#கிபி20024
சென்னைக்கு மிக மிக அருகில் அமைந்துள்ள கமுதியில் 2 இலட்சம் பேர் அமரக்கூடிய அந்த ஸ்டேடியம் மிக பரபரப்பாக இருந்தது. ஸ்டேடியம் நிரம்பி வழிய அங்கிருந்த நவீன புரொஜக்டர்கள் வானத்தின் ஒளியை குறைத்து அதையே ஸ்க்ரீனாக்கி நடப்பதை லைவ்வாக ஒளிபரப்பின. ஸ்டேடியத்தின் கூரைப்பகுதியில் 160 அடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்த ஹெலி கார் பார்க்கிங்கில்..
1 இலட்சம் ஹெலி கார்களை பார்க்கிங் செய்யலாம் சென்னையில் இருந்து கமுதிக்கு வெறும் 35 நிமிடங்களே ஹெலிகார் பயணம்.. ஸ்டேடியம் முழுவதும் கமண்ட்டோ பிராண்ட் பியர்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அனைவர் கையிலும் யூஸ் அண்ட் த்ரோ எகோ ஃப்ரெண்ட்லி அக்ரிலிக் டம்ளர்களும் அதில் நுரை ததும்ப பியரும் வழிந்து கொண்டிருக்க.. மக்களும் உற்சாகத்தில் வழிந்தனர்.
அக்கால மக்கள் யாவரும் மழு மழு வென இருந்தனர்.. யாருக்கும் கூந்தல் மீசை தாடி புருவம் எதிலும் ரோமமில்லை! கிட்டத்தட்ட நம் காலத்து துக்ளக் சோ அவர்கள் ஸ்டைலில் பளபளவென இருந்தனர் விருப்பப்பட்டவர்கள் மட்டும் புருவம் வரைந்து இருந்தனர். ஆண் பெண்களை கூட மார்பை வைத்து தான் அடையாளம் சொல்ல முடிந்தது. அது ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம்.!
அந்த மைதானத்தின் பெவிலியனில் அணுகுண்டால் கூட துளைக்கமுடியாத டைட்டானிய கூண்டுக்குள் கருப்பு முக்காடு போட்ட 13 உருவங்கள் அமர்ந்திருந்தன.. அன்று அந்த 13 நபர்கள் தான் அங்கு காட்சிப் பொருட்கள் நம் நாட்டின் பெண் அதிபரான அயன் லேடி தலைமையில் அவர்களை பொது மக்கள் காண ஒரு அரிய வாய்ப்பு! வெறும் 1 மணிநேரம் தான் பொதுமக்களுக்கான அனுமதி!
அதற்கு பின்பு அவர்கள் அரசாங்க ஆராய்ச்சிக் கூடத்தில் அடைக்கப் படுவார்கள் அதன் பின்பு அவர்கள் சாகும் வரை அங்கே தான் இருக்க வேண்டும். பொதுமக்கள் எவரும் அடுத்து காண அனுமதியில்லை. எனவே தான் கூட்டம் அலை மோதியது!ஸ்டேடியம் வராத மக்கள் வீட்டில் இருந்த படியே வானத்தில் ஒளிபரப்பாகும் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர்.இந்தியா முழுவதும் இதே நிலை தான்..
மிகச்சரியாக 10:29:15யில் சுற்றிலும் 20 பாதுகாப்பு ஹெலி டாக்சிகள் சூழ நடுவில் பிரம்மாண்டமான ஒரு ஹெலி ஷிப்.! மூவர்ண தேசிய கொடி நிறத்தில் பறந்து வந்து மைதானத்தின் நடுவில் இறங்கியது! அதிலிருந்து வெளிப்பட்டார் இந்தியாவின் பெண் அதிபரான அயன் லேடி வயது 26 வெள்ளரிப்பழமும் ரோஸ்மில்க்கும் கலந்த பளீர் நிறம்.. மொழு மொழு மொட்டைத்தலை.
ஃபைபர் இழைகளால் நெய்யப்பட்ட சில்வர் & பிளாக் நிற ஆடையில் ஹாலிவுட் நாயகி போல ஜொலித்தாள்! ஸ்டேடியத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று தங்கள் வலதுகையை இதயத்தின் மீது வைத்து பாரத் புத்திரி கீ ஜே..என்று முழங்கியது இராமேஸ்வரம் வரை கேட்டது மைதானத்தின் நடுவில் உள்ள மேடைக்கு ஹெலி ஷிப்பில் இருந்து போக ப்ரத்யேக எலிவேட்டர் அமைக்கப்பட்டிருந்தது.
அதில் நின்றுபடியே சுற்றிலும் உள்ள மக்களைப்பார்த்து கையசைத்தபடியே மேடையேறினாள் அயன் லேடி.!மிகச் சரியாக 10:35:00 மணிக்கு பேச ஆரம்பித்தாள்! மைக் எதுமின்றி அதி நவீன டெக்னாஜி மூலம் அமைக்கப்பட்டிருந்த சவுண்ட் எஃபெக்டில் டிஜிட்டல் துல்லியத்தில் அவள் குரல் ஒலித்தது.. வணக்கம் என் அன்பான பாரத தேசத்தின் குடிமக்களே வாழ்க பாரதம்..
வாழ்க வையகம் என்று ஆரம்பித்தாள்.. கைத்தட்டலில் மீண்டும் இராமேஸ்வரம் அதிர்ந்தது. மக்களே அந்த 13 பேரைக் காண நானும் உங்களைப் போல ஆவலாக இருக்கிறேன் கொண்டு வாருங்கள் அவர்களை இந்த மேடைக்கு என்று உத்தரவிட்டாள்.. அந்த 13 பேர் இருந்த டைட்டானியம் சேம்பர் அப்படியே ஜிவ்வென எழுந்து பறந்து வந்து மேடைக்கு அருகே வந்து நின்றது.. அதில் இருந்த 13 பேரும்..
கீழே இறக்கப்பட்டனர் அவர்களை சுற்றி இராணுவ கமெண்டோக்கள் பாதுகாப்பாக நிற்க அனைவரின் முக்காடுகளையும் நீக்க அயன் லேடி உத்தரவிட்டாள். 13 பேரின் முக்காடும் நீக்கப்பட அவர்கள் முகத்தை கண்ட மைதானத்தில் இருப்பவர்களும் லைவ்வாக வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும்.. ஓ. கடவுளே.. என்ன கொடூரம்.. அய்யய்யோ படு கோரம்.. என்னால் இதை பார்க்கவே முடியாது..
ச்சே இப்படியும் மனிதப்பிறவிகளா இப்படி பலர் அலறியே விட்டனர்.. பலர் தங்கள் வேர்ல்டு புக்கில் அதை விடியோ பதிவாக லைவ் போட இதே போன்ற ஏராளமான கமெண்ட்டுகளும் லைக்குகளும் பிற நாடுகளிலும் இருந்து குவிந்தன.. அனைவரின் முகமும் இப்போது லைவ்வில் க்ளோசப்பில் தெரிய பலர் குபுக்கென வாந்தியே எடுத்துவிட்டனர்.. அயன் லேடிக்கே வாமிட் சென்ஸ் வந்தது.!
ஆம் அவர்கள் அனைவரின் முகத்திலும் தாடி மீசையும் கரு கருவென இந்த காலத்து க்ராப்பும் இருந்தது!! அயன் லேடி பேசத் தொடங்கினாள். எனதருமை பாரத புத்திரர்களே.. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் தோன்றிய போது மனித உடலில் ஆறரை இஞ்ச் கனத்தில் ரோமங்கள் இருந்தன.. ஏனெனில் அவன் அன்று வெட்ட வெளியில் வசித்தான்!
குளிர், மழை, பனி வெப்பம் என்று எல்லா பருவகாலத்திலும் அவன் வாழ அவனுக்கு பாதுகாப்பாக இருந்தன அந்த ரோமங்கள்! பிறகு மரத்திலும் பிறகு குகைகளிலும் வாழத் தொடங்கிய போது அவை கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்கி, மனிதனின் வால் மறைந்து கால்களால் நடக்க ஆரம்பித்து வீடுகள் கட்டி வாழத் துவங்கிய போது அவை 1 இஞ்ச் கனத்திற்கு பரிணாம வளர்ச்சியில் குறைந்து போயின.
அறிவியலும் விஞ்ஞானமும் உச்ச நிலை அடைந்த 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் கூட மீசை தாடி தலை முடி இருந்தது. அந்த முடி கொட்டிப் போனதற்கு வருத்தப்பட்ட காமெடி, கூந்தல் வளர தைலம் வாங்கிய காமெடி, விக் அணிந்த காமெடி எல்லாம் நடந்தது. அமேசான் காட்டு அரிய மூலிகை என்றெல்லாம் அடித்துவிட்டு காசு பார்த்தார்கள் மக்களும் அதை தீவிரமாக நம்பினார்கள்.!
அன்றே உயிர் வாழ்ந்த சுஜாதா என்னும் மஹான் அதுவும் நம் இந்திய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞான எழுத்தாளர் இன்னும் 18 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனுக்கு முடி நகம் எதுவும் இருக்காது எனத் துல்லியமாக கணித்து எழுதினார். ஆனால் 18 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் மனித ஜீன்களில் இருக்கும் ரோமம் வளரும் மாலிக்யூல்களால் முடி வளர்த்த மனிதர்கள் உலகிலேயே 13பேர் தான்!
அந்த 13 பேரும் ஆதி மனித குடி தோன்றிய இந்தியாவில் தான் வசிக்கின்றனர் என ஐ.நா தந்த தகவலின் படி இந்த 13 பேரை நாடு முழுவதும் அலசி ஆராய்ந்து தேடிப்பிடிக்க 15 மாதங்கள் ஆகின! இவர்கள் ஆராய்ச்சிக்காக அரசு ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்படுவார்கள்! அங்கு பல ஆராய்ச்சிகள் இவர்களை வைத்து நடக்கும்! ஆயுள் முடியும் வரை இவர்கள் அங்கு தான் இருப்பார்கள்.
இனி உங்கள் வீட்டில் ரோமத்துடன் குழந்தை பிறந்தால் அதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்! தெரிவிக்காவிட்டால் அது தேசத்துரோகம் எனக் கருதி அந்தக் குடும்பமே மரணதண்டனைக்கு உள்ளாவார்கள்! என்னும் சட்டத்தை இதோ இங்கேயே அறிவிக்கிறேன்! ம்ம் இந்த 13 பேரையும் அரசு ஆராய்ச்சிகூடத்திற்கு கூட்டிச் செல்லுங்கள் எனக் கட்டளையிட்டாள்.!
மீண்டும் அவர்களது முகங்களை மூடி அந்த சேம்பரில் ஏற்றி அதை கிளப்ப.. கையசைத்தபடி அயன் லேடியும் கிளம்ப.. மக்களும் தங்கள் ஹெலி கார் பார்க்கிங் நோக்கி கலைய..
“சார்..சார்.. சார்.. அட என்னா தூங்கிட்டிங்களா?!
ஹேர் கலரிங் முடிஞ்சு 15 நிமிடம் ஆயிடுச்சு தலையை வாஷ் பண்ணனும் வாங்க” என்று ஸ்பா ஊழியன் சொன்ன போதுதான் தான் வந்து இருப்பது ஹேர் கலரிங் பண்ண வந்த ஸ்பா என்பதையும் நேற்றிரவு சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் புத்தகத்தை படித்ததும் நினைவுக்கு வந்தது..
எவ்வளவு ஆச்சுப்பா?
600ரூபா சார் பே டி எம்னா 10%டிஸ்கவுண்ட் என்றான் சலூன் கடைக்காரன்.!
No comments:
Post a Comment