👂🏼🎶 காதோரம் போய் சொல்லு 🎶👂🏼
தமிழ் சினிமா பாடல்களில் உடுமலை நாராயணகவி, பட்டுக் கோட்டை, மருதகாசி, கு.மா. பாலசுப்பிரமணியன், கா.மு. ஷெரிப், கண்ணதாசன்,வாலி வரிசையில் இடம் பெறக் கூடிய தகுதி பெற்றவர் டி.ராஜேந்தர்! காதல் உவமைகளில் உவமைக் கவிஞர் சுரதாவின் உயரம் வரை தொட்டுவிட்டு வந்த அபார தமிழறிவு கொண்டவர்.
திரைத் துறையில் அவர் கோலோச்சிய காலம் இளையராஜாவும் வைரமுத்துவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக உச்சத்தில் இருந்த காலம். அந்த இரட்டைக் குழலுக்கு நடுவில் இனிய புல்லாங்குழலாக டி. ராஜேந்தரின் பாடல் வரிகள் மிளிர்ந்தது! அன்றே ஏய் யார்றா இந்தப் பையன்னு இவரை முதலில் வியந்தது கண்ணதாசன் தான்!
ஒரு தலை ராகம் படத்தில் வாசமில்லா மலரிது பாடலில் “வைகை இல்லா மதுரை இது மீனாட்சியைத் தேடுது” இந்த வரிகளைத் தான் அட வித்யாசமா இருக்குய்யா இந்த சிந்தனை என வியந்தார் கவியரசர்! சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு மரியாதை செய்திட வைகைக்கரை பாடலை எழுதினார் இந்த காவிரிக் கரைக்காரர்.
டி. ராஜேந்தர் தமிழ் மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் அபார பற்று கொண்டவர். டி.ராஜேந்தர் காதலில் தோல்வியடைந்தவர்! அதனால் தான் அவர் உணர்வுப் பூர்வமாக பாடல் எழுதுகிறார் என்பார்கள்! அவர் காதல் கைகூடவில்லை என்றாலும் அவர் காதலித்த தமிழ் அவரை கைவிடவேயில்லை! அவரது கற்பனையில் தமிழ் பெருக்கெடுத்தது!
தமிழ் மீது அவர் கொண்ட காதல் அவர் கற்பனையில் பாடல்களாக பிறந்த போது அது சிகரம் தொட்டது! அவர் காதலித்த பெண்ணுக்கு எழுதிய பல வரிகள் அவர் பாடல்களில் வந்தது! அந்தப் பெண் வேண்டுமானால் அதை புறம் தள்ளியிருக்கலாம்! ஆனால் ஒட்டு மொத்த தமிழினமே அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியது!
இலக்கியச் சுவை, உவமைச் சுவை, எளிய சொற்கள், வார்த்தைகளின் கட்டமைப்பு, எதுகை, அடுக்கு மொழி என அனைத்து அழகு தமிழ் சாதனங்களையும் எடுத்து டி.ஆர் பாடல்களை சீவி, சிங்காரித்து, சிறப்பித்துத் தந்ததை இனி ஒவ்வொன்றாக ரசிப்போமா..
ஒரு தலை ராகம் படத்தில் எந்தப் பாடலை விலக்குவது?! “இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலுக்கு வருவோம்.. சூடான நிலா, குளிரும் சூரியன் என்று எதிர்மறை கற்பனையில் இப்பாடலை எழுதியிருப்பார் இது இரவு நேர பூபாளம், இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம் என பல்லவியில் துவங்கி
சரணத்தில் “நடை மறந்த கால்கள் தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன், வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன், சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன், உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்..
அவரது அபார கவித் திறனுக்கு இது ஒரு சோறு பதம்! இந்தப் பாடலின் நீட்சியாக ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ பாடல் வரும்
“பாட்டிசைக்க மேடை கண்டேன் ராகங்களை காணவில்லை.. பலர் இழுக்கத் தேரானேன் ஊர்வலமே நடக்கவில்லை” இப்பாடல் முழுக்க விரக்தி தொனிக்கும். டி. ஆர் படத்தில் இது போன்ற ஒரு சோகப் பாடல் அன்றைய டிரெண்ட்! அதுவும் லெஜண்ட் TMS குரலில்!
அதே போல டி.ஆரின் குத்துப் பாடல்களில் இவரது எளிய சொற் பிரயோகம், பாடலின் ஒவ்வொரு வரிகளின் இறுதியில் வரும் எதுகை அந்தப் பாடலை எளிய மக்களையும் முணுமுணுக்க வைத்துவிடும் இதற்கு உதாரணம் “கூடையில கருவாடு” பாடல்..
“ஆயிரத்தில் நீயே ஒண்ணு, நானறிஞ்ச நல்ல பொண்ணு, மாயூரத்து காளை ஒண்ணு, பாடுதடி மயங்கி நின்னு..
ஒண்ணு, பொண்ணு, நின்னு.. இந்த சொற்கட்டு மிக எளிமையாக பாமரனுக்கும் போய் சேர்ந்தது. பின்னாளில் அட யாரோ பின்பாட்டுப் பாட, மொட்டு மொட்டு ஜாதி முல்லை, அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே, கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜுக்கு, உங்கொப்பன் மவனே, என் ஆசை மைதிலியே, தன்னந்ததனி காட்டுக்குள்ள.. எல்லாமே மாஸ்!
ஆம்! டி.ஆரின் சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களின் வரிசை மிக நீளமானது. அவரது இலக்கியத்தரமான கற்பனை வரிகளின் லிஸ்ட்டும் பெருசு சிலவற்றை மட்டும் பார்ப்போமா! இரயில் பயணங்களில் வரும் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் பாடலின் சரணத்தில்..
கருவண்டு நடனம், தருகின்ற நளினம். இதயத்தில் சலனம் அம்மம்மா உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழ் மணமோ செம்மார்ந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் புது ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்..
என்ன ஒரு அழகிய கவிநயமான எழுத்து! இப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனை இதழ்கள் ஊறுமடி என்ற இடத்தில் இவ்வரியை நிறுத்தி இதழ்.. கள் ஊறுமடி எனப் பிரித்து பாட வைத்திருப்பார்.!
இப்படத்தில் அடயாரோ பின்பாட்டுப்பாட என்னும் டப்பாங் குத்து பாடலில் கூட..
ஓர விழியிலே சேர துடிச்சே.. நீ சேரன் வில்லிலே புருவம் அமைச்ச
தேனில் குழைச்ச வீணை ஸ்வரத்த.. நீ தேடி புடிச்சே, பேசி சிரிச்சே..
அட கைபட்டு, மெய் பட்டு, மைப் பொட்டு கலைந்தாலென்ன…
எஸ்.பி.பியின் குரல் இந்தப்பாட்டுக்கு 2 ஸ்டார்களை கூட்டியிருக்கும். அய்யா TMS அவர்கள் ராஜேந்தர் இசையில் பாடிய பாடல்களில் நூலும் இல்லை வாலும் இல்லை.. ஒரு கிளாசிக்..
நிழல் உருவில் இணைந்திருக்க.. நிஜம் வடிவில் பிரிந்திருக்க…
பூத்தால் மலரும் உதிரும்.. நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை…
நிலவும் தேய்ந்து வளரும்.. அவள் நினைவோ தேய்வதில்லை…
இப்படி துவங்கிய டி.இராஜேந்தரின் கவித்திறன் மேலும் பல உச்சங்களைத் தொட்டது! அவரது அடுத்தடுத்த படங்களில் அவர் இசையமைத்த பாட்டை எல்லாம் பட்டை தீட்டிய வைரமாக தந்தார்! அவை இன்று வரை ஜொலிக்கின்றன அதைப் பற்றி அடுத்தப் பதிவில்..
🎶 இசைக்கும் 🎶
No comments:
Post a Comment