது நரி..!

மடையா.. நீட்டி முழக்காமல் விஷயத்தை சொல் ஒரு மானைப் பார்த்தே 4 நாட்கள் ஆகிவிட்டது என்றது சிங்கம் (மீண்டும் பலகீனமாக) மன்னா மான் முயல் காட்டு எ ருமை போன்ற மிருகங்கள் கூகுள் மேப்பில் சிங்கம், புலி, சிறுத்தைகள் உலாவும் இடத்தை தெரிந்து கொண்டு அதற்கு நேரெதிர்புறம் மேயப் போகின்றன அதுதான் உங்கள் கண்ணுக்கு எந்த மிருகமும் தென்படாததற்கு காரணம் என்றது நரி..!

என்ன கொடுமை சரவணா இது.. என்ற அரதப்பழசான சந்திரமுகி டயலாக் பிரபு போல குண்டாக இருந்த சிங்கம் வாயிலிருந்து உதிர்ந்தது.. ஆமாம் மன்னா அது தான் எனக்கும் அதிர்ச்சி என்றது நரி.! அப்படியென்றால் இணையம் வந்த பின் என்னைப்போல் இருக்கும் அசைவ விலங்குகள் உணவில்லாமல் இறந்து விடுவதா?என்ன நியாயம் இது? சர்வைவல் என்பது தவறா..?இதற்கு வேறு வழியில்லையா? பல வினாக்களை எழுப்பியது பலகீனத்திலும் சிங்கம்.. நரி கள்ளமாக புன்னகைத்தது..!

இருக்கிறது மன்னா கடவுள் எந்த இணையத்தை கொண்டு வந்து உங்களை பட்டினி போட்டானோ அதிலேயே உங்கள் உணவுக்கும் வழி வகுத்துள்ளான் என்றது நரி.. அட.! அது என்ன வழி.! என்றது சிங்கம் இப்போது ஆர்வத்தில் பலகீனமில்லாமல்.. மன்னா இணையத்தில் மிருகங்கள் உங்களை ஃபாலோ செய்கின்றனஅவற்றை அவர்கள் அறியாமல் ஃபாலோ செய்ய உகந்தது தான் ஃபேஸ்புக் என்றது நரி.!

ஃபேஸ்புக்கா.? அதில் எப்படி உணவு கிடைக்கும் நரியே என்றது குழப்பத்தில் சிங்கம். மன்னா தாங்கள் ஃபேஸ்புக்கில் ஒரு ஐடி தொடங்கி ப்ரொஃபைல் படமாக ஒரு மான் படத்தை வைத்து மான்களுக்கு முயல்களுக்கு ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அவர்களை நண்பனாக்கிக் கொண்டு சாட்டிங்கில் நயமாக பேசி அவர்களை உங்களை தேடிவரச்செய்து அடித்து உண்ணலாமே பாஸ் என்றது நரி.!

ஆஹா.. அபாரமான யோசனை ஆனால் இதை புலிகளும் செய்யுமே நமக்கு இரை கிட்டுமா யாரை நம்புவது நரியாரே.? என்ற சந்தேகத்தை எழுப்பியது சிங்கம்... உடனே நரி நாம் புலி சிறுத்தைகளை பேச்சு வார்த்தைக்கு அழைப்போம் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்வோம் மான் படம் உங்களுக்கு முயல் படம் புலிகளுக்கு..எருமை படம் சிறுத்தைகளுக்கு என ப்ரொஃபைல் படங்களை பிரித்துக் கொண்டு வேட்டையாடலாம் இதை சட்டமாக்கிவிடுங்கள் மன்னா என்றது..!

சூப்பர்.. நல்ல யோசனை உடனே சிங்கம் புலி க்ரூப்ஸ் என்ற பெயரில் வாட்ஸப்பில் ஒரு க்ரூப் ஆரம்பித்து அனைத்து புலி இனத்திற்கும் செய்தி அனுப்பிவிடு.. என்றது சிங்கம்.. ஓகே மன்னா நானும் இப்போது தான் சிறு முயல் ஒன்றை என் ஃபேக் ஐடி மூலம் நட்பாக்கி இருக்கிறேன் நாளை அது என்னை பார்க்க வருகிறது.. எங்களுக்கும் இந்த க்ரூப்பில் இடம் கொடுப்பீர்களா என்றது நரி..!

உங்களுக்கு இடமா.! இதயத்தில் இடம் தருகிறேன்.. வேண்டுமானால் ட்விட்டரில் தொடர்கிறேன்.. சிங்கம் புலிகள் இடத்தில் சிறு நரிகளுக்கு இடம் கேட்டதே தவறு என்றது அரசியல் தலைவர் பாணியில்.. சரி மன்னா என்று நரி அதிருப்தியுடன் விடை பெறும் அதே நொடியில் வேறொரு இடத்தில் மான்கள் முயல்கள் எருமைகள் எல்லாம் கூடி தங்கள் ப்ரொஃபைல் படங்களாக சிங்கம் புலி படங்கள் வைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தன.!





No comments:

Post a Comment