Friday, 31 January 2025

⛹️‍♂️ஆடுகளம்

#தெரு_விளையாடல்கள்

இன்று தெருக்களில் பிள்ளைகள் விளையாடுவது என்பது ரொம்ப அபூர்வம்! தொலைக்காட்சிகள் நம் வாழ்க்கையை ஆக்ரமிக்காத முற்பகுதி 80ஆம் ஆண்டுகளில் மாலை 4 மணிக்கே தெருவில் பிள்ளைகளின் ஆரவாரமும், மகிழ்ச்சி கூக்குரலும் இரைச்சலாக எதிரொலிக்கும்! விளையாடுவதற்கு அத்தனை விளையாட்டுகள்!

கில்லி, கோலி, பம்பரம், நுங்கு வண்டி போன்ற ஆட்டங்கள் களை கட்டும். டயர் உருட்டுவது போல பட்டறைகளில் உபயோகமின்றி தூக்கியெறியும் அரையடி உயர இரும்பு வளையத்தையும் அதை உருட்டிச் செல்ல முனையில் U வடிவத்தில் வளைந்த நீண்ட செல்ஃபி ஸ்டிக் போன்ற கம்பியும் வைத்து விளையாடுவோம்!

அதுவும் நூங்கு வண்டி போலத் தான்! ஆனா கொஞ்சம் காஸ்ட்லி 5 ரூபாய் தேவைப்படும்! ஆக்கர், அபிட் எடுத்து ஆடும் விதவிதமான பம்பர ஆட்டமும் அன்று பரபரப்பானது! பம்பர ஆட்டம் பற்றி நான் தனிப்பதிவே எழுதி இருக்கிறேன்! அடுத்ததாக கோலி! எலந்தைப் பழம் முதல் பெரிய நெல்லிக்காய் சைஸில் வண்ண கோலிகள்!

சோடா பாட்டிலுக்குள் இருக்கும் நீல கோலி போன்ற சிங்கிள் கலர் கோலிகள் முதல் கலைடாஸ் கோப்பின் டிசைன்கள் போல அல்லது ஓவியனின் பேலட் போர்டு போல கோலியின் கண்ணாடி மேனிக்குள் தெரியும் பலவண்ணங்களே அத்தனை அழகு! கோலி மீது இன்னொரு கோலியைக் கொண்டு அடிக்க வேண்டும்!

கட்டை விரலை தரையில் ஊன்றி நடு விரலின் முன்புறம் கோலியை வைத்து விரலை முடிந்த வரை பின்புறம் வளைத்து குறிபார்த்து எதிரே உள்ள கோலியை அடித்து தள்ளிக்கொண்டே போக வேண்டும்! நமது பவரை காட்ட இழுத்து சுண்டும் போது எதிரே இருக்கும் கோலி அடி பொறுக்காமல் நொறுங்கிவிடும்!

தன்வினை தன்னைச் சுடும் என்பது போல சில நேரம் நமது கோலியே உடைந்து போகும்! விரலால் சுண்ட சிறிய கோலிகள். பெரிய குழிக்குள் இருக்கும் கோலிகளை அடித்து வெளியே கொண்டு வர நெல்லிக்காய் சைஸ் கோலி வேண்டும்! அதை குறி பார்த்து மலிங்கா அல்லது பதிரனா போல குழியில் எறியவேண்டும்!

கில்லி கொஞ்சம் டேஞ்சர்! சொந்தமா கில்லியும் தாண்டலும் வைத்திருந்தால் அவன் கில்லியில் பெரிய ப்ளேயர். நாங்கள் அடித்த கில்லிகள் 50 குண்டு பல்புகள், 10 தெரு விளக்குகள், 20 ஜன்னல்கள், 10 சுவர் கடிகாரங்களை உடைத்திருந்தது! இந்தச் சாதனை விஜியின் பாட்டி மண்டை உடைந்த அன்று முடிந்தது!

விஜி என்கிற விஜயகுமாரின் பாட்டி மீதான மரியாதைனு உலகம் நினைத்தாலும் விஜியின் சகோதரி மீனா.. வேண்டாம் தெரு விளையாட்டுக்கு வருவோம்! அடுத்து பட்டம்! ஒரு ரூபாய்க்கு அப்போது அழகழகான வண்ணப் பட்டங்கள் கிடைக்கும்! 50 காசுக்கு இன்றைய A4 பேப்பர் சைசில் வாலுடன் கிடைக்கும்!

பெரிய பட்டம் 1 ரூபாய் பாதி நாளிதழ் சைசில் இருக்கும்! ஒரு ரூபாய் அன்று பெரிய பாக்கெட் மணி! வசதியுள்ள யாராவது பட்டம் வாங்கினால் அதைப் பார்த்து நியூஸ் பேப்பரில் பட்டம் செய்வோம்! சீன தயாரிப்புகள் எல்லாத்துக்கும் நாங்கதான் முன்னோடி!அதன் சூத்திரம் தெரியாது செய்யும் பட்டம் பறக்கும் முன்பே கிழிந்திடும்!

பறக்கும் விமானம் கண்டுபிடிக்க ரைட் சகோதரர்களே 117 முறை முயன்றபோது நாம் துவளலாமா 58வது முயற்சியில் நாங்க செய்த பட்டம் தரையிலிருந்து 6 அடி உயரத்தில் 16 விநாடிகள் பறந்து வீழ்ந்தது! அதன் பின்பு சரியான சூத்திரத்தில் பட்டம் செய்து பறக்கவிட்ட போது ரைட் பிரதர்ஸ் அளவுக்கு கொண்டாடினோம்!

பட்டம் கூட ஈஸி! அதுக்கு நூல் வாங்க பட்ஜெட் இருக்காது! எங்கடா இங்க இருந்த பச்சை நூல்கண்டை காணோம்னு டைலர் மிஷின் வைத்திருக்கும் வீட்டிலிருந்து ஒரு அக்கா கத்தும் ஒலி தெருவில் கேட்கும்! அடுத்தடுத்த ஆண்டுகளில் நாங்களே பெரிய பட்டம் செய்யும் டெக்னாலஜியை கற்று போரடித்து கைவிட்டோம்!

பொருட்கள் இல்லாத விளையாட்டுன்னா ஓடி பிடித்து ஆடுவது, கண்ணா மூச்சி, திருடன் போலீஸ், பச்சக்குதிர, சிகரெட் அட்டைகளை கல்லால் அடித்து நகர்த்துவதுன்னு ஏராளமான ஆட்டங்கள்! கொல கொலயா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ.. எல்லாம் பெண் பிள்ளைகளின் ஆட்டங்கள்!

ஃப்யூஸ் போன பல்பில் நீர் நிரப்பி அதை சூரிய ஒளியில் காட்டி அதன் எதிரே வெள்ளைத்துணி கட்டி சினிமா பிக்சர்களை போட்டு அன்றைக்கே ஃபிலிம் காட்டியிருக்கிறோம்! லேத்தில் பம்பர ஆணி அடித்தது, வளையம் தள்ள கம்பி வாங்கி வளைப்பது, பட்டம் செய்வது என எங்கள் டெக்னிக்கல் ஸ்கில்லும் நன்கு வளர்ந்தது!

ஹாக்கி, கிரிக்கெட், ஃபுட்பால், ஷட்டில், டென்னிஸ், செஸ், என ஏராளமான ஆட்டங்கள் இன்றைக்கு உள்ளன! சம்மர் கோச், ஸ்பெஷல் கோச் தாண்டி பிரத்யேக அகாடமிகள் வந்துவிட்டன! ஆனால் அன்று தெருவில் ஆடிய விளையாட்டுகளுக்கு இணையாக இன்று எந்த ஒரு விளையாட்டும் இல்லையென்பதே உண்மை!

🧚‍♂️ இதில் இல்லாத விளையாட்டுகளை நீங்களும் சொல்லலாம்🏌️‍♀️

Thursday, 30 January 2025

🐴 குதிரை வண்டி 🦄

#குதிரை_வண்டி 




அறிவியலும், விஞ்ஞானமும் வளர வளர நம்முடன் இருந்த பல விஷயங்கள் அடியோடு மாறியிருக்கும்! அல்லது வழக்கொழிந்து போயிருக்கும்! கையால் கடைப் பெயர்ப் பலகைகள் வரையும் ஓவியங்கள் எனும் தொழில் ஃபிளக்ஸ் ஃபேனர் வந்த பின்பு முற்றிலும் மாறியது ஒரு உதாரணம்! தூத்துக்குடி சாந்தா ஆர்ட்ஸ் கையால் வரைந்த போர்டுகளெல்லாம் அப்படியே தத்ரூபமாக புகைப்படம் போலவே இருக்கும்! 


இப்போது அப்படி வரையும் ஆட்களில்லை என்பதை விட அதற்கு நேரமில்லை! காலை 9 மணிக்கு டிஸைன் செய்ய ஆரம்பித்து 10 மணிக்கு பிரிண்டிங் போய் 11 மணிக்கு கடையில் போர்டு மாட்டப்பட்டுவிடும்! ஆனால் கையால் வரைவது அப்படியல்ல குறைந்தது 1 வாரம் 10 நாட்கள் தேவைப்படும்! இப்படி காலத்தில் கரைந்தது தான் குதிரை வண்டியும்! கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது! 


இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு 1880களில் துவங்கிய குதிரை வண்டியின் பாரம்பரியம் 1990 வரை நல்ல உயிர்ப்புடன் இருந்தது! மோட்டார் வாகனங்களின் புழக்கத்துக்கு பின்பு சிறிது குறைந்து, வாடகை டாக்ஸி வந்தபின் மேலும் குறைந்து ஆட்டோ வந்த பின்பு அடியோடு குறைந்து போனவை தான் இந்தக் குதிரை வண்டிகள். 70களில் பஸ் / ரயில் நிலையங்களின் வாயிலில் குதிரை வண்டி ஸ்டாண்ட்டுகளை பார்க்கலாம்.


வைக்கோல், பசும்புல் வாசனை, குதிரைச் சாணம் எல்லாம் கலந்து அந்த மணத்திலேயே ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்! குதிரையின் கண் பட்டை, அதன் முதுகில் கட்டும் தோலால் ஆன சேணம், கடிவாள பெல்டுகள் எல்லாம் அங்கு மாட்டியிருக்கும்! சில இடங்களில் கழுகின் குரலை மிமிக்ரி செய்து குதிரைகள் கனைக்கும் ஒலியும் கேட்கும்! சிமெண்ட் தொட்டிகளில் நீர் இருக்கும், புட்டபர்த்தி சாய்பாபா தலை முடி போல..


பரந்த கோரைப் புற்கள், கட்டுக் கட்டாக வைக்கோல்கள், கொள்ளு, தவிடு மூட்டைகள், லாந்தர் விளக்குகள், சாட்டைக் கம்புகள், பழுதடைந்த குதிரை வண்டிச் சக்கரங்கள், சக்கரத்தை சுற்றியடித்து பழுதடைந்த கழண்டு போன இரும்பு ரிம்கள் எனக் குவிந்திருக்கும்! வண்டிக்காரர்கள் அதை லாயம் என்பார்கள்! குதிரைகளை கட்ட கல்லால் ஆன கம்பங்கள் இருக்கும்! இரவில் வண்டியை கழட்டி சாய்த்து வைத்துவிடுவார்கள்.


குதிரை வண்டி முன் பக்கம் ஒற்றை மாட்டுவண்டி போலவே இருக்கும்! நுகத்தடியில் குதிரையைப் பூட்டியிருப்பார்கள்! பின் பக்கம் வில் போல வளைந்த கூண்டு போன்ற வண்டி அப்படியே எஸ்கிமோக்களின் இக்ளூ வடிவில் இருக்கும்! உள்ளே 3 நபர்கள் தாராளமாகவும் 5 நபர்கள் நெருக்கியும் அமரலாம். நாம் வண்டி ஏறும் போது வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்தும், இறங்கும் போது குதிரைக்கு அருகேயும் நின்று பேலன்ஸ் செய்வார்!


வண்டியில் அமரும் பகுதியில் புற்கள் அல்லது வைக்கோல் போட்டு மேலே கோணி விரித்திருப்பார்கள்! மெத்துனு உட்காரலாம் என்றாலும் சிறிது நேரத்தில் பின்னால் புல் குத்தும்! வண்டியில் ஒவ்வொருவராக ஏற வேண்டும் குதிரை வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்து முன்னால வாங்க முன்னால வாங்கன்னு நாம் முன்னேற வரவேற்பார்! வண்டியின் பின்புறம் கால் வைத்து ஏற கீழே படி போல (Foot ரெஸ்ட்) சதுர பலகை இருக்கும்! 


அதில் கால் வைத்து ஏறவேண்டும்! வண்டிக்கு முன்னே பக்க வாட்டில் கால் வைத்து ஏற இதே போல ஒரு சிறு பலகையும் உண்டு! இளைஞர்கள் சற்று பெரிய சிறுவர்கள் ஏறலாம். குதிரை வண்டிப் பயணம் ஸ்லோ சைக்கில் ரேஸ் போல ஆனால் குதுகலமாக இருக்கும்! முன்பக்கம் வண்டிக்காரருடன் அமரும் போது கால்களை கீழே தொங்கவிட முடியாது! குதிரையின் பின் பகுதி நம் கால்களிலும் உரசும். வண்டிக்காரர் சாட்டைக்கம்பு வைத்திருப்பார்.


குதிரையை விரட்ட அதனை சுழட்டுவார்! அவ்வப்போது அந்த சாட்டை நம்மையும் தீண்டும்! சில நேரம் குதிரை நகராது முன்னும் பின்னும் இழுக்கும் அப்போது சுளீர் சுளீர்னு நம்ம ‘அண்ணா’ போல குதிரை மீது சாட்டையை சுழற்றுவார்! சில நேரங்களில் குதிரைகளுக்கு அது வலிக்காமல் இன்னும் நல்லா அடி என்பது போல நிற்கும்! சில நேரம் வேகமெடுத்து ஓடும்! பயணங்களில் குதிரை வண்டி நன்கு குலுங்கும் என்பதால்..


நீண்ட தூர குதிரை வண்டிப் பயணம்  உடல் வலியைத்தரும்! நகரத்தை விட்டு சற்று வெளியே வந்துவிட்டால் வண்டிக்காரர் சாட்டைக் கம்பை வண்டி சக்கரத்தின் ஊடே வைக்க டக டக டகவென எழும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து குதிரை வேகமாக ஓடும்! அவ்வப்போது ஹை, ஹை, டுர், டுர்ரா, என வண்டிக்காரர் எழுப்பும் ஒலி தான் ஆக்ஸிலேட்டர்! வண்டிக்காரர் ஓரமா போ, வழிவிடு சார் என கத்துவதும் டகடக ஒலியும் தான் குதிரை வண்டியின் ஹாரன்! 


குதிரை வண்டிகளுக்கு ரிப்பேர் பார்க்கும் கொல்லன் பட்டறைகள், குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் இடம், புல், வைக்கோல் விற்கும் இடம் போன்றவை இருக்கும்! இன்று நாம் பயணம் செய்யும் ஆட்டோ பெட்ரோல் பங்க் போவது போல அன்றைக்கு புல் வாங்குமிடம், லாடம் அடிக்குமிடம் என்று வண்டியை நிறுத்துவதும் உண்டு! நிற்கும் குதிரைக்கு லாடம் அடிப்பதை எல்லாம் இன்றைய கிட்ஸ் பார்த்திருக்க மாட்டார்கள்! 


குதிரை வண்டியில் எல்லாரும் அமர்ந்ததும் பின்புறம் செக்போஸ்ட்டில் குறுக்கே உயர்த்தும் கம்பு போல ஒரு முனையில் கொக்கி போல வளைந்த கம்பி இருக்கும். அந்த கொக்கியை எதிர் முனையில் உள்ள வளையத்தினுள் லாக் செய்துவிட்டால். யாரும் விழ மாட்டார்கள்! அதைப்பிடித்துக் கொண்டே பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! சில வண்டிகளின் முன்னும் பின்னும் படுதாக்கள் இருக்கும்! மழையிலிருந்து நம்மை   காக்க! 


குதிரை வண்டிக்கு வாடகை 50 பைசா 75 பைசான்னு கேட்பாங்க  டவுனில் இருந்து வீடு வர 5 பேருக்கு அதிக பட்சம் 1.25 ரூபாய் தான் ஆகும். வண்டி அடியில் வயிற்றுப் பகுதியில் சாக்குப் பை கட்டி அதில் வைக்கோல் புல்லை லோடு செய்திருப்பார்கள். அங்கு ஒரு இரும்பு வாளியும் தொங்கும்! வீட்டில் நம்மை இறக்கிவிட்ட பின்பு கொஞ்சம் குதிரைக்கு தண்ணீர் கிடைக்குமான்னு பணிவா கேட்பாங்க அதுக்குதான் அந்த இரும்பு வாளி!


மனுசன் குடிக்கிற தண்ணியே காசுக்கு விற்குற காலம் இது! ஆனா அன்னிக்கு குதிரைக்கெல்லாம் தண்ணி தரும் அளவு நம்மிடம் நிறைய தண்ணீர் வசதியும் இருந்தது நல்ல மனசும் இருந்துச்சு! குதிரைகளை சாட்டையால் அடிச்சா கூட பாவம் அடிக்காதிங்கனு அன்பு காட்டின நம்ம மக்கள் இன்னிக்கு நடுரோட்டில் மனுசனை அடிச்சாகூட நின்னு மொபைலில் படம் எடுத்துகிட்டு இருக்காங்க! எங்க போச்சு அந்த மனித நேயம்?! ஆச்சரியமா இருக்கு! 


மக்கள் விலங்குகளை தம்முடனே வளர்த்த போது இருந்த அன்பும், அக்கறையும் இந்த அறிவியல் காலத்துல குறைஞ்சிருக்கு! குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லாம் காலத்தால் அழியாதவை? இன்னும் தமிழ்நாட்டில் குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருக்குற ஊரு பழனி! இன்றும் அங்க குதிரை வண்டி ஸ்டாண்ட் கூட பார்க்கலாம்! என்ன தான் வழக்கொழிஞ்ச விஷயம்னு இருந்தாலும் சில சாகாவரம் பெற்ற விஷயங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க..


ஆமா! அதில் இந்தக் குதிரை வண்டியும் ஒண்ணு 🐴 

💜 சீர் வேலன் 💜 💕

#வேலண்டைன்_டே

சங்க காலத்தில் குறிஞ்சி நிலத்தில் வேழமலை என்ற மலை நாட்டில் ஒரு வேலவன் கோவில் அமைந்திருந்தது. அம்மலையின் அரசன் தான் சீர்வேலன்! கூர்வேல் கொண்டு பகையறுக்கும் சீர்வேலன் என்று அவனை கபிலர் மட்டுமல்ல வேம்புலியும் பாடிய பெருமையுடையவன்! ஒரு முறை காட்டுக்குள் அவன் வேட்டைக்கு சென்ற போது ஒரு இளம் ஜோடிகள் ரத்த காயத்துடன் விழுந்து கிடந்ததைப் பார்த்தான்!

உடனே அவர்களை மீட்டு விசாரிக்க அது மலைக்கு கீழே உள்ள தேசத்து மன்னனின் மகன் என்றும் அந்தப் பெண் அவனது காதலி ஆனால் ராஜ குலம் அல்ல என்பதும் தெரிந்தது! நாடாளும் மன்னர் மகன் என்று தெரிந்தும் அஞ்சாமல் சீர்வேலன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து பகைவர்கள் எளிதில் நெருங்க முடியாத வேழமலையின் உச்சியில் அவர்களை குடியமர்த்தினான்!

மகனின் திருமணத்தைப் பற்றி அறிந்ததும் சினத்துடன் மலையை நோக்கி படையெடுத்து வந்த மன்னனின் படையை மலை மீதிருந்து சமயோஜிதமாக அம்புகள் எய்தி, மலைப் பாம்பு, உடும்புகளை வீசி, பெரிய பாறைகளை உருட்டி விட்டு கதறி சிதறி ஓடச் செய்தான் வேலன்! இந்தச் செய்தி உலகம் முழுவதும் அமெரிக்க காட்டுத்தீ போல பரவ காதலர்கள் எல்லாம் வேழமலை நோக்கி குவிந்தனர்!

வேலனும் வந்த ஜோடிகளை தீர விசாரித்து மெய்யான காதலர்களை மட்டும் அங்கே அனுமதிப்பான்! பின்னர் அவர்களுக்கு உடும்புக்கறி சமைத்து கறிக் களி உருண்டை செய்து (களிக்குள் கறி) விருந்து பரிமாறி அவர்களை வேழமலை உச்சிக்கு குடியேற அனுப்புவான்! அந்த வேழமலை முழுவதும் காதலர்களின் மலையானது! அங்கு காதலர்கள் பெருகியது போல வேலனுக்கு எதிரிகளும் பெருகினர்.

ஆனால் கீழிருந்து மலைமீது படையெடுத்து வேலனை வெல்வது மாமன்னர்களாலேயே முடியாமல் போன வரலாறு இருந்தது! வேலனை வஞ்சகத்தால் வீழ்த்த நினைத்தனர்! அவர்களே முழு பயிற்சி தந்து ஒரு போலியான காதல் ஜோடியை அவனிடம் அனுப்ப வேலனும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு திருமணமும் நடத்தி மலை உச்சிக்கு அனுப்ப.. அந்தத் திருமணத்தின் மறுநாள் அந்த ஜோடி..

அண்ணே 8 வகையான காடை, போன்லெஸ் கவுதாரி, காட்டுக் கோழி வருவல், காட்டாற்று கெண்டை மீன் குழம்பு, திணை, தேன், எல்லாம் உங்களுக்காவே நாங்க சமைச்சிருக்கோம் என்று வேலனை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைத்தனர்! என்னடா இந்த ஆட்டம் புதுசா இருக்கேன்னு உணராது அந்த ஜோடியின் வீட்டுக்கு சென்ற வேலனை அந்த ஜோடி உணவில் நஞ்சை கலந்து கொடுத்து கொன்றனர்!

அங்கு குடியேறி இருந்த மற்ற ஜோடியினர் இதை கண்டறிந்ததும் துரோகம் செய்த இருவரையும் மலையில் இருந்து தள்ளி கொன்றனர்! காதலர்களை சேர்த்து வைக்க தன் வாழ்வையே தியாகம் செய்த வேலனின் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாட அங்கிருந்த அனைவரும் முடிவெடுத்து கொண்டாட ஆரம்பித்தனர்! இந்த நாளை அவர்கள் வேலன் டே என்று கொண்டாடி வந்தனர்! பின்னாளில்..

நம் நாட்டில் ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்தபிறகு அந்த வேலன் டே தான் வேலண்டைன் டே என்று மாறியது!

இதெல்லாம் நம்மில் எத்தினி பேருக்கு…

💖💖 வாழ்க காதல் 💚💚 வாழ்க தமிழ் மாமன்னன் சீர்வேலன் 💖💖

Wednesday, 29 January 2025

🫕 பேச்சில் சமையல் 🫕

#அம்மாவின்_சமையல்_பேச்சு  




பேச்சிலேயே சமையல்னா “வாயில வடை சுடுறதான்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்கிறது! பொதுவா அவன் நல்லா அல்வா கிண்டினான்பா.. என்னய்யா இப்படி போட்டு வறுக்குற.. யப்பா கடலை கருகுது.. வேணாம் என் வாயைக் கிளறாதே போன்ற சொற்றொடர்கள் எல்லாம் நமது வாய் பேச்சைக் குறிப்பவை!


ஒரு நல்ல சமையலைச் செய்து அதை திருப்தியாக சாப்பிட்ட உணர்வை சிலர் தங்கள் பேச்சில் வரமாக வாங்கி வந்திருப்பார்கள் அப்படி வரம் வாங்கி வந்தவர்களில் எங்க தனம் அம்மாவும் ஒருவர்! அம்மாவின் கைமணத்திற்கு இணையானது அவரது பேச்சு மணம்! அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது! ஒருபோதும் அவர் அதை..


பெரும் குறையாகக் கருதியதில்லை! அம்மாவிற்கு இயல்பிலேயே நல்ல க்ரியேட்டிவிட்டி! அவர் பார்த்த ஒரு சம்பவத்தை சிரிக்க சிரிக்க நல்ல உவமைகளுடன் விவரித்துக் கூறும் தனம் FM பேச்சைக் கேட்க அக்கம் பக்க நேயர்கள் அன்றே ஏராளமானோர் இருந்தனர்! அம்மாவின் சமையல் பற்றிய பேச்சுக்கு வருவோம்! 


யாராவது ஒரு சமையல் செய்முறை கேட்டால் நாம் அதை சொல்வதற்கும் அம்மா சொல்வதற்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கும்! இப்படியெல்லாம் சொல்ல முடியுமான்னு வியக்கவும் ரசிக்கவும் வைத்திடுவார்! தாளிக்க நிறைய எண்ணெய் ஊற்று என்பதை சட்டியில ‘நல்லா சளசளன்னு எண்ண ஊத்து’ என்பார்.


கடலை பருப்பு, வரமிளகா, மல்லி, மிளகு போட்டு நல்லா வாசம் வர்ற மாதிரி வறுக்கணும், கடல வாசம் கமகமன்னு வரணும், மல்லி வறுபடுற வாசம் வாசப்படி தாண்டி வீசணும், இந்த மிளகா காரலா நெடியடிக்ககூடாது என்று அவர் விவரிக்கும் போதே ஹட்ச் என்றோ ஏர்டெல் என்றோ நமது மூக்கில் ஒரு தும்மல் வரும்! ஆம்!


வறுக்குற இடத்தில் நாமும் இருப்பது போல அந்த நெடி நமக்குள் ஏறும்! கறியை நல்ல இறுக்கமா, கெட்டியா வதக்கணும் என்பதை அம்மா கறியில இருக்க தண்ணி வத்த நல்லா சுருளச் சுருள வதக்கணும்டி என்பார்! அவர் சொல்வதே அழகாக இருக்கும்! மல்லிகைப்பூ போல, பஞ்சு போல இட்லி நமக்கு நல்லா தெரியும்!


அம்மா மென்மையான இட்லியை நல்லா திர்னவேலி அல்வா மாதிரி இட்லி என்பார்! அல்வா மாதிரி இட்லி கரகரன்னு காராபூந்தி போல சட்னி என்னும் அவரது உவமை எங்க வீட்டில் பிரபலமான ஒன்று! அப்பா ஸ்வீட் மாஸ்டர் என்பதால் இந்த உதாரணங்களை அம்மா சொல்லியிருக்கலாம்! அதிலும் அவர் க்ரியேட்டிவ் மின்னும்!


கொழம்பு கொதிச்சதும் இறக்கி வச்சி உள்ளங்கை நெறைய மல்லித்தழைய எடுத்து கொரங்கு மாலைய பிச்ச மாதிரி பிச்சு போடு என்பார்! பிச்சு போடு ஓகே ஆனா அங்கும் குறும்பாக ஒரு குரங்கு வந்து குதித்திடும்! நல்லி எலும்பு கொழம்பு வச்சா பாவாட கழண்டா மாதிரி கறி எலும்பிலிருந்து கழண்டு விழணும் என்பார்!


நெஞ்செலும்பு கறியின் சவ்வு போன்ற மென்மையான எலும்பை தேங்காய்சில்லு மாதிரி கரிச்னு இருக்கும் கடிச்சு சாப்பிடுனுவார் குழைந்த சோறை அம்மா ‘நல்லா கெட்டித் தயிர் போல சோத்தை வடிச்சு வச்சிருக்கேன்யா எனும் போது எனது வியப்பு இன்னும் அதிகரிக்கும்! எப்படி இதெல்லாம் இவருக்கு இயல்பா வருதுன்னு!


சட்டியில நல்லெண்ணெய் ஒரு கரண்டி ஊத்தி 10 உரிச்ச சின்ன வெங்காயம், 4 பச்ச மொளகா கீறிப் போட்டு நல்லா பொன்னா (தங்கநிறம்) வறுத்துட்டு 2 துண்டு கருவாடு போட்டுன்னு அம்மா சொல்லும் போதே வாயில் இருந்து 2 சொட்டு உமிழ்நீர் கூட சொட்டலைன்னா அவன் மனிதப் பிறவியே இல்லை எனலாம்! 


சப்பாத்திக்கு அம்மா சொல்லும் ஒரு உதாரணம் “உங்கப்பா சப்பாத்தி சுட்டா மட்டும் தண்ணியில நனைச்ச பேப்பர் மாதிரி சப்பாத்திய ஈசியா பிய்க்க வருது நாம சுட்டா துணிய பிச்ச மாதிரி இருக்குனு! அம்மாவின் இந்த உவமை எத்தனை ரசனை மிகுந்தது என்பதை ஆழ்ந்து கவனித்தால் புரியும்! அவ்வளவு அர்த்தமிருக்கும்!


கெட்டி சாம்பாருக்கு அம்மா சொல்லும் உவமை இலையில நத்தை மாதிரி சாம்பார் ஊர்ந்து வரணும் என்பார்! அம்மாவின் பேச்சில் தான் எத்தனை அழகியல் ! பாட்டி, மாமா, சித்தி, அப்பா, அண்ணன் தம்பி என ஒரு பெரிய சமையல் குடும்பத்தில் பிறந்தது நான் பெற்ற பாக்கியம்! ஆம்! என்றென்றும் எனது நினைவில் மணக்கிறது.. 


🥘 தனம் அம்மாவின் சமையல் பேச்சு 🥘

அனுமான்

#ஆஞ்சநேயர்

நமது குலதெய்வம், பொதுவான பிரபல கோவில்களின் தெய்வம் என்பதை எல்லாம் தாண்டி நமது இஷ்ட தெய்வம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வ நம்பிக்கை இருக்கும்! அப்படி எனக்கொரு இஷ்டமான தெய்வம் ஆஞ்சநேயர்! எனது வாழ்வின் இருள் படர்ந்த சிக்கலான பல தருணங்களில் ஒளியாக வந்தவர்!

3 வேளை உணவே கடினம் என்கிற வறுமை காலத்தை வளமான காலமாக மாற்றியவர் ஆஞ்சநேயர்! ஆம் 90களில் மேடை நிகழ்ச்சிகள் செய்த போது அங்கொன்றும் இங்கொன்றும் கிடைத்த மேடை வாய்ப்புகளும் அதில் கிடைத்த சொற்ப பணமும் அற்பமாக இருந்தாலும் ஒரு வேளை பசியையாவது போக்கியது!

இந்தச் சூழலில் நாமக்கல்லில் ஒரு மேடை நிகழ்ச்சி வாய்ப்பு தேடி வந்தது! ஆம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் விழா நிகழ்ச்சி அது! நிகழ்ச்சியன்று காலையே நாமக்கல் வந்துவிட்டோம்! எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்! விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றார் மேற்கூசரை இல்லா அக்கோவிலில்!

பார்த்ததும் மெய் சிலிர்த்தது! அவரை பயபக்தியுடன் வணங்கி பின் கோவில் அருகே அமைத்த மேடையில் மாலை நிகழ்ச்சியைத் துவங்கினோம்! அன்று எங்கள் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பும் கைத்தட்டல்களும், பாராட்டும் அதற்கு முன்பு நாங்கள் கேட்டதே இல்லை! இந்த நிகழ்ச்சியே எங்களுக்கு புகழ் வெளிச்சம் தந்தது!

அந்த நிகழ்ச்சிக்கு பின்பு நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, பவானி, சேலம், கரூர் என அனைத்து ஊர்களிலும் எங்கள் கால் படாத கிராமங்களே இல்லை எனும் அளவுக்கு நிகழ்ச்சிகள் குவிந்தன! தொடர்ந்து 5 ஆண்டுகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தோம்! டிவி சினிமா வாய்ப்புகளும் எங்களைத் தேடி வந்தன!

எல்லாம் எங்கள் திறமை தான் என்றாலும் அதற்கு ஆஞ்சநேயரின் அருளும் இருந்ததாக தீவிரமாக நம்பினோம். நாமக்கல் வழியாக வேறு ஊர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று அவரை சேவித்துவிட்டே கிளம்புவோம். நாங்கள் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு விசேஷ நாட்களாக அமைந்துவிடும்!

திடீரென நாங்கள் போகும் நாளில் ஆஞ்சநேயர் முத்தங்கியில் இருப்பார், அல்லது சந்தன காப்பில் இருப்பார், அல்லது 10008 வடை மாலை சூடியபடி அருள் புரிவார்! எப்படி விசேஷ நாளன்று கரெக்டா வர்றிங்க யாரும் சொன்னாங்களா என கோவிலில் கேட்பார்கள்! அப்படி ஏதுமில்லை எல்லாமே தற்செயல் தான்!

இதனால் அவர் மீதான எங்கள் நம்பிக்கை இன்னும் அதிகரித்தது! மீனாட்சியம்மன் கோவிலிலும் முக்குறுணி விநாயகர் சந்நிதி வழியாக சுவாமி சந்நிதி திரும்பும் இடத்தில் தூணில் இருக்கும் ஆஞ்சநேயரை தேடிப் போய் வழிபடுவோம்! அவரை வழிபடும் அன்று ஏதாவதொரு நல்ல செய்தி அல்லது ஒரு நல்ல வாய்ப்பு நிச்சயம் வரும்!

ஏதாவது ஒரு பிரச்சனையில் கலங்கி நிற்கும் போதோ அல்லது முடிவு எடுக்கமுடியாத குழப்பத்திலோ திடீரென யார் மூலமாவது அவர் பெயர் உச்சரிக்கப்படும்! அந்த நொடியே மெய் சிலிர்க்கும்! டேய் நீ என்னை நினைக்காட்டியும் உன்னை நான் இன்னொருத்தர் மூலமா நினைக்க வச்சேன் பார்த்தியா என்று அவர் சொன்னது போல தோன்றும்!

வெளியூர் பயணங்களில் வழி மாறிப் போகும் சில ஊர்களில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் எங்களை வரவேற்கும்! அது இந்தப் பக்கம் வந்துட்டு என்னை பார்க்காம போனா விட்டுடுவேனான்னு அவர் கேட்கிறா மாதிரியிருக்கும்! ஆஞ்சநேயரின் தற்செயல் தரிசனம் எங்களுக்கு அமைந்த பல நிகழ்வுகள் அவர் வால் போலவே நீளம்!

{இந்த 2025 புத்தாண்டு அன்றும் ஒரு நிகழ்வு! அதை வேறொரு பதிவில் எழுதுகிறேன்}

Tuesday, 28 January 2025

அரண்மனை 5

“அரண்மனை 5” 🎥

அபின்யா தாய்லாந்து அரச குடும்பத்து ஆண் வாரிசு! இவர் லண்டனில் படிக்கும் போது அவருடன் படிக்கும் அனன்யா படேல் எனும் இந்தியப் பெண்ணை காதலிக்கிறார்! அரச குடும்பத்துக்கு தெரியாமல் இவர்கள் திருமணம் நடக்கிறது! அனன்யாவின் தோழி அபிராமி (தமிழர்) இவர்களது காதலுக்கு உதவியாக இருக்கிறார்!

அனன்யாவிற்காக லண்டனில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார் அபின்யா! அந்த வீட்டில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்! அனன்யா வயிற்றில் அரச வாரிசு வளர்கிறது! அரசல் புரசலாக இந்த செய்தி அரச குடும்பத்திற்கு போகிறது! பலத்த எதிர்ப்பு கிளம்புகிறது!

அனன்யாவை கொன்றுவிட ஆட்களை அனுப்ப முடிவு செய்கிறார்கள்! இந்த விஷயத்தை அபின்யாவின் சகோதரி அண்ணனிடம் சொல்ல! லண்டனிலிருந்து தம்பதிகள் இருவரும் வியட்நாம் அருகில் இருக்கும் அரச குடும்பத்து அரண்மனை ஒன்றில் போய் பதுங்குகிறார்கள்! அனன்யா தனது உதவிக்கு அபிராமியை அழைக்க அவர் அவரது பாட்டியோடு அந்த அரண்மனைக்கு வருகிறார்கள்!

அபிராமியின் பாட்டி அவரது கிராமத்தில் ஒரு சாமியாடி (குறி சொல்பவர்) அவர் இந்த அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் போதே பல கெட்ட சகுனங்கள் தென்படுகின்றன! இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருக்கிறது என்று அபிராமியிடம் மட்டும் சொல்கிறார் பாட்டி! பாட்டி அவர்கள் பாவம் உயிருக்கு பயந்து வந்து தான் இங்கே தங்கியிருக்கின்றனர்!

இப்போ இதை அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்கிறார் அபிராமி! இந்த அரண்மனைக்கு ஒரு ப்ளாஷ்பேக்! வியட்நாமில் போர் நடந்த போது இந்த அரண்மனையில் தான் பல இளம்பெண்களை சிறை வைத்து இருந்தனர்! அவர்களை பலவித கொடூர சித்திரவதைகள் செய்தது அந்த கொடுமையிலேயே கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் இறந்தது எல்லாம் அந்த அரண்மனையில் நடந்து இருக்கிறது!

அந்த ஆன்மாக்கள் அரச குடும்பங்கள் மீது கொலை வெறியோடு அங்கு காத்திருக்கும் போது தான் அரச குடும்பத்தை சார்ந்த இந்த இருவரும் அங்கு நுழைந்தனர்! அரண்மனையில் அரச குடும்பத்து காலடி பட்டதும் ஆவிகள் சிலிர்த்தெழுகின்றன! ஆனால் அனன்யா கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் அந்த ஆவிகள் தங்கள் மூர்க்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக காத்திருக்கின்றன!

உலகெங்கும் இவர்களைத் தேடும் அரச கூலிப் படைகள், இறுதியில் இவர்கள் வியட்நாமில் இந்த அரண்மனையில் இருப்பதை அரச பரம்பரைக்கு சொல்ல இந்த அரண்மனையின் வரலாறு தெரிந்த அரச குடும்பம் கூலிப் படைகளை திரும்ப வரச் சொல்லிவிட்டு, கருப்பு மாந்த்ரீகத்தில் கை தேர்ந்த சாமியார்களை மாறுவேடத்தில் அரண்மனைக்கு அனுப்புகிறார்கள்!

தாய்லாந்து, ஆப்பிக்கா, இந்தியா, நேபாள் என பல நாடுகளைச் சேர்ந்த மாந்த்ரீகர்கள் ஒவ்வொருவராக இந்த அரண்மனைக்குள் நுழைய அனைவரையும் ஆவிகள் விரட்டுகின்றன! அரண்மனை வளாகத்தினுள்ளேயே ஒரு புத்தர் கோவில் இருக்க அங்கு மட்டும் எந்த ஆவிகளும் நுழைய முடியாது!

அபிராமியும் பாட்டியும் அந்த கோவிலுக்குள் அபின்யாவை தங்க வைத்துவிட்டு அங்கிருந்து எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது என சத்தியம் வாங்குகின்றனர்! அனன்யாவின் பிரசவம் நெருங்குகிறது! அபிராமியின் பாட்டி இந்தத் தகவல்களை இந்தியாவில் உள்ள தலை சிறந்த மாந்திரீகர் ஒருவருக்கு அனுப்பி உதவி கேட்கிறார்!

அதே நேரம் இவர்களைப் பிடிக்கப் போன அனைத்து மாந்த்ரீகர்களும் இறந்துவிட்டதால் அரச குடும்பம் அதிரடியான ஆயுதங்களுடன் ஒரு படையை அனுப்புகிறது! முடிந்தால் வெடிகுண்டு வைத்து இந்த அரண்மனையையே தகர்த்துவிட உத்தரவிடப்படுகிறது! பாட்டி அங்கு ஒரு சிறப்பு சம்ஹார பூஜை துவங்க அதே நேரம் அரச படையும் அரண்மனையை சுற்றி வளைக்கிறது!

ஆவி ஒன்று அப்படியே அனன்யாவின் உருவம் எடுத்து அபின்யா மறைந்து இருக்கும் கோவில் வாசலுக்கு செல்ல, அப்போது அனன்யாவிற்கு பிரசவ வலி கண்டு அலற அந்த தலை சிறந்த இந்தியச் மாந்திரீகர் அங்கே நுழைகிறார்! வானில் பளீர் பளீரென மின்னல் மின்னி பெருத்த ஓசையுடன் இடி இடித்து ஹோவென பெருமழை துவங்குகிறது…

மற்றவை வெண் திரையில்.. 📽️

✍️ வெங்கடேஷ் ஆறுமுகம் ©️

🎥 காட்சிகளை டெவலப் செய்ய :

அரண்மனைக்குள் சிறைபட்ட பெண்கள் படும் சித்திரவதைகள், அந்த வீட்டில் இறந்த பெண்கள், அவர்களது சாபம் பற்றிய மாண்டேஜுகள்..

கிராமத்தில் பாட்டி குறி சொல்வது அவர் வெளிநாடு வர விரும்புவது போல சில காட்சிகள்..

ஒவ்வொரு நாட்டு மாந்த்ரீகர்களது ஆடைகள், வித்யாசமான, மாந்த்ரீகப் பொருட்கள், அவர்கள் மந்திரம்..

அரண்மனை புத்தர் கோவில் பற்றி ஒரு சிறு விளக்கம்..

இந்திய குறிசொல்லி சாமியார் பற்றி ஒரு சிறு அறிமுகம்..

மன்னர் குடும்பம் பற்றி ஒரு சிறிய மாண்டாஜ்..

தாய்லாந்து மன்னர் அரண்மனைக்கு பட்ஜெட் அதிகம்னா ஜோத்பூர், ஷோலாப்பூர்னு வட இந்திய மன்னர்களின் அரண்மனையா மாத்திக்கலாம். அதுவும் அதிகம்னா கண்டமனூர் ஜமீன், ஊத்துக்குளி ஜமீன், போடி ஜமீன்னு நம்ம ஊர் அரண்மனைகளா மாத்திக்கலாம்!

டிஸ்கஷனில் அமர்ந்தால் கதையை இன்னும் நன்கு டெவலப் செய்யலாம்..

✍️ வெங்கடேஷ் ஆறுமுகம் ©️

Sunday, 26 January 2025

🥘 திருச்சி சங்கீதாஸ் 🥘

🎵 #ருசிக்கும்_சங்கீதம் 🎵

2024 டிசம்பர் இறுதி முதல் 2025 பொங்கல் விடுமுறை முடியும் வரை திருச்சியில் பற்பல ஈவண்ட்டுகளில் இருந்தேன். என் பணி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே! வாய்ப்புள்ள இதர நேரங்களில் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஏகாதிசி அரங்கன் தரிசனம், உலகின் மிகப் பெரிய சஞ்சீவ ஆஞ்சநேயர், பட்டர் ஃபிளை பார்க், திருவானைக்கோவில், மலைக்கோவில் அடிவாரம், சிங்காரத்தோப்பு உலா என்று ஒவ்வொரு நாளும் பற்பல இனிமையான அனுபவங்கள்!

கோவில் செல்லாத நாட்களில் அசைவம் சென்ற நாட்களில் சைவம் என்று எனது உணவுத் தேடலையும் தொடர்ந்தேன் திருச்சியில் பனானா லீஃப், குரு, அஜந்தா, பத்மா கஃபே, பார்த்தசாரதி, வசந்த பவன், உட்லண்ட்ஸ், சங்கர் கஃபே, ஶ்ரீமடப்பள்ளி, சரஸ்வதி கஃபே எல்லாமே ஃபேமஸ்! ஆனால் முதல் முறையாக சங்கீதாஸ் (சத்திரம் பேருந்து நிலையம் to கரூர் சாலையில்) சாப்பிடும் வாய்ப்பு கிட்டியது! அதுவும் நான் தேர்வு செய்யவில்லை!

முக்கொம்பு வழியாக திருச்சி நகருக்குள் நுழைந்த போது ஓட்டுநர் அண்ணன் இங்கே நிறுத்தினார் நேரம் அப்போது இரவு 9:20 இன்றைய யூடியூபர்கள் பாணியில் சொன்னால் கடையோட அட்மாஸ்பியரே அல்டிமேட்டாக இருந்தது! இதுபோன்ற பெரிய ஓட்டல்களில் இரவு 9 மணிக்கு மேல் இட்லி கிடைப்பது ஐஐடியில் இடம் கிடைப்பதற்கு இணையாகும்! அப்படியே அங்கு யாராவது இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து..

நாம் இட்லி கேட்டால் சாரி சார் அவங்களுக்கு தந்தது தான் கடைசி, இட்லி தீர்ந்திடுச்சு என்பார்கள்! நானும் போய் அமர்ந்து இட்லி 1 ப்ளேட் என்றேன் சர்வர் அங்கிருந்து மறைந்தார்! உள்ளே போயிட்டு இட்லி தீர்ந்திடுச்சுன்னு அசடு வழிய வருவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இட்லியின் மீது ஆவி வழிய சுடச்சுட இட்லி சூடான சாம்பார் & சட்னி வகைகளுடன் வந்தார்! இப்போது நான் அசடு வழிந்தேன்! இட்லி இலவம் பஞ்சு மென்மை! சாம்பாரைப் பார்த்ததும்..

என் தந்தையார் ஆறுமுகம் நினைவுக்கு வந்தார்! சச்சினின் ஸ்டிரைட் டிரைவ் போல அப்பா வைக்கும் சாம்பார் தனித்துவமானது! அந்தத் தரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அற்புதச் சாம்பாரை ருசித்தேன். அருமையான தேங்காய் சட்னியும் அதோடு தந்த வெங்காயச் சட்னி, புதினாமல்லி சட்னிகளும் நாவில் சொர்க்கத்தை உணர வைத்தது! அடுத்த பிளேட்டும் இட்லி சொல்ல நினைத்த போது எதிரே சுவரில் இலை காளான் பிரியாணி என்னும்..

விளம்பர அறிவிப்பு என்னைக் கவர்ந்திழுத்தது! ஒரு பிரியாணி என்றேன்! இட்லிக்கு சொல்லாத சாரியை இப்போது சொன்னார் சர்வர்! அது மதிய மெனுவாம்! என்ன சொல்லலாம் என்று யோசித்த போது பிராமண சமுதாய திருமணச் சீரில் வைக்கும் பருப்புத் தேங்காய் போல கூம்பு வடிவ நெய் ரோஸ்ட் என்னைக் கடந்தது! இதை எல்லாம் 48 ஆண்டுகளுக்கு முன்பே பார்த்தவன் தான் இருப்பினும் தங்க நிறமும் காபிப் பொடி நிறமும் உள்ள..

நெய்ரோஸ்ட் ஒரு புலி போன்றது! ஆம் புலியைக் காட்டில் காண்பது அரிது! அதுபோலத் தான் இந்த இரண்டு நிறமும் இணைந்த நெய் ரோஸ்ட்டைக் காண்பதும்! தோசை மாஸ்டருக்கு செக் வைக்க முடிவு செய்து ஒரு நெய் ரோஸ்ட் ஆனா முறுகல் இல்லாமல் என்றேன்! நமது ஓட்டுநர் அண்ணன் இட்லிக்கு பிறகு புரோட்டா சொல்லியிருந்தார் ரோஸ்ட் வர தாமதிக்க அவருக்கு வந்த புரோட்டாவில் ஒன்றை கர்ணன் போல எனக்களித்தார்!

ஆஹா! ஒரு சைவக் கடையில் இப்படி ஒரு புரோட்டா சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று! புரோட்டாவும் சரி அதற்கு தந்த 2 வகை குருமாக்களும் சரி அப்படி ஒரு பெஸ்ட் காம்போ! எனது நெய் ரோஸ்ட் வந்தது! நான் வைத்த செக்கில் தப்பி எனக்கு செக் வைத்திருந்தார் மாஸ்டர்! ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பதமான தோசை கிடைக்காது! ஏன்னா தோசைக் கல்லின் சூடு அப்படி! முறுகல் மிக மிக எளிது ஆனால் பதமான தோசை தான் கடினம்!

பதமான தோசைக்கு இதமான இட்லி மிளகாய் பொடி, சட்னி, சாம்பாருடன் அதகளம் தான்! முழு தோசையும் சாப்பிட ஆசைதான் ஆனால் எனக்கு புரோட்டா தானம் செய்த ஓட்டுநர் அண்ணனின் முகம் நினைவுக்குவர என் ரோஸ்ட்டில் பாதியை அவருக்குத் தந்து “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நம் முன்னோரது வாக்கை மெய்யாக்கினேன்! மறுநாள் முதல் காலை, மதியம், இரவு 3 வேளையும் அங்கே தான்! பொங்கல், பூரி மசாலா..

இலை புரோட்டா, இலை பிரியாணி அனைத்தும் அருமை! மதியம் மீல்ஸ் ஆஹா லெவல்! ஒரு நாள் தாமதமாகி காலை உணவை மிஸ் செய்து 11 மணிக்கு சாப்பிடப் போனேன். இந்த நேரம் காலை டிபனுக்கும் மதிய மீல்சுக்கும் இடைப்பட்ட ரெண்டுங்கெட்டான் நேரம்! டிபன் வகைகள் முடிந்து மீல்ஸ் தயாராகவில்லை என்றனர்! சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்றதும் சாம்பார் சாதம் சொன்னேன்! கேரளப் படகின் வடிவில்..

ஒரு நீளக் கிண்ணத்தில் சாம்பார் சாதம் வந்தது! கூடவே சிறிய கிண்ணத்தில் பொரியல், அப்பளம். சாம்பார் சாதம் அபார சூடாக பிஸிபேளாபாத் போல இருந்தது! பிளிபேளாபாத் என்னும் கன்னடச் சோறு மெல்லிய தித்திப்பில் இருக்கும் கரம் மசாலாவின் காரம் கன்னக் கதுப்புகளில் பரவும்! அந்த ருசியை மனதில் நினைத்து ஸ்பூனில் அள்ளி ஊதி ஊதி சாப்பிட்டால்.. வாவ்! நான் ருசியில் தமிழ்நாட்டுக்காரன் என்றது சாம்பார்!

திருச்சி, தஞ்சை & டெல்டா மாவட்டங்களில் கல்யாணச் சாம்பார் என்று மிகப் பிரசித்தம்! கல்யாண விருந்தில் முழு சாப்பாட்டையும் சாம்பார் வாங்கியே ரசித்து சாப்பிடுவார்கள்! அந்த ருசியில் இருந்தது! முருங்கை, பீன்ஸ், வெங்காயம், கிழங்கு, அவரை எல்லாம் பதமாக வெந்து சாதத்தில் குகனோடு ஐவராகி இருந்தது! டிபிகல் தமிழ்நாட்டு சுவையில் ஒரு சாம்பார் சாதம்! எதிலும் குறை காண முடியவில்லை அப்படி ஒரு உயர்ந்த தரம்!

முக்கியமாக அங்கிருக்கும் பணியாளர்களின் கவனிப்பும் அன்பான சேவையும் என்னை வியப்பில் ஆழ்த்தியது! இன்முகத்துடன் எல்லா பணியாளர்களும் உபசரித்தனர்! விக்ரமன் பட கேரக்டர்கள் போல அவ்வளவு நல்லவர்களாக இருந்தனர்! அடை, ஆப்பம், பணியாரம், ஃப்ரைடு ரைஸ் வகைகளை ருசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! ஆனால் என்னுடன் வந்திருந்த நண்பர்கள் அதை எல்லாம் ருசித்து மகிழ்ந்து பாராட்டினர்! திருச்சியின் சைவ ஓட்டல்களுக்கு..

சங்கீதா ஒரு அடையாளமாக இருப்பது, இதுபோன்ற ஓட்டல்கள் அமையாத ஊர்க்காரர்களுக்கு பொறாமையை வரவழைக்கும்! எனக்கும் வந்தது! இங்கு விலை அதிகம் என்பார்கள்! ஏனெனில் அங்கு தரமும் சுவையும் அப்படி! இதே தரமும், ருசியும், உபசரிப்பும் கொஞ்சமும் குறையாத வரை இவர்களுக்குத் தோல்வியே இல்லை! நாம் சங்கூதற வயசு வரை இனி சங்கீதானு நம்பி சாப்பிடலாம் 💖

டிஸ்கி : இது சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரூர் போகும் சாலையிலுள்ள கடையில் நான் சாப்பிட்ட அனுபவம். வேறு கிளைகளில் அல்லது வேறு ஊர் சங்கீதாவில் உங்களுக்கு சங்கு சத்தம் கேட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! தொடர்ந்து 4 நாட்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 வேளை இங்கு சாப்பிட்ட பின்பே இதை..

என் மனசாட்சியோடு எழுதியுள்ளேன். இதற்காக நான் எவரிடமும் எந்த விதத்திலும் சலுகையோ, தொகையோ பெறவில்லை! மாறாக அங்கு எங்களுக்கு சேவை செய்த அனைத்து பணியாளர்களுக்கும் 4 நாட்களின் 10 வேளைகளிலும் என்னால் இயன்ற ஒரு நல்ல தொகையை நன்றி சொல்லி ஊக்கப்படுத்தி தந்திருக்கிறேன்! 🥰🥰💖

(இதைத் தந்ததை என் பெருமைக்காக சொல்லவில்லை, இந்த அருமை தெரியாத சில.. மகிஷாசுரர்கள் நீ பணம் வாங்கிட்டு எழுதினே என்பார்கள் அதற்கு தான்)

கொசுறு டிஸ்கி : இது என் தாய் மீது சத்தியம்!

{இந்த ஃபேஸ்புக்கில் ஒரு ரிவ்யூ எழுதறது எம்புட்டு கஷ்டம்.. அவ்வ்வ்வ்🤪}

Saturday, 25 January 2025

🏏 திலக் வர்மா

#வெற்றித்_திலகம்

சேப்பாக்கத்தில் நடக்கும் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் மறக்க இயலாத ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்பு அமைந்துவிடும். டெஸ்ட், ஒரு நாள் , T20 ஒவ்வொன்றிலும் ஒரு சாதனையை சத்தமின்றி தன் வசம் வைத்திருக்கும் சென்னை சேப்பாக்கின் ‘சிதம்பர’ ரகசியம் இந்த உலகமே அறிந்ததுதான்!

2023 T20 உலகக் கோப்பையுடன் ரோகித், கோஹ்லி அறிவித்த ஓய்வுக்குப் பின் அடுத்த கட்ட வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி துவங்கியது. சூர்யகுமார் தலைமையில் கடந்த ஓராண்டாக இந்தியா T20 ஃபார்மெட் கிரிக்கெட்டிற்கு கட்டமைத்து வரும் அணித் தேர்வு மிகச் சிறப்பானது! அது 95% வெற்றி தந்துள்ளது!

இது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல! இந்திய T20 அணிக்கு கிரவுண்டில் பாப்கார்ன் விற்பவரை கேப்டானக போட்டால் கூட இந்தியா வெல்லும் என்னும் அளவுக்கு உலக அளவில் T20யில் நாம் வலுவானவர்கள்! அதிரடிக்கு பெயர் பெற்ற SKY கேப்டன் ஆனபின்பு சிறப்பான அவரது பாணி ஆட்டம் ஏதும் ஆடவில்லை!

ஆனால் தலைமைப் பண்பில் அபாரமாக மிளிர்ந்தார்! வீரர்களுக்கு இடையே இறுக்கத்தைக் களைந்தார். அணியின் வெற்றிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்பதை உணர வைத்தார் இளைய வீரர்கள் தயக்கமின்றி மூத்த வீரர்களை அணுகும் சூழலை ஏற்படுத்தினார், முக்கியமாக திறமைக்கு முக்கியத்துவமளித்தார்!

தனிமனிதனின் சாதனையை விட ஒரு அணியாக வெல்வதே முக்கியம் என்பதை ஒவ்வொரு வீரருக்குள்ளும் விதைத்தார். அணியின் வெற்றிக்கு யார் வேண்டுமானாலும் தம் கருத்துகளை என்னிடம் கூறலாம் என்னும் சுதந்திரம் அளித்தார். வீரர்கள் ஆடும் ஆட்ட முறைகளில் மாற்றம் பற்றியும் அவர்கள் இறங்கும் டவுனில்..

ஏதும் பிரச்சனை இருந்தால் அதில் செய்யும் மாற்றங்கள் பற்றியும் என்னிடம் யார் வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம் என்றார்! அவர் சொன்ன வார்த்தையை நம்பி 4 வது 5வது டவுனில் ஆடிக் கொண்டிருந்த திலக் துணிச்சலாக சென்று ஒன் டவுனில் என்னால் மிகச் சிறப்பாக ஆடமுடியும் அதை எனக்கு தரமுடியுமா என்றார்!

திலக் கேட்ட ஒன் டவுன் சூர்யாவின் டவுனாகும்! கேட்டது எப்படி இருந்தது தெரியுமா? கடையில் எந்தப் பொருள் எடுத்தாலும் 10 ரூபாய்னு சொன்னதும் அப்போ அந்த கல்லா பெட்டியை கொடுங்கன்னு கேட்டது போல! சூர்யாவிற்கு ஈகோவோ தன் இடத்தை விட்டுத் தரமுடியாத பிடிவாதமோ கொஞ்சமும் இல்லை!

அணியின் வெற்றியே முக்கியம் என்பதை நிரூபிக்க அந்த இடத்தை உடனே விட்டுக் கொடுத்தார்! அவர் அணியின் வெற்றிப் பாதையை கட்டமைத்ததிற்கு இது ஒரு சோறு பதம்! இதைத்தான் அவரது சிறந்த தலைமைப் பண்பு என்கிறார்கள் உலகளாவிய கிரிக்கெட் வல்லுநர்கள்! ஒன் டவுனில் திலக் ஆடத் துவங்கினார்..

அதன் பின்பு இப்போது வரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் வீழ்த்த முடியாத வீரராக ஆடி வருகிறார் திலக் வர்மா! இந்த 4 ஆட்டங்களில் 2 சதங்கள், ஒரு 50+ ரன்கள் அடங்கும்! T20 ஆட்டங்களில் அதிரடி தான் அடி நாதமே என்றாலும் நேற்றைய திலக்கின் ஆட்டம் அடக்கி வாசித்த அதிரடி என்று சொல்லலாம்!

வெற்றிக்கு அருகில் இருந்த போது சுழலுக்கு சாதகமான பிட்சில் அடில் ரஷீத்தின் 4 டாட் பால்களை அவர் ஆடிய போது இன்றைய T20 ரசிகர்களின் பார்வையில் 4 பந்துகளை வீணடித்துவிட்டான் என்றே எரிச்சல் வந்திருக்கும்! ஆனால் பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி பாய வேண்டிய நேரத்தில் பாய்வதே சிறந்தது!

அவர்கள் தான் சிறந்த கேம் ஃபினிஷர்களாக உருவாகி வருவார்கள் அப்படி ஒரு கேம்ஃபினிஷர் தான் இன்று இந்திய அணிக்கு தேவை! அதை கடந்த ஓராண்டுக்குப் பின் கண்டடைந்துள்ளோம்! இனி திலக் மீதான கேப்டனின் நம்பிக்கை விரிவடையும்! பல்வாள் தேவனுக்கு அமைந்த பாகுபலி போல ஒரு வீரர் தான் திலக்வர்மா!

ஆக்ரோஷமாக மோதிக் கொண்டுள்ள களத்தில் எதிரி பொது மக்களை பிணையாக கொண்டு வந்து நிறுத்தும் போது தன் நாட்டு மக்கள் தாக்கப்படக் கூடாது என அதிரடியை நிறுத்திய அக்கறை, துல்லிய திட்டமிடல், சிறந்த தந்திரங்கள், வாய்பேசாது களத்தில் பதிலடி! இது பாகுபலிக்கு மட்டுமல்ல திலக்கிற்கும் பொருந்தும்!

நேற்றைய ஆட்டத்தில் ஆர்ச்சரின் பவுன்சரில் எட்ஜாகி ஆர்ச் போல பின்னோக்கி போனது ஒரு சிக்ஸர்! நல்லா காட்டு சுத்து சுத்து என்பது போல ஆர்ச்சர் கேலியான முகபாவனை காட்ட அதை பார்த்து அடுத்த பந்தை ஸ்டெம்பை விட்டு விலகி ஆஃப் சைடில் ஒரு சிக்ஸர் அடிப்பார்! பதிலடிக்கு அது ஒன்றே உதாரணம்!

22 வயதில் இப்படிப்பட்ட நிதானமான அதே நேரத்தில்,வெற்றி வேட்கையுடன் விக்கெட்டை இழக்காமல் ஆடும் வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார்! இந்த ஒரு மேட்ச் வைத்து பில்டப் பண்ணாதிங்க என்கிறீர்களா? இல்லை! இது இவருக்கு இந்திய மண்ணில் முதல் 50+ இவர் மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கும்!

இந்தத் தருணங்கள் அவர் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கும்! அதை அவர் மனதில் கொண்டு தொடர்ந்து நிலையாக ஆடும் உத்வேகமளிக்கும்! இந்தியாவிற்கு ஒரு சிறந்த கேம் ஃபினிஷர் நேற்று அடையாளம் காணப்பட்டார் என்று கூட சொல்லலாம். இவர் மீதே சுமையை திணிக்காமல் மற்ற வீரர்கள்..

தங்கள் ஆட்டத் திறனை வளர்த்துக் கொள்வது, இவருக்கு பக்க பலமாக நிற்பது போன்றவற்றை உடனிருந்து செய்தாலே போதும் இந்திய அணி இன்னும் பல வெற்றிகளைப் பெறும்! T20யில் இந்திய அணியின் வெற்றித் திருமுகத்தின் நெற்றியிலிட்ட திலகம் தான் திலக்! இந்தத் திலகம் இந்தியாவின் வெற்றித் திலகமே!

கொத்து பரோட்டா

#கல்லிலே_ஒலிவண்ணம்_கேட்டான்

டொங்.. டொங்.. டொங்..

நல்ல பசி நேரத்தில் புரோட்டா கடைகளில் இந்த டொங்.. டொங்.. சத்தம் கேட்டாலே நாம குதூகலம் ஆகிடுவோம்! அதுதாங்க முட்டை பரோட்டாவை கொத்துற டொங் சத்தம்! பள்ளி முடிஞ்சிருச்சுன்னு மணியடிக்கும் ஓசை கேட்டு மொத்த பிள்ளைகளும் மகிழ்ச்சி ஆவது போல இந்த ஓசையும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்! கால மாற்றத்தில் இந்த டொங் டொங் எப்படி மாறியிருக்குன்னு பார்க்.. கேட்கலாமா!

எனக்குத் தெரிஞ்சு ஆரம்ப காலத்தில் முட்டை பரோட்டாவை கொத்துவதற்கு என்றே பிரத்யேகமாக குறுவாள் மாதிரி 1அடி நீளத்தில் கனத்த இரும்பாலான குட்டை தோசைக் கரண்டிகள் இருந்தன! ஓட்டல் மொழியில் அதற்கு குறுப்பி என்று பெயர்! என்னைக் கேட்டா கொத்து புரோட்டா போட பர்ஃபெக்ட் சாதனம் இந்த குறுப்பி தான்! சூர்யகுமார் யாதவ் பேட் மாதிரி 360 டிகிரியிலும் விளையாடும்!

குறுப்பியில் கொத்தும் போது புரோட்டா சமூக வலைத்தள பதிவர்களிடம் சிக்கிய அண்ணாமலையாகிடும்! குறுப்பி புரோட்டா மீது சும்மா குமுறு குமுறுன்னு குமுறி புரோட்டாவை கொத்து கொத்தா மீன் செதில்கள் போல அல்லது அவல் போல கொத்தியிருக்கும்! அந்த செதில் குவியலை சூடா அள்ளி அது மேல கொதிக்கிற பச்சை மிளகா மட்டன் எலும்பு சால்னாவை சளசளன்னு ஊத்தி அப்படியே..

கண்ணில் தண்ணி வர சாப்பிடுற சொகமிருக்கே! அடடா! குறுப்பியில் கொத்தி புரோட்டாவை பவுடர் போலவும் ஆக்க முடியும் எனும் சிறப்பு வேறெந்த கொத்து உபகரணங்களுக்கு இல்லை! அப்படியாகப்பட்ட குறுப்பிக்கு தடை வந்தது ஏன் தெரியுமா? நாய்ஸ் பொல்யூஷன் எனப்படும் ஒலி மாசுபாட்டால்! குறுப்பியால் தோசைக் கல்லில் குமுறப்படும் புரோட்டாவை விட குறுப்பி உண்டாக்கும் ஒலி அதிகம்!

அடிக்கிறவன் யா.. ஊ.. ன்னு கத்துற கராத்தே மாதிரி குறுப்பி தோசைக்கல் மீது அலறும்! இந்த குறுப்பியால் க்ரூப்-பி தேர்வு முதல் பலவித தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களும் குதறப்பட்டார்கள்! காதுகளுக்கும் இது டேஞ்சர் டெஸிபல் என்று கண்டறிந்ததும் குறுப்பிக்கு தடை வந்தது! அடுத்து புரோட்டாவை கொத்த வந்த உபகரணம் எது தெரியுமா? டம்ளர்கள்! (தம்பிகள் அல்ல)

பரோட்டாவை குதறும் ஆனா குறுப்பி போல டொங் டொங் சத்தம் எழுப்பாது அது சபக்.. தபக்குனு தபேலா வாசிப்பவர் அதை அமுக்கி வாசிக்கும் போது குமுக் குமுக்னு சத்தம் வருமே அது போல சத்தம் வரும்! என்ன மைனஸ் பாயிண்ட்னா குறுப்பி அளவுக்கு புரோட்டாவில் கொத்து அமையலை! வெறும் டம்ளரால் குறுப்பியின் பர்ஃபெக்‌ஷனை பக்கத்தில் கூட கொண்டு வர முடியவில்லை!

அந்த அவல் போல செதில் போல கொத்து கூடிவரவில்லை! புரோட்டாக்கள் கையால் பிச்சிப் போட்டது போல பெரிய பெரிய பீஸாகத்தான் இருந்ததே தவிர குறுப்பியால் பீஸ் பீஸா ஆனது போல டம்ளரில் வரவில்லை! பிறகு கத்தி முனை போல ஷார்ப் விளிம்பு டம்ளர்கள் வந்தாலும் அந்த செதில் போல கொத்த முடியவில்லை! முட்டை பரோட்டா ரசிகர்கள் கடும் தவமிருந்து வேண்டிக் கொள்ள..

கடவுள் கான்பிரன்ஸில் வந்து அளித்த வரம் தான் இப்போதைய கொத்து ப்ளேட்! மட்டன் வெட்டும் கத்தி போல அகலமான ஷார்ப்பான ப்ளேட் அதற்கு மரக் கைப்பிடி! இரண்டு பிளேட்டுகளை வைத்து தோசைக் கல்லில் அதிவேகமாகக் கொத்தினால் கூட அதிக சவுண்ட் வராது! துப்பாக்கிக்கு சைலன்ஸர் போல இது கொத்து பரோட்டாவுக்கு! இப்போது இதுதான் எல்லாக் கடைகளிலும்!

ஆனால் இதன் திறன் டம்ளருக்கு பல படி மேலே குறுப்பிக்கு பல படி கீழே தான்! இன்றைக்கு தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச் சுவை நடிகர்கள் இருந்தாலும் அண்ணன் வடிவேலுஅமர்ந்த நகைச் சுவை நாற்காலியின் இடத்திற்கு யாரும் வராமல் இருப்பது போல கொத்து பரோட்டாவிற்கு அண்ணன் குறுப்பியின் நாற்காலி அப்படியே இருக்கிறது! அதில் அமரும் தகுதி அவருக்கு மட்டுமே!

Thursday, 23 January 2025

🏏 வருண்ஜாலம் 🏏

 🏏 வருண்ஜாலம் 🏏




நேற்றைய இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடத்த டி20 ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தியின் மாயச் சுழல் பந்துகள் ஸ்டெம்புகளை குறி வைத்து வீழ்த்தின! ஒரு வேகப்பந்து வீச்சில் தெறிப்பது போல ஸ்டம்புகள் தெறித்து பறந்தன! வருண் பந்து வீசும் போது பந்தை சைடாக பிடித்து விரல்களால் சுழற்றுவார்!


அவரது விரல் பந்தை சுழற்றுவதை பேட்ஸ்மேன் பார்க்க முடியாது!  கிட்டத்தட்ட லெக் ஸ்பின் வீசுவது போன்ற ஆக்‌ஷனில் ஆஃப் ஸ்பின் வீசுவார். அதனை பாரம்பரிய தூஸ்ரா வகை என்று சொல்ல முடியாது! தூஸ்ரா அப்பட்டமான ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனில் வீசப்படும் பந்து! வருண் வீசும் முறை இதிலிருந்து மாறுபட்டது!


வேண்டுமென்றே முதலிரண்டு பந்துகளை இதே ஆக்‌ஷனில் லெக் ஸ்பின்னாக வீசிவிட்டு மூன்றாவது பந்தை வெடுக்கென ஆஃப் ஸ்பின்னாக வீசி பேட்ஸ்மேனை வீழ்த்துவதே வருணின் ஸ்டைல்! நேற்று வருண் வீசிய முதல் ஓவரில் ஹாரி ப்ரூக்கின் பின் கால்கள் வழியே விக்கெட் கீப்பர் திசையில் ஒரு பவுண்டரி போகும்! 


அந்தப் பந்தே அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டிய பந்து! அவர் நகர்ந்து ஆடியதால் அப்போது பிழைத்தார். அடுத்த ஓவரில் நான் இங்கே சொன்னதைப் போல ஒரு லெக் ஸ்பின் வீச அதை ப்ரூக் அசால்டாக பவுண்டரி அடிக்க அடுத்தப் பந்தை வருண் ஸ்டைலில் வீச பந்து கால் பேடில் பட்டும் மிடில் &லெக் ஸ்டம்புகளை தாக்கும்!


பந்து அத்தனை வேகமாக திரும்புவதும் ஒரு அழகு! ப்ரூக் பரவாயில்லை அடுத்துவந்த லிவிங்ஸ்டோன்2 வது பந்திலேயே ஷோயப் அக்தர் பந்தில் போல்டானது போல லெக் ஸ்டம்பு உருண்டு விழும் அளவு போல்டாகி இருப்பார்! மேட்சின் ஹைலைட்ஸ் பார்த்தால் லிவிங்ஸ்டோனின் வியப்பு தெரியும்! 


என்ன நடந்தது, எப்படி நடந்தது பந்து எப்போ இங்க பிட்ச் ஆச்சு எப்போ வெளியே திரும்பாம உட்புறம் திரும்பியது என்கிற குழப்பம் அவரது முகத்தில் பளிச்சென தெரியும்! இதைத் தான் நான் வருண் ஜாலம் என்று குறிப்பிடுகிறேன்! நேற்றைய ஆட்டத்தின் திருப்பு முனை இவர் ஒரே ஓவரில் எடுத்த அந்த 2 விக்கெட்டுகள் தான்!


பட்லர் ஒருவர் மட்டும் 68 ரன்கள் எடுத்து இருந்தார் ப்ரூக் எடுத்த 17 ரன்கள் தான் இரண்டாவது அதிக ஸ்கோர் 64/3 என்றிருந்த ஸ்கோர் 132க்கு ஆல் அவுட் என்னும் நிலைக்கு மாறியது! கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து வருணின் பவுலிங் நிறைய மெருகேறியுள்ளது! இந்த வருண்ஜாலம் என்றும் தொடர வேண்டும்!


Tuesday, 21 January 2025

Madurai Hotels

 சைவத்தை இழந்த மதுரை




சாப்பாடுன்னா மதுரை தான்யாஅதை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னுபல பேர் சொல்லுவாங்கஅது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்என்பதை நம்பினா மாதிரிவிதவிதமான அசைவ உணவுகளுக்கும் புரோட்டாகடைகளுக்கும் தள்ளுவண்டி & நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்றும் புகழ்பெற்ற ஊரு தான்கறிதோசைநண்டு ஆம்லெட்அயிரைமீன் குழம்பு..


வெங்காயக் குடல்விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும்மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லைசைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லியாஇல்ல மதுரை மக்கள் எல்லாம்அசைவத்துக்கு மாறிட்டாங்களாஅதெல்லாம் ஒன்றுமில்லை வித விதமான சைவ உணவு வகைகளிலும் ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் மதுரை தான் டாப்!


உண்மையில் சமணம் ஒழித்து சைவம் தழைத்த மாமதுரையில் இன்று சைவத்திற்குபஞ்சம் ஏற்பட்டுள்ளதுஆம் புகழ் பெற்ற நல்ல சைவ ஓட்டல்கள் எதுவுமே தற்போதுமதுரையில் இல்லை என்பது தான் கசப்பான உண்மைஒரு காலத்தில் திண்டுக்கல் ரோடுஎன்று அழைக்கப்படும் நேதாஜி ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரெண்டில் இருந்து எழும்சாம்பாரின் மணமே சாம்பிராணி போட்டது போல அத்தெருவெங்கும் மணக்கும்


அதிகாலையில் ஃபில்டர் காபியின் மணம் அங்கு பகல் டியூட்டியிலிருக்கும்மாடர்ன்ரெஸ்டாரெண்ட் என்றாலே பலருக்கு இன்றும் நினைவில் ருசிப்பது மதுரை மல்லிபோன்ற ஆவி பறக்கும் மென் பஞ்சு இட்லிகளும் அதற்குத் தரும் பருப்பு சாம்பாரும்தாளிப்பு மணக்கும் தேங்காய் சட்னியும்வெங்காயச் சட்னியும்முறுகலான நெய்ரோஸ்ட்டும் ஆனியன்ரவா.. தோசையும்சூடான பூரியும்வெண்ணை போன்ற..


கிழங்கு மசாலாவும் பொன்னார் மேனியன் போல உளுந்தை அரைத்திசைத்த தங்க நிறஉளுந்து வடையும்நெய் மணக்கும் வெண் பொங்கலும் அடடாஅதிகாலையில்மீனாட்சியம்மனை கையெடுத்து தரிசிக்க நிற்கும் அதே கூட்டம் தரிசனம் முடிந்தகையோடு மாடர்ன் ரெஸ்டாரெண்ட் வாசலில் வந்து விதவிதமான சைவ உணவுகளுக்குகால் கடுக்க நிற்கும்மாடர்ன் ரெஸ்டாரெண்ட் கூட்டத்தில் நிற்க விரும்பாதவர்கள்..


மேலமாசி வீதி உடுப்பி ஓட்டலுக்கு படை எடுப்பார்கள்! அதிகாலையிலேயே நெய் ஒழுகவறுத்த முந்திரிகள்திராட்சைகள் தூவி கண்ணைப் பறிக்கும் ப்ளோரசெண்ட் ஆரஞ்சுநிறத்தில் அவர்கள் தரும் கேசரி இருக்கிறதே.. அதனால் தான் மதுரையை ஆண்டபாண்டிய மன்னர்களுக்கு கேசரி என்ற பெயர் வந்ததற்கு காரணம் என்றால் சட்டெனநம்பிவிடலாம்ஒரு ப்ளேட் கேசரி ஒரு வெள்ளையப்பம்ஒரு ஃபில்டர் காபி..


இந்த மூன்றை மட்டுமே காலையில் உண்டு உயிர் வாழ்ந்த ஜீவன்கள் இன்றும் மதுரையில்தங்கள் உடலின் சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொண்டு நினைவில் அதை ருசித்துவாழ்ந்து கொண்டிருக்கின்றனஉடுப்பியின் சாம்பார் லேசாக இனிக்கும்சாம்பாரைக்கொண்டே கடையின் பெயரைச் சொல்லுமளவுக்கு அந்த காலத்தில் மாடர்னும்உடுப்பியும் செட் தோசைகளாக இயங்கி வந்தனஎம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள் போல.. 


இதற்கும் தனித்தனி ரசிகர்கள் இருந்தனர்.! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில்கோபு அய்யங்கார் கடை டெண்டுல்கர் இந்திய அணியில் ஆடிய போது உடனிருந்தஷேவாக் போல அதிரடி காட்டியதுகோபு அய்யங்காரின் நெய் மினு மினுக்கும் ரோஸ்ட்ஜீரா போளிவெள்ளையப்பம், மிளகாய் சட்னி வகைகள் தனித்துவம் மிக்கவைஇந்தஉணவுகளின் மீது ஆசை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடைக்கு..


முதுகு காட்டி கோவிலில் அம்மன் வீற்றிருப்பதாக ஐதீகம் என்றால் நம்பிவிடலாம்பட்டணம் பக்கோடாகாரக்கறி கிழங்குமிளகு சேவுசீரணிதவள வடைஇனிப்புஅப்பம்முட்டாசுநெய் இட்லி சாம்பார்மெது போண்டாகீரை வடை இப்படி மதுரையின்புகழ் பெற்ற சைவ ஓட்டல்களும் அந்த மெனுக்களும் உணவுகளும் ஏராளம்சிற்றன்னங்கள் எனப்படும் தக்காளிலெமன்புளியோதரைவெண் பொங்கல்..


மல்லி சாதம் போன்ற சாத வகைகளுக்கு என்றே சவுராஷ்டிரா நண்பர்கள் வசிக்கும்மஹால்அலங்கார் தியேட்டர்தினமணி டாக்கீஸ் பகுதிகளில் பல பொங்கல் கடைகள்துவங்கி அதில் சில இன்றும் தங்களது உணவுச் சேவையை ஆற்றி வருகின்றனஇத்தனைஉணவு களேபரங்களுக்கு நடுவில் 1950களில் சத்தமே இல்லாமல் மேலகோபுரத்தெருவில் மதுரை நாக்குகளை சமோசாகச்சோரிவித விதமான.. 


சப்பாத்தி வகைகள், சப்ஜிமசாலா டீ என வடநாட்டு உணவுகளைக் கொடுத்து தன்வசப்படுத்தி இருந்தது மதுரை மண்ணுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத டெல்லி வாலாஸ்வீட்ஸ்பின்னாளில் இதே மாடர்ன் ரெஸ்டாரண்ட்டுக்கும் உடுப்பி ஓட்டலுக்கும் நடுவில்வந்து கம்பீரமாக வந்து அமர்ந்த ‘ஆரியபவன் உணவகத்தின் தாய்வீடு தான் டெல்லிவாலாஆரியபவன் மதுரையில் துவங்கப்பட்ட பின்பு தான் ஸ்வீட்டுகளில்.. 


அல்வாலட்டுமைசூர்பாக்ஜிலேபி தவிர வேறு இனிப்புகளும் இருக்கின்றன என மதுரைமக்கள் ஞானம் பெற்றனர்ஆரியபவன் நோக்கி படையெடுத்தனர்பட்டிக் காட்டான்மிட்டாய் கடையை பார்த்தது போன்ற எனும் பழமொழி உண்மையானதுஇட்லிபொங்கல்தோசை என்று இல்லாது ஆலு சப்பாத்திகீரை சப்பாத்திமுள்ளங்கிசப்பாத்தி என சப்பாத்திகளில் பல வகைபாலிலேயே அரிசியை வேக விட்டு செய்யும்.. 


பால் பொங்கல்அரைத்துவிட்ட சாம்பார்பெசரட் & செட் தோசைகள்பாண்டியநாட்டில் சோளாப்பூரி & சென்னா என்று ஆரியபவன் வெரைட்டி வெரைட்டியாக பலஉணவுகளை அறிமுகப்படுத்தியதுஇதுவரை ஸ்வீட் காரம் காபி எனில் உடுப்பியின்கேசரியும்வெள்ளையப்பமும்ஃபில்டர் காபியும் குடித்துப் பழகிய மதுரை மக்கள்இப்போது பாஸந்தியும்சமோசாவும்மசாலாபாலும் என்று ஆரியபவனுக்கு..


ஆதரவு தந்து தமிழருவியானார்கள்ஆரியபவன் ஸ்வீட்ஸ்செயின் ஓட்டல்கள் எனவிரிவடைந்து பை நைட் என்று தூங்கா நகரின் இமையை இழுத்துப் பிடித்து நிறுத்தியதுநவரத்தின குருமாவும்மில்க் பரோட்டாவும்பால் பொங்கலும்சாம்பார் வடையும்தயிர்வடையும்ஸ்பெஷல் ரவா எனப்படும் ஆனியனும் மசாலாவும் கலந்த மெகா முருகல் ரவாதோசையும், ஆந்திர பெசரட் தோசையும் அதற்கு உப்புமாவும்..


கேரட் குருமா செட் தோசையும் மதுரை நாவுகளை பல ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்திவைத்திருந்தனமதிய சாப்பாடெல்லாம் தெய்வ லெவலில் இருக்கும். 1989இல் ஒருஅன்லிமிடெட் சாப்பாடு ₹20 தான்நெய்யில் ஆரம்பித்து இறுதியில் பாயாசம் வரைஅப்படி அத்தனை மெனுக்கள்இடையில் இதே உடுப்பி தங்கள் கடையைஆரியபவனிடம் தந்துவிட்டு தங்கள் கொடியை வாலண்டியராக இறக்கிக் கொண்டனர்


அந்த இடத்தில் ஆரியபவன் தங்களது மதிய மீல்ஸ் செக்‌ஷனை ஆரம்பித்து வெகு நாட்கள்தம் வெற்றிக் கொடியை பசி போக்க பறக்கவிட்டனர்மதுரையில் ஆரியபவன் எனும்கோஹினூர் வைரத்தின் பேரொளியிலும் மனோரமா ஓட்டல்பெரியார் பேருந்துநிலையம் அருகில் கீதா கஃபேகே.பி.எஸ்அசோக் பவன்வசந்த பவன்பரசுராம்குருபிரசாத் என தனக்கென்று தனித்துவ உணவு வகைகளை கொண்ட பல சைவ..


ஓட்டல் கடைகள் மினுக்கிட்டனஉடுப்பி ஓட்டல் போலவே ஆரியபவனின் வெற்றிக் கொடியும் ஓர் நாள் கீழிறிங்கியது.! அவர்கள் இப்போது அந்தத் தொழிலிலேயே இல்லைமாடர்ன் ரெஸ்டாரெண்ட் மட்டும் இன்னும் பழைய ஜமீனாக வலம் வருகிறதுகோபுஅய்யங்கார் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சரணடைய, மனோரமாவும் இப்போதுகைமாறிவிட்டதுஇன்று மதுரையில் சபரிஷ்டெம்பிள் சிட்டிநடிகர்.. 


பரோட்டா சூரியின் அம்மன் & அய்யன் போன்ற உணவங்கள் பேருக்கு இருந்தாலும்அந்தகாலத்து உடுப்பிமாடர்ன் போல அல்லது சுனாமியாய் வந்த ஆரியபவன் போல உயர்தரமான சைவ ஓட்டல்களோ அல்லது விதவிதமான ருசி மிகுந்த புதிய சைவமெனுக்களோ மதுரையில் வருவது அருகிவிட்டது! கோவை போல பாரம்பரியம் மிக்கசிறந்த சைவ உணவுகளுக்கு ஒரு நல்ல ஓட்டல் கடை மதுரையில் தற்போது இல்லை


இதுவே நெஞ்சம் கனக்கும் உண்மையாகும்!


விடுபட்டு போனவை : சோலைமலை தியேட்டர் அருகே கெளரி கிருஷ்ணாகோரிப்பாளையம் கிங் மெட்ரோபீபீ குளம் நாராயணாபழைய திருவள்ளுவர்  போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் அருகில் அசோக் பவன்.. மஹால் ரோட்டில் இருந்த வாஸன்டிபன் ஹோம்..


{இதே காலகட்டத்தில் மதுரையில் இருந்த வேறு சைவ ஓட்டல்களின் பெயர்கள்இப்பதிவில் விட்டுப் போயிருந்தால் விபரம் அறிந்தவர்கள் கமெண்ட்டில் தெரிவிக்கவும்