2020 கொரோனா 2 வது அலை காலத்தில் ஒரு ஞாயிறு…
"தேங்காய் பால் சாதமும் மட்டன் சாப்சும்"
இந்த ஞாயிறே உலகின் கடைசி ஞாயிறாக இருக்கும் என்கிற பீதியை விட ஞாயிறு கறிக் கடை முன் நீண்ட க்யூவில் போய் நிற்க வேண்டுமே என்னும் பீதியில் நேற்றே மட்டன் சாப்ஸ் எனும் மார்க்கண்டு வாங்கி ஃப்ரீசரில் ஸ்டாக் வைத்துவிட்டேன்!
விக்ரமாதித்தனை எள்ளி நகையாடிய வேதாளம் போல நேற்றே கறி வாங்கிய என்னைப் பலர் ஏகடியம் (நன்றி : கலைஞர்) பேசினார்கள்! ஏனெனில் நேற்று மதியம் வரை கறிக் கடைக்காரரே நாளைக்கு லீவுன்னு எதும் அரசு அறிவிப்பு வரலைன்னு சொல்லிட்டு இருந்தார்!
நம் அரசுகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அறிவிப்பு வரும் வரையா காத்திருப்பார்கள்! எப்போதும் ஒரு உள்ளுணர்வு எனக்குள் அலாரம் அடிக்கும் அதன்படி ராஜதந்திரத்தோடு நேற்றே கறியை வாங்கி வைத்துவிட்டேன்! இன்னிக்கு சூரியகிரகணம் என்பதால் அதிகாலை 11:29க்கு தான் எழுந்தோம்!
லெமன் பிழிந்த சுக்கு, கருப்பட்டி போட்ட வெந்நீர் குடித்துவிட்டு நேரடியாக லஞ்சுக்கு மட்டன் நெஞ்சு இருப்பதால் என்ன செய்யலாம் எனும் விவாதம் எழுந்தது! அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் டிவி விவாத மேடை நிகழ்ச்சிகள் போல காரசாரமாய் அது மாறி கூச்சலும் குழப்பமும் ஏற்பட இங்கி பிங்கி பாங்கி ஸ்டைலில்..
சோறு & கறிக்குழம்பு, மட்டன் பிரியாணி & தால்ஸா, தேங்காய் பால் சாதம் & மட்டன் சாப்ஸ், என சீட்டு குலுக்கிப் போட தே.பா.சா & சாப்ஸ் சீட்டு விழுந்தது! ஆனால் அரை மூடி தேங்காயே வீட்டில் இருக்க வெளியே போய் தேங்காய் வாங்கணுமே என்றனர்!
கிரகணத்தின் போது வெளியே செல்வதா என்பதற்கு எல்லாம் சீட்டு குலுக்கிக் கொண்டிருந்தால் மதியம் ரசம் சாதம் கூட கிடைக்காது என்பதால்.. தேங்காய், எலுமிச்சை, தயிர், புதினா, மல்லின்னு ஒரு சின்ன பட்டியலோடு என் ஆக்டிவாவை கிளப்பினேன்.
வழியெங்கும் கிரகணத்தின் ஷக்தியால் சாலையின் இரு ஓரத்திலும் கொத்து கொத்தாக விழுந்து கிடந்த கொரோனா, உயிருக்குப் போராடி தண்ணி தண்ணின்னு கத்திகிட்டு கிடந்தன, அதற்கு கொஞ்சமும் இரக்கப்படாமல் மளிகைக் கடைக்கு போனா…
“அடங்கொன்னியா" கறி கிடைக்காத வெறியில் காய் வாங்க ஒரு க்யூ மளிகைக் கடையின் வாசலில் நீண்டு நின்றது 48ஆவது ஆளாக அதில் நின்று 40 நிமிடம் கழித்து என் முறை வர அடடா தேங்காய் தீர்ந்திருச்சே அண்ணே என்றார் கடைக்காரர்!
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மற்றதை வாங்கிக் கொண்டு மெக்கனான்ஸ் கோல்டு போல தேங்காயைத்தேடி தொடர்ந்தது என் பயணம். தேடித்தேடி கடைசியில் உழவர் சந்தைக்கே வண்டியை விட 45 விநாடிகளில் தேங்காய் கிடைத்தது.
இங்க கூட்டமா இருக்குமுன்னு தான் நான் இங்கு வரலை! ஆனால் என்னைப்போல பலரும் நினைத்ததால் ஊரடங்கு வந்த சென்னை போல சந்தை காட்சியளித்தது! வீட்டுக்கு திரும்ப ஒரு தேங்காய் வாங்க ஒன்றரை மணி நேரமா என்றனர்!
அவர்களிடம் சேர்த்து வைத்த கோபத்தையெல்லாம் காட்ட குரல் உயர்த்த நினைத்த விநாடியில் மட்டன் சாப்ஸ் வெந்த GKமூப்பனார் மகன் பெயர் நாசியில் மோத (அப்பாடா நுகரும் உணர்வு இருக்கு) சாரிம்மா என்றேன் சாணக்யனாக!
அதற்குள் 1:45 மணியாகி இருக்க வெந்நீரில் (பைப் தண்ணீர் தான்) ஒரு குளியல் போட்டு, செல்போனுக்கு சார்ஜ் போட்டு, ஷார்ட்ஸ் போட்டு டி சர்ட் போட்டு முடிக்க தேங்காய்பால் சாதமும் காரசாரமான மண மணக்கும் மட்டன் சாப்சும் தயாராகி இருந்தது!
இளசான கத்திரிக்காய் & சுரைக்காயை சாப்ஸ் வடிவிலேயே கீறிப் போட்ட கொழுப்பு மிதக்கும் மட்டன் நெஞ்சு சாப்சும், தேங்காய் எண்ணெய் மணக்க கடலை பருப்பும் கொஞ்சம் முந்திரியும் வறுத்துபோட்ட தேங்காய் பால் சாதமும் தட்டில் விழுந்தது!
அதை 2 ரவுண்ட் வாங்கிக்கொண்டு கடைசியாக தயிரும் மட்டன் சாப்சும்! ஆஹா திவ்யம்! இந்தக் குழம்பு தான் இன்னிக்கு இரவு இட்லிக்குமாம்.! என்னது கொரோனாவால் உலகம் அழியுதா?!
அட விடுய்யா இந்த ருசியான சாப்பாடு சாப்பிட்ட பின்னாடி இந்த உலகம் அழிஞ்சா அழிஞ்சுட்டு தான் போகட்டுமே! ஏவ்வ்வ்வ்வ்.!
No comments:
Post a Comment