#கல்டா_புரோட்டா #இலை_புரோட்டா
ஹேஷ் டேகை படிச்சதும் சேலத்துக்காரர்களுக்கு எல்லாம் நல்லா புரிஞ்சிருக்கும்! தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருப்பவங்க அட பதார்த்தம் புதுசா இருக்கேன்னு ஆச்சரியப்படுவாங்க! தமிழ் நாட்டில் புரோட்டா என்றதும் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி அதில் மாஸ்டராகி புரோட்டா வல்லரசான ஊர் மதுரை! 1 கோடி எடிசன்கள், 1 கோடி நியூட்டன்கள், 1 கோடி ஐன்ஸ்டீன்கள்..
3 கோடி ஜி.டி.நாயுடுகள் சேர்ந்தால் எவ்வளவு ஆராய்ச்சி பண்ணி இருப்பாங்களோ அதைவிட 10 மடங்கு ஆராய்ச்சிகள் செய்து பலப்பல ருசியான புரோட்டா & சால்னா வகைகளை கண்டு பிடித்து அறிமுகம் செய்த பெருமை உடையவர்கள் பாண்டியர்கள்! மதுரையர்களுடன் இந்த ஆராய்ச்சியில் எடுபிடிகளாக இருந்து எடப்பாடிகளாக ஆனவர்களும் உண்டு! இங்கே கொஞ்ச நஞ்சம்..
வித்தையைக் கற்றுக் கொண்டு வெளியேறி விருதுநகர், நத்தம், என பொரிச்ச புரோட்டாக்களை கண்டுபிடிச்சு பேரும் வாங்கி விட்டனர்! மதுரை 1000 மார்க்னா இவங்க 100 மார்க் எடுத்தனர்! மதுரையர்களும் சரி சரி நம்ம பசங்க போய் நல்லா இருங்கன்னு வாழ்த்திட்டு வழக்கம் போல தங்கள் வல்லரசின் ஆராய்ச்சிகளை தொடர்ந்து பன் புரோட்டா, கேக் புரோட்டா, பர்கர் புரோட்டானு..
உலகளவில் க்ரியேடிவ் புரோட்டோ செய்முறைக்கு வெப்பன் சப்ளையர்ஸ் தாங்களே என முத்திரை பதித்துக்கொண்டிருக்க, என்ன தான் நீ வெப்பன் சப்ளையர்ஸா இருந்தாலும் உனக்கு அப்பன் சப்ளையர்ஸ் நாங்களும் இருக்கோம்னு களத்தில் வந்து போட்டிக்கு நிற்பது மாங்கனியர்களே! நீ சச்சின் என்றால் நாங்க ரச்சின் என்று களத்தில் அவங்க இறங்கி கண்டுபிடிச்சது தான்..
இந்த கல்டா புரோட்டாவும் இலை புரோட்டாவும்! மாம்பழத்துக்கு பதில் தற்போது சேலத்தின் பெருமை இந்த புரோட்டா வகைகளே! அதென்ன கல்டா புரோட்டா? நல்ல மொறு மொறுப்பான சாதா புரோட்டாவுக்கும் பொரிச்ச எண்ணை புரோட்டாவுக்கும் நடுவால ஒரு பதம் இருந்தா அதான் கல்டா பரோட்டா! பேப்பர் ரோஸ்ட் பத்தி கவுண்டமணி சொல்வாரே அவ்வளவு மெல்லிசுபா என்று..
அதே தான் கல்டா புரோட்டா! டைட்டன் எட்ஜ்னு ஒரு வாட்ச் இருக்கு அதை ஸ்லிம் வாட்ச்னு சொல்லுவாங்க அந்த மாதிரி ஸ்லிம்மா லேயர் லேயரா மொறு மொறுன்னு இருக்கும்! கொஞ்சம் பதம் தப்பினாலும் அப்பளம் ஆகிவிடும் அபாயம் இருக்கு! இதை சேலத்தின் அளவுக்கு பக்குவமா செய்துதர யாராலும் முடியாது! இந்தளவு மெலிசான கல்டா புரோட்டா மட்டன்,சிக்கன், நாட்டுக்..
கோழி, ஈரல், குடல், ப்ளைன் சால்னா இப்படி எதோடு சேர்ந்தாலும் ருசியில் பட்டையை கிளப்பும்! ஒரு சுக்காவும் 2 கல்டாவும் ஒரு கலக்கியும் சாப்பிட்டாலே சும்மா கிண்ணுன்னு இருக்கும்! அடுத்து இலை புரோட்டா! கிட்டத்தட்ட கேரளத்தில் மலபார் புரோட்டானு அழைப்பார்கள்! அந்த லேயர் ஸ்டைல் புரோட்டாதான்! ஆனா சேலத்தின் செய் முறை வேறு! இந்த செய்முறை தான் இந்த..
புரோட்டாவின் அபார ருசிக்கு காரணம்! நல்ல இளசான அகன்ற வாழையிலையை விரித்து அதில் முதலில் திக்கான மட்டன் குழம்பை மட்டன் துண்டுகளுடன் ஊற்றி பரப்பி அதன் மேல் நன்கு மென்மையான ஒரு பரோட்டாவை வைத்து பிறகு அதன் மீது எலும்பில்லாத சிக்கன் கிரேவியை வைத்துப் பரப்பி மேலே நறுக்கிய வெங்காயம், மல்லித் தழை, பெப்பர் தூவி அதற்கு மேல்..
இன்னொரு புரோட்டா வைத்து இந்த மொத்த லேயரும் நன்கு நனையும்படி அபிஷேகம் போல மேலே கோழிக் குழம்பு ஊற்றி அப்படியே இந்த இலையை சதுரமாக மடித்து வாழை நாரில் கட்டி பரோட்டா கல்லில் வைத்து 12 -15 நிமிடங்கள் வேக வைத்தால் வாழையிலையும் பரோட்டாவும் இணைந்து கல்லில் வேகும். வெந்த வாழை இலையின் மணமும், புரோட்டா & குழம்புகளின் மணமும்..
இணைந்த கைகளாகி ஒரு புது வெந்த மணம் வீசும்! புரோட்டா ரெடி! அப்படியே அதை சூடுபறக்க கொண்டு வந்து பரிமாற இலையைப் பிரித்தால் ஜெல்லி மாதிரி புரோட்டா குழம்பில் ஊறி வெந்து இருக்கும்! இது வெல்வெட் போல சிக்கன், மட்டன் குழம்புகளில்கலந்து வெந்திருப்பதால் இதற்கு தனிக்குழம்பு தேவையில்லை! ஒரு கலக்கி அல்லது ஆஃபாயில் இருந்தால்..
செம காம்போ! சேலத்தில் இதற்கு ஏராளமான கடைகள் இருக்கு! சேலம் ஜங்ஷன் போஸ்ட் ஆபிஸ் எதிரில் இருக்கும் அசோக் புரோட்டா கடை இலை புரோட்டாவுக்கும் கல்டாவிற்கு ஶ்ரீவாரியும் (எனது சாய்ஸ்) மிகவும் நன்றாக இருக்கும்! அடுத்த முறை நீங்க சேலத்திற்கு வந்தால் கல்டாவும் இலை புரோட்டாவும் சாப்பிடாமல் போயிடாதிங்க! இவற்றை தனித்தனியே சாப்பிட்டால் அது சிறப்பு!
No comments:
Post a Comment