”வெங்கி ரு(ர)சிக்கிறான்”
{இட்லி - குடல் & ஈரல் குழம்பு}
இட்லிக்கு உகந்தது சட்னியா? சாம்பாரா? கொத்சுவா? கடப்பாவா? எனத் தீவிர சைவர்கள் கொடி பிடித்துப் போய் கொண்டிருக்கும் ஊர்வலத்தில் இருந்து இடப்பக்கம் இண்டிகேட்டர் போட்டு வலப் பக்கம் திரும்பி அவர்களைக் குழப்பிவிட்டு நைசாக இந்தப் புறம் வாருங்கள்! கடவுள் இவ்வுலகைப் படைத்த போது இட்லியும் கறிக் குழம்பும் இருந்திருந்தால் அவர் ஏவாள் கண்களில் ஆப்பிளுக்கு பதில் நிச்சயம் இட்லி & குடல் குழம்பையே தென்பட வைத்திருப்பார்!
உணவு ஹீரோவான இட்லிக்கு அசைவக் குழம்பு ஹீரோயின்கள் அனைவருக்கும் மிகப் பொருத்தமானவன்! எப்படிப்பட்ட அசைவ உணவு இரசனை மிகுந்தவரும் வேண்டாம் என மறுக்காமல் ருசிப்பது இட்லி & கறிக் குழம்பு இணையைத்தான்! இட்லிக்கு மட்டன் வகைகள்/ சிக்கன் வகைகள்/ மீன் வகைகள் அனைத்துமே அற்புதமாக இருக்கும்! பொதுவாக இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் கறிக் குழம்புகளில் உள்ள கறி எலும்பில்லாது இருப்பதே சாலச்சிறந்தது!
அவ்வகையில் இட்லிக்கு பொருத்தமான முதலிடம் குடல் குழம்பிற்கே இந்தக் குடல் குழம்பில் மதுரை, தேனி, நெல்லை, விருது நகர், இராம் நாட், திண்டுக்கல் என தென் மாவட்டங்களில் மட்டும் பல்வேறு சமைக்கும் முறைகளிலுள்ள குடல் குழம்புகள் ஏராளம்! கோவை, ஈரோடு, சேலம் பக்கம் வேறு விதமாகவும் தஞ்சை, வட தமிழகத்தில் பலவிதமாகவும் குடல் குழம்பானது தயாராகிறது! குடலோடு கடலை பருப்பு போட்டு செய்யும் அதகளமான குடல் கூட்டுகளும் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது! அதே போல..
கோவை, சேலம் பகுதிகளில் தயாராகும் கருப்பு கறிமசால் தேங்காய் அரைத்துவிட்ட கொங்கு ஸ்டைல் குடல் குழம்பு காரசாரமானது! தஞ்சை மாவட்டத்தின் கொழுப்புக் குடல் குழம்பு இன்னும் பிரசித்தமானது! இப்படி தமிழக மாவட்டங்களின் பெருமைகளை தன்னகத்தே கொண்டு தனித்துவமாக குடல் குழம்புகள் தயாரானாலும் அசால்டாக அனைத்திற்கும் ஈடு கொடுத்துவிடுவார் நமது சூப்பர் ஹீரோ இட்லி! இட்லியை குடல் குழம்புடன் சாப்பிடும் போது..
நாம் செய்ய வேண்டியது சுடச்சுட இட்லி அதன் மீது கொதிக்கக் கொதிக்க குழம்பு ஊற்றி சாப்பிடுவதே ஒரு மானமுள்ள மறத் தமிழனுக்கு அழகாகும். ஆறிய இட்லிக்கு சூடான குழம்பு, சூடான இட்லிக்கு ஆறிய குழம்பு இதெல்லாம் நல்ல ருசிக்கு செட்டாகாது. குற்றாலம் சென்றால் அருவியில் தானே குளிப்போம்! அங்கு அருவி நீரை வாளியில் பிடித்து சொம்பு வைத்து குளிப்போமா? அதுபோல சூடான இட்லிக்கு சூடான குழம்பு ஊற்றி ருசிப்பது உங்களுக்கு அருவியில் குளித்த ஆனந்தத்தை தரும்!
இதில் ஒன்று ஆறி இருந்தாலும் அது வாளிக் குளியலே! சுடச்சுட இட்லிப் பானையில் இருந்து அப்படியே தட்டுக்கு இட்லி டிரான்ஸ்பர் ஆன அதே விநாடி கொதிக்க கொதிக்க குடல் குழம்பை அதன் தலையில் அபிஷேகம் போல ஊற்றி கை சுட்டாலும் பரவாயில்லன்னு அடுத்த நொடி இட்லியை விண்டு குடல் குழம்பில் நன்கு பிரட்டவும்! சூடான இட்லியை குழம்பில் குழைத்தால் வெண்ணெய் போல வரும், அதை குடல் கறியோடு அதை உண்ணும் சுகம் அடடா!
அது சொன்னால் புரியாது! குடல் குழம்பு நல்ல காரமாக இருந்தால் குழம்பை லேசாக பிரட்டியது போல தொட்டுக் கொண்டு சாப்பிடவும். அதை இது போல குழைத்து ருசித்தால் அடிக்கடி நிறைய நீர் அருந்த வேண்டியது இருக்கும்! சூடான இட்லியும் குடல் குழம்பும் என்றால் 30 இட்லி லட்சியம் 20 இட்லி நிச்சயம் என்ற உறுதியுடன் சாப்பிடுவது மிகச் சிறந்தது! அதே போல குடலும் முறையான பக்குவத்தில் வெந்திருக்க வேண்டும். மிக மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டு..
உப்பு போட்ட வென்னீரில் குடலை கொதிக்க வைத்து அழுக்குகள் கசடுகளை சுத்தமாக நீக்கி பிறகு பக்குவமாக சமைத்த குடல் கறி ஜெல்லி போல இருப்பது அவசியம்! அப்போது தான் அது சூப்பராக நம் வாயில் கரையும்! சூடான இட்லியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் குடல் குழம்பின் சாறு, அதன் சூடு இவை எல்லாம் உங்களுக்கு பேரின்பத்தைத் தரும்! மதுரையில் பெருங்கூட்டம் வரும் கறி விருந்துகளுக்கு இட்லி & குடல் குழம்பு வைக்கவே மாட்டார்கள்!
இட்லி அவித்தே கை ஓய்ந்துவிடும்! பந்தியில் மூன்றாம் உலகப் போரே நடக்கும்! ஆகவே குடல் குழம்பை கறி விருந்தில் ஒரு டிஷ் ஆக்கி தலைக்கறி, மட்டன் சுக்கா என மாற்றுப் பாதையில் விருந்தினை திருப்பிவிடுவார்கள் மதுரையர்கள்! இந்த குடல் குழம்பிற்கு அடுத்து இட்லிக்கு மிக மிகப் பொருத்தமானது ஈரல் குழம்பு! ஈரல் ஃப்ரை க்ரேவி, ஈரல் காரக் குழம்பு, ஈரல் பிரட்டல்..
ஈரல் சுக்கா, ஜிஞ்சர் ஈரல், பெப்பர் ஈரல், எனப் பலவகைகள் ஈரல் க்ரேவியில் உண்டு! அதிலும் மதுரையில் கிடைக்கும் ஜிஞ்சர் ஈரல் க்ரேவியுடன் சூடான இட்லி சாப்பிட்டால் உங்கள் கண்களின் வழியாக இட்லி வழியும் வரை சாப்பிடுவீர்கள் என சத்தியமே செய்யலாம்! என் அம்மா செய்யும் முருங்கைக்காய் ஜெல்லி ஈரல் க்ரேவியும் என் தம்பி செய்யும் க்ரீன் ஈரல் க்ரேவியும் எனது எவர் டைம் ஃபேவரிட்! ஒரு முறை கோவையில் எனது நண்பர் வீட்டில்..
பட்டை மிளகாய் போட்டு செய்த கொங்கு ஸ்டைல் ஈரல் க்ரேவியுடன் சூடான இட்லிகள் பரிமாற அவர்கள் பரம்பரையே சங்கடப்படும் அளவுக்கு அன்று சாப்பிட்டேன்! ஈரல் குழம்பில் கறிவேப்பிலை சேர்த்து செய்யும் தஞ்சை ஸ்டைல் க்ரேவிக்கு அடிமையாகிவிடலாம்! இட்லிக்கு மட்டும் ஈரல் குழம்பு வைப்பது எனில் ஈரல் துண்டுகள் குட்டிக் குட்டியாக இருப்பது சிறப்பு! நன்கு கவனிங்க இட்லி & கறிக்குழம்பிற்கு குழம்பும் இட்லியும் தான் முக்கியம்!
அதில் உள்ள இறைச்சி சிறிதளவே இருந்தால் போதும்! மேலும் எலும்புக்கறி எனில் அதைத் தட்டி உறிஞ்சி சாப்பிடும் நேரத்தில் இட்லி ஆறிவிடும்! ஆகவே கறி வகைகள் எதுவானாலும் போன்லெஸ் தான் மிகவும் சிறந்தது! ஆகவே தான் குடல் குழம்பும் ஈரலும் இட்லிக்கான இணையில் முதலிடத்தில் இருக்கிறது! உணவு வகைகளை நாம் முறையாக ரசித்து, ருசித்து, புசிக்கும் செயலே இந்த மண்ணில் நாம் காண்கின்ற சொர்க்கம்!
No comments:
Post a Comment