Thursday, 16 January 2025

பரோட்டா விளையாடல்

“மதுரை பன் பரோட்டா விளையாடல்”

மதுரையில் சொக்கநாதராக வசிக்கும் சிவபெருமான் அவரது மனைவியின் ஆட்சி அங்கு நடப்பதால், அவளிடம் தன் பருப்பு வேகாதென்று தன் சேட்டைகளை தன் பக்தர்களிடம் காட்டி சோதிப்பார்! பிட்டுக்கு மண் சுமந்து, நரியை பரியாக்கி, ஏழை தருமிக்கு பொற்கிழி கொடுத்து என மதுரையில் அவர் நடத்திய திருவிளையாடல்கள் இன்றளவும் முறியடிக்க முடியாத ரெகார்டுகள்!

பிள்ளைக் கறியே கேட்ட அந்த பித்தன் ஏன் இங்கு பிட்டுக்கு மண் சுமந்தான்? அவன் மட்டும் சிறிது மனம் மாறியிருந்தால் மதுரையின் அசைவ உணவுகள் மீது பித்தம் கொண்டு கறி தோசை, அயிரை மீன் குழம்பு, நண்டு ஆம்லெட், பன் பரோட்டா என மதுரையின் புகழ் பெற்ற உணவுகளுக்காக தனது விளையாடல்களில் ஒரு பொக்லைன் இயந்திரமாகவே மாறி டன் கணக்கில் அல்லவா மண் சுமந்திருப்பான்!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்று செண்பகப் பாண்டியனிடம் வாதிட்டவன்.. பன் பரோட்டாவிற்கு சிறந்தது குருமாவா சால்னாவா என பட்டிமன்றமே நடத்தி இருப்பான். இனி பன்பரோட்டாவை பற்றி பார்ப்போமா! பன்பரோட்டாவின் பிறப்பிடம் பேரறிஞர் அண்ணா & கலைஞர் கருணாநிதி இருவருக்கும் புகழ் தருவது போல அமைந்தது!

ஆம்! மதுரையில் அண்ணா நகருக்கும் கே.கே. நகருக்கும் மிகச் சரியாக நடுவில் இளவயது கலைஞரின் தலை வகிடு போல அமைந்த சாலையில் மதுரை ஆவின் பாலகம் அருகே தான் பன்பரோட்டா உருவானது! பன்பரோட்டாவிற்கு மைதா மாவில் பால் ஊற்றி பிசைவார்கள்! ஆவின் அருகே அமைந்ததால் தான் பரோட்டாவில் பசும்பால் சேர்க்கின்றனர்! இதுவே தான் அந்தப் பாரம்பரியம்!

இப்படி நாளை யாராவது வாட்ஸப்பில் வடை சுடலாம். ஆனால் காரணம் அதுவல்ல! பரோட்டா மாவை புளிக்க வைக்கத்தான் பால் சேர்க்கப்படுகிறது! முட்டை, சர்க்கரை, பால் சேர்த்து மாவை பிசைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து புளிக்க வைத்து பிறகு ஆயில் + டால்டா கலந்து அதில் ஒரு அரைமணி நேரம் ஆயில் பாத் எடுக்கவிட்டு பிறகு அதை லாவகமாக விசிறி பலூன் போல..

மாவினுள் காற்று இருக்கும்படி மடித்து அதை ரோஜாப்பூ போல சுருட்டி பன் போல ஆக்குவார்கள்!அந்த பச்சை மாவே உங்களுக்கு புரோட்டா சாப்பிடும் இச்சையை தூண்டும். மதுரையில் ஏராளமான புரோட்டா விஞ்ஞானிகளும், சால்னா அறிஞர்களும், புரோட்டாலஜி படித்த பேராசிர்யகளும் இருக்கின்றனர்! இவர்களில் நக்கீரன் வழி வந்த அதி தீவிர புரோட்டா வல்லுநர்கள் இருக்கிறார்கள்!

புரோட்டாவின் நிறத்தை பார்த்ததுமே அதன் குலம், கோத்திரம், ராசி, நட்சத்திரம் என அதன் ஜென்ம ஜாதகத்தையே எழுதிவிடுவார்கள். சால்னாவை வைத்து அது எந்தக் கடை என்று கண்டுபிடித்து விடுவார்கள்! அரைகுறை கடைகளில் வாங்கிய புரோட்டாவை அவர்களிடம் காட்டினால் சிவனிடம் கூடப் போகாமல் அவர்களது இரு கண்களையே நெற்றிக் கண்ணாக்கி நம்மை எரித்துவிடுவார்கள்.

பன் புரோட்டாவை அண்ணாநகரில் வாங்கு.. யானைக் கல்லில் வெங்காயக் குடல் வாங்கு.. தல்லா குளத்தில் நெய் பரோட்டா.. நெல் பேட்டையில் பீஃப் மசாலா.. பெரியார் கிட்ட சூடான பொரிச்ச பரோட்டா.. ஜெய்ஹிந்துபுரத்துல மட்டன் சுக்கா.. முனிச்சாலையில பிச்சுப் போட்ட புரோட்டா.. தவிட்டு சந்தை கிட்ட நாட்டுக் கோழி குழம்புன்னு விதவிதமா பட்டியல் போட்டு மகாகவி பாரதியார் போல..

“சென்றிடுவீர் மதுரையின் எட்டுத் திக்கும் - பரோட்டா செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று திசைக்கு ஒரு கடையில் வாங்கி அதை ருசிப்பார்கள்!

அவர்களிடம் பன் பரோட்டா மீது எப்படி சால்னா ஊற்றிச் சாப்பிடுவது எனக் கேட்டால் அதற்கு டிரெயினிங் கோர்ஸே தரும் அளவுக்கு சொல்வார்கள். நல்ல பன் பரோட்டா என்பது அதன் ஓரங்களிலும் மேல்புறத்திலும் மொறு மொறுனு நடுவில் பன் போல மென்மையிலும் காணப்படுவதே! தள தளன்னு இருக்கும் சால்னா எனில் சூடான பரோட்டாவின் மேல் ஊற்றி ஊற வைத்து சாப்பிடலாம்.

திக்கான மட்டன்/ நாட்டுக்கோழி க்ரேவி, சுக்கா வருவல் குழம்பு எனில் அதை ஓரமாக ஊற்றி பரோட்டாவை பிய்த்து அதில் நன்கு தோய்த்து உண்பது நன்று. ஒவ்வொரு தோய்ப்பிலும் ஒரு மட்டன் அல்லது ஒரு சிக்கன் கறித்துண்டு இருப்பதும் அதனினும் நன்று! பன் பரோட்டா உடன் முட்டை எனில் ஆஃப்பாயில் சாப்பிடுவது ஓர் அற்புதம்! அரை வேக்காடாக இருக்கும் அந்த மஞ்சள் கருவை..

கவனமாக உடைத்து பரோட்டாவை அதில் நனைத்து அதோடு சால்னாவையும் குழைத்து.. அட போங்கப்பா!! ஆம்லெட் எனில் சூடான கரண்டி ஆம்லெட் சாப்பிடுவது சாலச் சிறந்தது! தற்போது மதுரையில் பன் புரோட்டா பலூன் பரோட்டா, வெல்வெட் பரோட்டா (நெய் பரோட்டா), க்ரேப் பரோட்டா, கேக் பரோட்டா, பர்கர் பரோட்டா, எக் பன் பரோட்டா, சாண்ட்விச் பரோட்டா என..

பரோட்டா தனது லேட்டஸ்ட் வெர்ஷனில் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது! மதுரையில் சமீபத்தில் ஒரு கடையில் பார்த்து வியந்தது “ஆண்ட்ராய்ட் வீச்சு புரோட்டா” அடுத்து ஆப்பிள் பரோட்டா கூட வரலாம்! இப்படி விதவிதமான பெயர்களில் அறிமுகமாகும் உணவுகள் மதுரையில் ஏராளம் (உதாரணம் மாஸ்க் பரோட்டா) ஆனால் அதில் நிச்சயம் ஏதாவது ஒன்று ஹிட்டாகி உலகப் புகழ் அடையும்!

மதுரை என்னென்ன புதிய வகை பரோட்டா வகைகளை தரவிருக்கிறது அது உலகம் முழுவதும் எப்படி பேசப்பட போகிறது என்பதெல்லாம் வழக்கம் போல அந்த அன்னை மீனாட்சியும் அவரது நெற்றிக் கண்வர் சிவனும் மட்டுமே அறிந்த ரகசியம். 💖 🥰

No comments:

Post a Comment