“கஜடா என்றழைக்கவா”
முருகா என்றழைக்கவா, முத்துக்குமரா என்றழைக்காவான்னு டி.எம்.எஸ் தன் கணீர் குரலில் பாடும் பாடல் வரிகளை ஏன் இங்கு சொல்றேன்னா எழுதப் போற விஷயம் அப்படி! நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுகள் மீதுள்ள காதல் உலகறிந்தது! நமது மரபணுக்களிலேயே உணவு ரசனை பின்னிப் பிணைந்துள்ளது!
நம்ம உணவுக் கலாச்சாரத்தில் தான் எத்தனை விதவிதமான பலகாரங்கள்! பலப் பல வகைகள் இருப்பதால் தான் இதுக்கு பலகாரம்னே பேரு வச்சிருப்பாங்க போல! அதிலேயும் தமிழக டீக்கடை பலகாரங்கள் என்றால் என்சைக்ளோபீடியா சைஸில் பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு வெரைட்டிகள் இருக்கு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மண்ணின் மணத்தையும் குணத்தையும் தன்வசம் கொண்ட சிறப்பு வாய்ந்த பலகாரங்கள் குவிந்துள்ளன! அதுல ஒண்ணு தான் இந்த கஜாடா! இது இனிப்பு பலகாரம்! நல்ல மொறு மொறுன்னு அளவான இனிப்பா இருக்கும். சூடா சாப்பிட்டா ஒரு ருசி ஆறினா ஒரு ருசின்னு 2 வகை ருசிகள்!
ரெண்டு ருசியுமே அட்டகாசமா இருக்கும்! அதிரசத்தை அளவான இனிப்பா சாப்பிட்டா எப்படி இருக்குமோ கிட்டத்தட்ட அந்த ருசி தான். ஆனா இது கெட்டியா, கிறிஸ்பியா இருக்கும்! மேக்கப் போட்ட கன்னத்தில் ஜிகினா மினுக்குறா மாதிரி இதன் மீது ரவை துணுக்குகள் மின்னும்! இதன் வாசம் ரொம்ப நல்லாயிருக்கும்!
பல டீக்கடைகளில் இதான் தேசியப் பலகாரம்! டி.எம்.எஸ் எப்படி பல பெயர்களில் முருகனை அழைப்பாரோ அதுமாதிரி சென்னை, வட தமிழ்நாடு பக்கம் இதை கஜாடான்னும், தென் மாவட்டங்களில், வெடி கேக், வெட்டு கேக், முட்டைகோஸ், ஆட்டுக் கால் கேக், வெடி கோஸ்னு பல பெயர்களில் இதனை நம் மக்கள் அழைக்கிறார்கள்.
செல்லூர் பக்கம் போனா காலை 7 மணிக்கே நூற்றுக்கணக்கில் இதை பொரிச்சு எடுத்து தட்டில் கொட்டுவார்கள். ஒவ்வொரு கேக்கும் கிரிக்கெட் பந்து சைஸில் நல்லா அகலமா மலர்ந்த ரோஜாப்பூ போல தெரியும். அந்தப் பிளவுகளை பிரிச்சு தான் சாப்பிடணும். வெளியே கிறிஸ்பி, உள்ளே மென்மையா இருக்கும்!
2 வெடி கேக்கும் 1 டீயும் குடிச்சா அடுத்த 2 மணிநேரம் பசிக்காது! சிலர் 3 கேக் சாப்பிட்டுட்டு உள்ளூர் அரசியல் முதல் உலகரசியல் வரை பேசிட்டு போவாங்க! எங்க பெரியப்பா கிண்டலா எலே டீக் கடையில சூதானமா அரசியல் பேசுங்கய்யா அப்புறம் கோபம் வந்து வெடி கேக்கை வீசி அடிச்சிக்க போறிங்கன்னு சொல்வார்.
அவர் சொல்றா மாதிரி சில கடைகளில் இந்த கேக் அப்படித்தான் கையெறி குண்டு போலவே இருக்கும். எடுத்து எறிஞ்சு மேல பட்டா நிச்சயம் வலிக்கும்! முட்டையும், பேக்கிங் சோடாவும் இதில் சரியா சம அளவு சேர்த்தால் கேக் வெடி கேக்கா இல்லாமல் ரசிச்சு “கடி கேக்” போல மாறிடும்! இதுக்கும் ஸ்பெஷல் கடைகள் இருக்கு!
இந்த கேக் பொதுவா பிரவுன் அல்லது செக்கு எண்ணெய் கலரில் தான் இருக்கும்! விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் பக்கம் எல்லாம் இந்தக் கேக்கை டைமண்ட் ஷேப்பில் தருவார்கள்! நிறத்திலும் மஞ்சள், ஆரஞ்சு, ஏன் நடிகை தமன்னா நிறத்தில் வெள்ளாவி வெளுப்புடனும் கிடைக்கும்!
வெடிகேக், பால்பன் சாப்பிட்டவர்களுக்கு இலவசமா கொஞ்சம் சேவு மிக்ஸர் கொடுத்த கடைகள் எல்லாம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்திருக்கின்றன! ருசியான டீ, அற்புதமான கேக், கொஞ்சம் சேவு/ மிக்ஸர் இதற்கே அன்று ஆழ்வார்கள் போல இந்திரலோகமாளும் அப்பதவியே வேண்டாம் என்றவர்கள் பலர்!
வெடி கேக் என்னும் ரஜினிக்கு பால் பன் என்கிற கமல் தான் அப்ப மார்க்கெட் போட்டியாளர்! இது கெட்டின்னா, அது சாஃப்ட், இது அளவான இனிப்பு, அது அதிக இனிப்பு ஆனா வெடி கேக் சும்மா அப்படியே கையில் எடுத்து சாப்பிடலாம் பால் பன்னில் ஜீரா ஒழுகும் கை பிசுபிசுக்கும் ஆனா ரெண்டுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
குமரி, நெல்லை, ராம்நாட், மதுரை, திருச்சி, சேலம், கோவை, தஞ்சைனு ஒவ்வொரு ஊரு உணவுக்கும் பெரிய இதிகாசமே எழுதலாம்! ஒரு விறகுவெட்டி ஹேமநாத பாகவதரை போட்டியில் தோற்கடிச்சது போல தமிழ்நாட்டு டீக்கடை உணவுகள் போதும் உலகின் எந்தப் பலகாரத்தோடும் போட்டியிட்டு வென்றுவிடும்!
No comments:
Post a Comment