Wednesday 7 January 2015

பாசுரம் - 48

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (48) புத்தகத்திலிருந்து...

48. கீதை படியுங்கள்..

துவாரகையில் இடையர் குலத்தில் பிறந்த மாயக்காரன் கண்ணன். அவன் நமக்கு வெகுதூரத்தில் இருப்பவனா எனில் ஆம். கிட்டத்தில் இருப்பவனா ஆம். மிகப் பெரியவனா, ஆம்.சிறுவனா ஆம்! அவன் அன்று யுத்தத்தின் நடுவில் ஓதிய கீதையை கற்காதவர்கள் உலகத்தில் ஞானமற்ற அந்நியர்கள்.

நான்முகன் திருவந்தாதியில் திருமழிசை ஆழ்வாரின் இந்த வெண்பாவில் மூணு அழகிய தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம். சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன், அணியன் கிட்டத்தில் இருப்பவன், ஏதிலர் என்றால் அந்நியர்கள்.

'ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்' என்று வள்ளுவர் சொல்லுவதில் இதைக் காணலாம்.. இம்மூன்று சொற்களில் அணியன் என்ற சொல் தற்போது வழக்கில் மலையாளத்தில் இருக்கிறது கையாள் என்ற அர்த்தத்தில். பகவான் நம் கையாளாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

சேயன்,அணியன்,சிறியன்,மிகப்பெரியன்,
ஆயன்,துவரைக்கோனாய் நின்ற மாயன் - அன்று
ஓதிய வாக்(கு) அதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலர் ஆம்,மெய்ஞ் ஞானம் இல்.

துவரை என்று துவாரகையை தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். அவர் வாக்கு என்று சொல்லுவது பகவத்கீதையை. அதை கற்காதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள். - எழுத்தாளர் சுஜாதா...

No comments:

Post a Comment