Thursday, 16 January 2025

நல்ல ஓட்டல்

“ஓட்டலில் ஒலிக்கட்டும் உரிமைக்குரல்”

வறுவலில் உப்பு அதிகமாயிருக்குன்னு ஓட்டலில் நீங்க சாப்பிடும் போது சர்வர் கிட்ட புகார் சொன்னா என்னா பண்ணுவாங்க? என்னான்னு பார்க்குறேங்க, இதுவரைக்கும் யாரும் உப்பு அதிகம்னு சொல்லலையேங்க.. மாஸ்டர் கிட்ட சொல்றேங்க.. அதோ அவர் தான் ஓனர் அவர் கிட்ட கேளுங்க.. என்று பல பதில்கள் வரும். அதிக பட்சமா வேற தர்றேன் சார்னு கிச்சனுக்கு எடுத்துட்டு போவாங்க.

அங்க திரும்ப மசாலாவை கூட்டிக் குறைச்சு அதை சூடு பண்ணி ஏதாவது மேக்கப் பண்ணி திரும்ப அதையே எடுத்துட்டு வந்து தருவாங்க இல்லியா! சமீபத்தில் நானும் என் நண்பரும் சாப்பிட்ட ஓட்டலில் இதே புகாரை நண்பர் சொன்ன மறுவிநாடி அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது! எங்களுக்கு சப்ளை செய்த சர்வரே டக்குன்னு அந்த தட்டை அப்பயே டேபிளில் இருந்து எடுத்துகிட்டார்!

எங்களிடம் எந்த விதமான வாக்குவதமும் செய்யவில்லை! உப்பு கூடிப்போனதற்கு வேறு காரணங்கள் சொல்லி மழுப்பவில்லை! மேனேஜரையோ அல்லது அங்கு கல்லாவில் இருந்தவரையோ கேளுங்கன்னு எங்களுக்கு யாரையும் கை காட்டவில்லை! ஒருவேளை இவரே முதலாளியோ என்று சந்தேகத்தில் அவரிடம் கேட்டதுக்கு இல்லிங்க நான் இங்கே பணியாளர் தான் என்றார்!

சார் நீங்க திரும்பவும் இதே வறுவல் வாங்கினாலும் சரி அல்லது வேறு உணவு வகைகள் வாங்கினாலும் சரி இதுக்கு பில் போட மாட்டோம் என்றார்! ஓட்டல் தொழிலில் மிக மிக மிக முக்கியமான வெற்றிகரமான ஃபார்முலா இது! இன்றைக்கு ஓட்டலில் உணவு சரி இல்லைன்னா யாரும் எதிர்க் கேள்விகள் கேட்பதில்லை! நாம சாப்பிடும் உணவுக்கு நாம் பணம் தருகிறோம் என்பதையே மறந்து தயங்குகிறார்கள்!

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று அமைதியாகிவிடுகிறார்கள்! அல்லது ஓட்டல் காரர்களிடம் இதுபற்றி விவாதிக்க பயப்படுகிறார்கள்! சரி அடுத்த முறை இங்க வரவேண்டாம் கிளம்புங்க என்பதே அவர்களது அதிகபட்ச எதிர்ப்பாக உள்ளது! நமக்கு திருப்தி இல்லாத உணவுக்கு நாம் பணம் தரத் தேவையே இல்லை! அவ்வுணவின் தரம் மற்றும் அதன் ருசிக்கு அந்தக் கடைக்காரர் தான் முழு பொறுப்பேற்கணும்!

நம் கேள்விக்கு பொறுப்பான பதில் வரும் வரை நாம் அதை விடக் கூடாது! அந்த உணவை அப்படியே பார்சல் செய்து வாங்கி தரக் கட்டுப்பாடு சோதனைக்கு அனுப்பினால் போதும்! அந்த உணவு தரமற்றதென ஆய்வறிக்கையில் வந்தால் நாம் தகுந்த நஷ்ட ஈடு பெற முடியும்! ஓட்டல்காரர்களும் தங்கள் உணவில் தவறு இருந்து வாடிக்கையாளர் அதிருப்தி அடைந்தால் வாதம் செய்யக்கூடாது!

உடனே அதை திரும்ப வாங்கிக் கொள்ளவேண்டும்! அப்படிச் செய்வதே ஒரு சிறந்த உணவகத்தின் அடையாளம்! ஓட்டல் என்பது சேவைத் தொழில் என்று நினைப்பவர்கள் இங்கு மிகக் குறைவு! உங்கள் உணவை நம்பி பணம் கொடுத்து உண்பவர்களின் ஆரோக்கியத்தோடு விளையாடவேண்டாம்!

அதே நேரம் இன்றைய இணைய உலகில் வேண்டுமென்றே ஒரு நல்ல உணவகத்திற்கு அவப்பெயர் வர பொய்யான தகவல்களையும், விடியோக்களையும் பரப்புகிற ஆட்களும் இருக்கிறார்கள்!

No comments:

Post a Comment