#தேனான_தேங்காய்_சோறு
பொதுவாக தேங்காய் சோறு எனில் அதில் பூவாகத் துருவிய தேங்காயோ அல்லது தேங்காய் சில்லோ வரமிளகாயுடன் போட்டு ஓப்பேற்றி இருப்பார்கள்! தேங்காய் சோறு என்பது ஓர் பூலோக அமுதம்! அதை சீர் குலைக்கும் வகையில் யாரேனும் சொல்லிட்டா விக்ரம் பட கமல் போல ‘துடிக்குது புஜம்’ எனப் பாடத் தோன்றும்!
ஒரு நல்ல தேங்காய் சோறு எப்படி இருக்க வேண்டும்? பொல பொலன்னு வடித்த சோற்றில் விறைப்பான சோறாகக் கைகளில் ஒட்டாத குழைவுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளித்த கடலை பருப்பும், முந்திரியும் இருக்க வேண்டும்! தேங்காய்சில் எல்லாம் டி.இராஜேந்தரின் பாடல் வரிகள் போல வாலண்டியராக போட்டு ..
தேங்காய் சோறு என்று நிரூபிக்கத் தேவையில்லை வறுத்த முந்திரி அல்லது வறுத்த நிலக்கடலை போட்டு செய்யும் தேங்காய் சோறே மிகச்சிறந்தது! சோறு குழைந்து விட்டால் அது நல்ல தேங்காய் சோறே கிடையாது! விறைப்பாக வெந்த சோற்றில் தேங்காய் சோறு சாப்பிடுவதே சாலச் சிறந்தது! இந்தச் சோற்றிற்கு தொடுகறியாக..
எண்ணெய் கத்திரிக்காய், கார பாகற்காய், புதினா சட்னி போன்றவை தேங்காய் சோற்றின் பெஸ்ட் இணைகளாகும்! நல்ல சூடான வாழைப் பூ வடை இன்னும் பெஸ்ட்! முந்திரி பக்கோடா, ஆனியன் பக்கோடா, கிரிஸ்பியான மிளகு சேவு, கார முறுக்கு, கார மைசூர் போண்டா போன்ற பலகாரங்கள் இதற்கு பலே பொருத்தமாக பொருந்தும்!
எங்கள் அப்பா நடத்தி வந்த ஓட்டலில் கொதிக்கும் சாம்பாரில் ஊறிய மெதுவடை மீது 2 ஸ்பூன் நெய் விட்டு தேங்காய் சோற்றுடன் தொடு கறியாகத் தருவார்! அதைச் சாப்பிடுபவர்கள் பாவம்! சோற்று ருசியா வடையின் ருசியா எது நல்லா ருசிக்குதுன்னு தெரியாமல் குழம்பி தே. சோற்றை விட்டுட்டு 4 சாம்பார் வடைகள் வரை தின்று விடுவார்கள்!
மிளகு அப்பளம், வெங்காய வடகம், தக்காளி வடகம், போன்ற கார வடகங்களும் இதற்கு நல்ல ஜோடியாகும்! வட்டக் கத்திரிக்காய் வறுவல் தேங்காய் சோற்றிற்கு நல்ல காம்போ! கார உருளைக் கிழங்குக் கறி கார வாழைக்காய் கறியும் அப்படியே! வாழைப்பூ வடை அல்லது மசால்வடையும் தேங்காய் சோற்றிற்கு நல்ல காம்போ!
ஆனால் வடைகள் மிகவும் சூடாக இருக்க வேண்டும்! அரைத்துவிட்ட சாம்பாரில் ஊறிய சூடான சாம்பார் வடை இன்னும் பெஸ்ட்! மல்லி / புதினா துவையல், பருப்பு, கொள்ளுத் துவையல், நார்த்தங்காய், மாங்காய், ஆவக்காய் ஊறுகாய்களின் தொக்கு, மாவடு இவை எல்லாம் தேங்காய் சோற்றிற்கு மிக நெருங்கிய நண்பர்களாவார்கள்!
அசைவத்தில் மட்டன் குழம்பு, சுக்கா வறுவல் க்ரேவியுடன் ஒரே ஒரு முறை நீங்கள் தேங்காய் சோறு சாப்பிட்டுப் பாருங்கள்! அதன் பிறகு உலகத்தில் உங்களுக்கு எந்த அசைவ பிரியாணியும் பிடிக்காது! அதன் ருசிக்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள்! சேலம் & நாமக்கல் பக்கம் தேங்காய் சோற்றுடன் வாத்துக்கறி வருவல் மிக ஃபேமஸ்!
கோவையில் சிந்தாமணி சிக்கன் க்ரேவி எனில், ஈரோட்டில் பள்ளிப் பாளையம் க்ரேவி, சேலத்தில் கறி மசால் க்ரேவி, மதுரையில் ஜிஞ்சர் ஈரல், பெப்பர் ஈரல், நெய் சுக்கா, பட்டர் சுக்கான்னு தொட்டுகிட்டு சாப்பிட்டா தேங்காய் சோறு ஒரு சாத்வீகமான பிரியாணி.! அதை எண்ணெய் கத்திரிக்காயுடனோ, எலும்புக் குழம்புடனோ..
நீங்கள் விருப்பம் போல சாப்பிடலாம்! சைவத்தில் அரைத்துவிட்ட சாம்பார் & இஞ்சி புதினா துவையலுடன் உண்பது சொர்க்கம் எனில் அசைவத்தில் மட்டன் சுக்கா, ஈரல் க்ரேவி, இளநெஞ்சு சாப்ஸ் க்ரேவியுடன் உண்பது இன்னும் சிறந்தது! எனது சென்னை நண்பர் ஒருவர் வீட்டில் மிளகு நாட்டுக் கோழி க்ரேவி.. அந்த க்ரேவியில்..
அவித்துப் போட்ட முட்டையுடன் நான் சாப்பிட்ட தேங்காய் சோறு காம்போவிற்கு இன்று வரை ஈடுயிணையில்லை! காரமான சைவ அசைவக் குழம்புகளுக்கு நல்ல காம்போ தேங்காய் சோறே! மிளகு முட்டைக் குழம்புடன் இதை நீங்கள் அனைவரும் சாப்பிட்டால் இதை ஒரு சைவ & அசைவ பிரியாணி என்று ஒப்புக் கொள்வீர்கள்!
இது நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை 💖💖💖
No comments:
Post a Comment