#ஊதாங்குழல்
எங்கள் சிறு வயதில் நாங்கள் பார்த்த, இன்றைய குழந்தைகளுக்கு அதிகம் தெரியாத ஒருஇன்றியமையாத அந்தக் காலச் சமையலறைச் சாதனம் ஊதாங்குழல்.! அன்றையசமையலறைகள் இன்று போல் நவீனமானது இல்லை! அடுப்புக் கரியும், புகையும், சாம்பலும் சுவரெங்கும் படிந்து அமாவாசை இரவு வானம் போல காட்சியளிக்கும். நம்கன்னத்திலோ கை கால்களிலோ கரி படிந்திருந்தால்..
என்னடா சமையக்கட்டு பக்கம் போயிட்டு வந்தியா என்று கேட்பார்கள்! அன்றையசமையல் அறைகளே மினி கொல்லன் பட்டறை போல காட்சியளிக்கும்! எரிந்துஅணைந்த விறகு, சாம்பல் பூத்த அடுப்பு, அடுப்பு மேடைக்கு பக்கத்தில் வறட்டி(எருவாட்டி) விறகுக் குவியல் என நிறைந்திருக்கும். சேலத்தில் ஒரு குண்டு விறகு எனவும் மதுரையில் ஒரு தூக்கு விறகு என்னும் எடையளவில் நாங்கள் விறகுகள் வாங்கி வருவோம்.
விறகுகள் எளிதில் தீப்பிடிக்க உதவும் தோழர்களான சிறா எனப்படும் சிறு சிறு மரத்துண்டுகள், மரத்தூள்கள் என சாக்கு முட்டையில் வாங்கி வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால் எருவாட்டி. இத்தனை தோழர்கள் இருந்தும் அடுப்பு எரிய பேருதவி செய்வது ஊதாங்குழல் தான்! கங்குகள் எரியாது தங்கி விட்டால் அதை எடுத்து ஊதினால் அந்தக் காற்றில் தீ குபீரென எழும்பும். மழை பனிக்காலங்களில் ஈர விறகை வைத்து சமைக்கும் போது..
ஊதி ஊதி நெஞ்சே வலிக்குதுடா தம்பி என்பார் அம்மா! அம்மாவுக்கு டெபுடியாக எப்போதும் தம்பி அடுப்படியில் இருப்பான். சில சமயங்களில் நானும் தங்கையும் ஊதுவோம்! எங்கள் அனைவரின் சுவாசக் காற்றும் பட்டு எரியும் அடுப்பில் இருந்து அம்மாவின் வாசச் சமையல் தயாராகும். எங்கள் வீட்டில் ஒரு ஊதாங்குழலை வைத்து ஒரு குடும்பப்பாடலே உண்டு! அந்த லிரிக்ஸ் யார் எழுதியது எனத் தெரியாது! அதற்கு ஒரு டியூனும் உண்டு..
“ஊதாமணையை ஒளித்து வைப்போம்”
கண்டு பிடித்தால் கையைத் தட்டுவோம்”
குறள் போன்ற இந்த இரண்டுவரிப் பாடல் இன்றும் எனக்கு 40 வயதைக் குறைத்து என் பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும் சக்தி மிக்கது. ஊதாங்குழலை ஊதும் போது நாம் ஊதும் காற்று இரும்புக் குழாய் வழியே வெளியேறும் போது தூரத்தில் வரும் இரயில் சத்தம் போல பாங்க் எனும் மெல்லிய ஒலியே ஒரு அலாதியான இன்பத்தைத் தரும். புல்லாங்குழலை நாதஸ்வரம் மாதிரி ஊதினா அதான் ஊதாங்குழல் என்பேன் கிண்டலாக! இந்த ஊதாங்குழல்..
அடுப்பூத மட்டுமின்றி விறகுகளை அடுப்புக்குள் தள்ள, எரிந்த கங்குகளை கிளற, தேங்காய் உடைக்க என டேபிள் மேட் போல 18 வகையான உபயோகங்களில் பயன்படுத்தலாம்! முக்கியமாக குவிந்த விறகுகளுக்குள் வந்து தஞ்சமடையும் தேள், பூரான்களையும் கொல்ல பயன்படுத்தும் ஆயுதமாகும். அம்மா அதீத கோபத்தில் அந்த ஆயுதத்தை எங்கள் மீதும் பிரயோகித்தது உண்டு!
நிச்சயம் எங்கள் சேட்டையின் சதவீதம் 90ஐ தாண்டும் போது ஊதாங்குழல் எங்களைத் தீண்டும். ஆனால் இரும்புக் குழாய் என்பதால் அம்மா அவ்வளவு கோபத்திலும் மிக மிக மென்மையாவே அதைக் கொண்டு எங்களைத் தாக்குவார். அதுவே அப்பாவின் கோபத்தில் அவர் கையில் கிடைத்தால் அவ்வளவு தான்! ஹர்திக் பாண்ட்யா போல அடி பின்னிடுவார். ஒரு முறை பட்டாசு வாங்க வீட்டில்..
காசு தராத போது தம்பி அந்த ஊதாங்குழலோடு சில இரும்புகளை எடைக்கு போட்டு காசு வாங்கி பட்டாசு வாங்கியது தெரிந்து, அவனை அடிக்க அப்பா ஊதாங் குழலைத் தேட, நான் விற்றதே அந்த வெப்பனைத் தான் என என் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் ஆனான் தம்பி! அவன் பெயர் பாலசுப்ரமணியன் அல்லவா! அப்பா அப்போது அந்தக் கோபத்திலும் சிரித்த ஒரு அசட்டு சிரிப்பு இப்போதும் என் கண் முன் வந்து போகும்!
காலமாற்றங்களில் இது போல பல பொருட்களை நாம் இப்போது இழந்திருக்கிறோம்! ஆனால் நாம் மறந்து போன ஏதாவது ஒரு பொருளை எங்காவது பார்க்க நேர்ந்தால் நம் மனது இளையராஜாவின் பாடல் போல “அடி அத்தாடி இளமனசொன்னு ரெக்கக்கட்டி பறக்குது சரிதானா” என்று சடாரென நம் பால்ய காலத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். இது எந்தத் தலைமுறை ஆனாலும் அவர்கள் எல்லாருக்குமே பொருந்தும்.!
No comments:
Post a Comment