“சுண்டங்கோட்டை சூரர்” {பார்ட் -2}
ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்த விரக்தியா அல்லது வேறு பிரச்சனையா தெரியாது, ஆனால் அன்று வாழ்க்கையை வெறுத்து பாலையா தலை மறைவாக ஓடிப் போய்விட்டார். அவரைத் தேடாத இடமில்லை, கடைசியில் பாண்டிச்சேரியில் இந்தச் சாமியார் பாலையா போல இருக்கிறாரே என இவரை கண்டுபிடித்தவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான சுந்தரம் அவர்கள் தான்!
அப்போது தான் அவர் சாமியாராக மாறியது உலகிற்கு தெரியவந்தது. வரவே மாட்டேன் என முரண்டுபிடித்தவரை சமாதானப்படுத்தி சேலத்திற்கு அழைத்து வந்து பிறகு அவரையே ஹீரோவாக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்தபடம் தான் சித்ரா! KLVவசந்தா அவருக்கு அதில் ஜோடி! பிறகு செண்பகவல்லியில் ஹீரோவான போது அவருக்கு MSவிஜயா ஜோடி! MGR ஹீரோவாக நடித்த முதல் படமான..
‘ராஜகுமாரியில் வில்லனாக நடித்தார் பாலையா. இருவரும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. ஜூபிடர் பிக்சர்ஸின் மோகினி என்ற படத்தில் 2 கதாநாயகர்கள். ஒருவர் MGR மற்றொருவர் பாலையா!இதில் பாலையாவின் ஜோடி மாதுரிதேவி! நாட்டிய ராணி, விஜய குமாரி, ஏழைபடும்பாடு, சந்திரிகா முதலிய படங்களில் நடித்தார். உண்மையில் பாலையா காங்கிரஸ் அனுதாபி!
ஆனால் பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் வரும் இவரது பகுத்தறிவாளன் காரக்டர் தான் பின்னாளில் பராசக்தியில் சிவாஜி நடித்த கேரக்டருக்கு முன்மாதிரி! 1950ஆம் ஆண்டு பட்சிராஜா ஸ்டூடியோ எடுத்த பிரசன்னா என்ற மலையாள படத்தில் அதில் லலிதா கதாநாயகியாகவும் பத்மினி 2வது கதாநாயகியாகவும் நடித்தனர். லலிதாவுக்கு ஜோடியாக பாலையா நடித்தார்.
இந்த படத்தில் தான் பாலையா சொந்தக்குரலில் பாடினார்! ஆம் பாலையா மிகச் சிறந்த பாடகரும் கூட! (பாலையாவின் மகன் சாய்பாபா ஒரு பின்னணிப் பாடகர் இளையராஜாவிடம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்) அதன் பிறகு 1968 வரை திரையுலகில் பட்டொளி வீசிப் பறந்தது பாலையாவின் கொடி! அதிலும் வில்லனாக வந்து நகைச்சுவை செய்வது இவர் பாணி! அதைக் கொஞ்சம் மாற்றி..
தன் பாணிக்கு மாற்றிக் கொண்டதாக எம்.ஆர்.ராதா கூறுவார்! மதுரை வீரன் படத்தில் MGRடன் மோதுவது போல ஆவேசமாக இடுப்பிலிருந்து கத்தியை உருவி 'இன்று என்ன கிழமை?' என்பார்! வெள்ளிக்கிழமை என்று ஒருவர் சொல்ல 'அடடா! இன்று விரதம்' என்று உருவிய கத்தியை வேகமாக உறையில் போட்டு விடுவார். அவரது இன்னொரு புகழ் பெற்ற நகைச்சுவையான வசனம்..
‘அரசே நாங்கள் பின் தொடர்ந்து போனோம் ஆனால் அவர்கள் முன் தொடர்ந்து போய்விட்டார்கள்' என்பது! புதுமைப்பித்தனில் MGR ‘அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்’ எனும்போது அமுல்பேபி போல நடந்து வருவார். பார்ப்பவர்க்கு வெறுப்போடு சிரிப்பும் வரும்! பாலையாவின் வில்லன் நடிப்பிற்கு பெரும் பலம் எது தெரியுமா? அவரது வஞ்சகமான பார்வை! அதில் ஒரு கயமைத்தனம்!
கொடூரம் அப்படித் தெறிக்கும்! அடுத்து அவரது நயவஞ்சகப் புன்னகை! இதிலேயே ஆறேழு வெரைட்டி வைத்திருப்பார்! அடுத்து வசன உச்சரிப்பு வார்த்தைகளை உச்சரிக்கும் லாவகம்! ஒரு நீளமான வாக்கியத்தை எங்கு ஏற்றி எங்கு இறக்கினால் அது வேறு பொருளில் வரும் என்பதை கனகச்சிதமாகச் செய்வார்! அதிசயத்திருடன் என்னும் படத்தில் கொடூரமான ராஜகுருவாக வருவார், அந்தப் படத்தில்..
அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை "நிலகலகண்டம்" இதை அந்தப் படம் முழுவதும் 20 முதல் 25 விதங்களில் வெவ்வேறு மாடுலேஷன்களில் உச்சரித்து இருப்பார்! இப்படி தமிழ் சினிமாவில் கொடூர வில்லனாக கோலோச்சிக் கொண்டிருந்த பாலையாவை பாசக்கார குணசித்திர நடிகனாக மாற்றிய படம் பாகப்பிரிவினை. அதில் சிவாஜியின் மூத்த சகோதரனாக வந்து வாழ்ந்திருப்பார்.
தன் நடிப்பால் அனைவரையும் அழவைத்திருப்பார். ஒரே காட்சியில் பாலையா அண்ணனும் எஸ். வி. சுப்பையா அண்ணனும் நம்ம கூட நடிச்சா உஷாரா இருக்கணும்பா” கொஞ்சம் அசந்தா போச்சு நம்ம நடிப்பை அப்படியே தூக்கிச் சாப்பிட்றுவாங்க! இப்படி பலமுறை சொன்னவர் நமது நடிகர் திலகம் சிவாஜி! வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என எந்த பால் போட்டாலும் சிக்ஸர் தான்!
களைப்பில்லாது கலைப்பால் குடிக்கும் நடிப்பு அரக்கன் பாலையாவிடம் எவ்வகைப் பாலை தந்தாலும் அதை தன் நடிப்பால், திறமையால் பால் பாயாசமாக ஆக்கிவிடுவார்! இவரை யாரு முழுமையான நகைச்சுவை நடிகரா மாத்தினது? ஶ்ரீதர் என்னும் ஒரு லெஜண்ட் செய்த மாயாஜாலம் அது! அதுபற்றி..
வரும்..
No comments:
Post a Comment