Thursday, 16 January 2025

#கிபி2075_நெல்லை

நெல்லை பாளையங்கோட்டை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினான் முப்பிடாதி! 30 ஆண்டுகளுக்கு முன் USAவில் செட்டிலானவன் இப்போது தான் மீண்டும் சொந்த ஊர் வருகிறான்! எவ்வளவு நாள் ஆச்சு நெல்லைக்கு வந்து! சுற்றிலும் பார்த்தான் நியூயார்க் டைம் ஸ்கொயர் போல எங்கும் கட்டிடங்கள், டிஜிட்டல் லைட்டுகள், நெல்லை அல்வா கடைகள் பற்றிய எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள், வானில் வட்டமடிக்கும் ரோந்து ஹெலிகாப்டர்கள்!

ஊரே அறிவியல் வளர்ச்சியில் ஜொலித்தது! நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ஆலயத்திற்கு நேர் மேலே வானில் இருந்து லேசர் ஒளியில் காந்திமதி அம்மனின் ஹாலோ கிராம் பிம்பம் ஒளிர்ந்து தரிசனம் தந்தது தன்னிச்சையாக விரல்களால் தாடையில் டைப்படித்துக் கொண்டான்! அவன் தச்சநல்லூர் போக வேண்டும். அதற்கு ஹெலி டாக்சிகள் சர்வீஸ் இருப்பதை அறிந்து ஏற்கனவே Nel Fly என்னும் ஆப் மூலம் புக் செய்திருந்தான்!

திடீரென அவன் உள்ளங்கை ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தது ஆம் நோட்டிபிகேஷன் லைட்! அவனது செல்போனின் புரொஜக்டர் உள்ளங்கையில் ஒளிர்ந்தது.! எண் 2134NLHT : Pilot : Siva.. Airway Gate 4 எனக் காட்டியது! அவன் நின்றது கேட் 1 சற்று தொலைவில் தான் கேட்4 இருந்தது மெல்ல நடந்தான் 4 வது கேட்டில் போய் நின்று ரெபரன்ஸ் QR கோடை அங்குள்ள அக்சஸில் காட்ட கதவு அலிபாபா குகையாக திறந்தது.

நேரடியாக ஹெலி டாக்சியில் நுழைந்தான் அது ஒரு ஷேர் ஆட்டோ அளவில் விஸ்தாரமாக இருந்தது. சீட் பெல்ட்டுடன் குஷன் சீட், ரம்மியமான லைம் மஸ்க் ஸ்பிரே, உறுத்தாத ஏசி எதிரே ஒரு வெண் திரை புரொஜக்ட் செய்து டிவி பார்க்க.. வெல்கம் சார் என்றார் பைலட்.. நேரம் இப்போது 8:35:21 விநாடிகள் நாம் 8:45:31 விநாடியில் தச்சநல்லூரில் இருப்போம் ஆர் யூ ரெடி என்றார். ஓகே என்றான் சீட் பெல்ட் ப்ளீஸ் சார் என்றவன்..

அடுத்த 5வது விநாடி ஹெலிடாக்சியை உயர்த்தினான்! கீழே பருந்துப் பார்வையில் நெல்லை பிரம்மாண்ட எல்.ஈ.டி பேனல் போல ஜொலித்தது! வண்ண விளக்குகள் பிரகாசிக்க முப்பிடாதியின் கண்ணுக்குள் ப்ளாஷ்பேக் ஓடியது ஊசி கோபுரம், பாளை மார்க்கெட், வண்ணாரப் பேட்டை, டவுண், நெல்லையப்பர் கோவில், குறுக்குத்துறை முருகன், சிந்துப்பூந்துறை, அந்த தாமிரபரணி குளியல்.. அட தாமிர பரணி ஆறு எங்கே?

கீழே பார்த்தான் தென்படவில்லை, வேறு பாதையில் பறக்கிறானோ? பைலட்டை அழைத்தான் ஏம்ப்பா தாமிரபரணி ஆறு தாண்டிட்டோமா என்றான்! இல்லை சார் இனிமே தான் அதோ தெரியுது பாருங்க என்றான் ஆவலுடன் கீழே பார்த்த முப்பிடாதி அதிர்ந்து போனான்! நான்கடி அகலத்தில் இரு புறமும் சிமெண்ட் கரைகள் கட்டப்பட்டு ஒரு நீளமான கால்வாய் தெரிந்தது!

முப்பிடாதி அதிர்ச்சி மாறாமல் கேட்டான் இதுவா தாமிரபரணி.??

யெஸ் சார்! இதான் தாமிரபரணி ஆறு..

அட! நான் USஇல் தாமிரபரணி பத்தி நெட்டில் பார்த்த போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் வேற மாதிரி இருந்துச்சேப்பா!

சார் இந்த ஆற்றில் நீர் எடுக்க கோக் கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டு 25 வருடங்கள் ஆச்சு! அந்த போட்டோ எல்லாம் AI டெக்னாலஜி! அதில் அப்படித்தான் காட்டும்! கோக் அமெரிக்கா கம்பெனி என்பதால் அங்க அப்படி தெரியுது! இப்போ இந்த ஆத்துக்கு பேரு தாமிரபரணி கூட கிடையாது அது தெரியுமா?

வ்வாட்..! தாமிரபரணி இல்லியா?! இப்போ இதுக்கு என்னா பேரு??

“அக்வாஃபைணி” என்றான் பைலட்!!

No comments:

Post a Comment