"தீனா கொரலு"
உனுக்கு எதிரியா இர்க்கறவன் மேல உனுக்கு காண்டு இர்ந்தாலும் அத்த வெளிய காட்டாம மன்சுக்குள்ளாரயே வச்சுகினு இர்ந்து.. எப்பொ நாம கெலிக்குற நேரம் வர்தோ அப்போ வறிக்கும் வெயிட் பண்ணி அப்பால அத்த வெளிய வுட்றவன் தான் அறிவாளி.! "காண்ட அடக்கி வுடு..நேரம் பாத்து எடுத்து வுடு".. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
[ பொருட்பால் : அதிகாரம் : காலமறிதல் : குறள் எண் : 487 ]
"தீனா கொரலு"
நெருப்ப அள்ளி மேல கொட்னது கணக்கா உனுக்கு ஒர்த்தன் கெட்டது செஞ்சாலும்.. அத்த பொர்த்துகினு அவன் மேல நீ காண்டாகாம இர்ந்தியின்னா நீ தான்பா நல்ல மன்சன்.! "கெட்டத நெருப்பா கொட்னாலும்.. அவன் மேல வெறுப்ப கொட்டாத" சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"
இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 308 ]
"தீனா கொரலு"
இன்னிக்கு வள்ளுவர் தினம் நம்மய "தல"பொர்ந்தநாளு..அவருக்கு ஒரு சலாம் உட்டுகினு ஆரம்பிக்கிறேன்.
இங்க பார்.. நீ என்னியவுட்டு பிர்ஞ்சு போவலைன்னா அத்த என் கய்ல சொல்லு கேக்குறதுக்கு சந்தோஸ்மா இர்க்கும்.. அத்த வுட்டுட்டு நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுவேன்னு போவ முடிவெட்த்துட்டேன்னா அத்த என் கய்ல சொல்லாத.. நீ திர்மப வர வரைக்கும் யாரு உசுரோட இர்ப்பாங்களோ அவங்க கய்ல சொல்லு.! " நீ பிரியாம இருந்தா கேக்குறேன் சொல்லு.. பிரியப் போறின்னா தாங்காது அந்த சொல்லு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
[ இன்பத்துப்பால் : அதிகாரம் : பிரிவாற்றாமை : குறள் எண் : 1151 ]
ஒல்கத்த படச்ச கடவுளயே நீ பிச்சை எடுக்க போன்னு சாபம் உட்டுருக்காருபா நம்ம "தல".. இந்த ஒல்கத்த படச்சவன் இத்த படய்க்கும்போதே மத்தவங்க கிட்ட கையேந்திகினு தான் பொயப்ப நட்த்தி உசுர் வாழணும்ன்னு சில மன்சங்களையும் படச்சி இர்ந்தான்னு மட்யும் வையி மவனே.. அவங்க எப்படி கையேந்தி அலையுறாங்களோ, அத்தே மேறி படச்சவனும் தெருத் தெருவா கையேந்தி அலைஞ்சு அலைஞ்சே தொலியட்டும்..! "கையேந்தரவன் பொறக்குற பூமி..அங்க கையேந்தி நிக்கட்டும் சாமி".... சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
[ பொருட்பால் : அதிகாரம் : இரவச்சம் : குறள் எண் : 1062 ]
No comments:
Post a Comment