விளம்பரத் துறையில் ரீபொசிஷன் என்று ஒன்று இருக்கிறது, முன்பு நாம் சரியாகச் செய்யாத அதே விஷயத்தை அடுத்த முறை மிகச் சரியாக செய்வதற்கு தான் அந்தப் பெயர்! கிச்சடியும் அப்படித்தான் சரியான பதத்தில் செய்யா விட்டால் அதை அடுத்த முறை சிறந்த கிச்சடியாகச் சமைத்து ரீ பொசிஷன் செய்யவேண்டும்! சரி இந்த உப்புமா & கிச்சடி இந்த இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
உப்புமாவில் ரவை, வெங்காயம், சென்னா தால், கடுகு, கடலை பருப்பு அல்லது முந்திரி மட்டும் இருக்கும். கிச்சடியில் இவற்றோடு தக்காளி, உருளை, பட்டாணி, கேரட், பச்சை மிளகாய் போன்ற காய்களும் இருக்கும். உப்புமாவுக்கு வெள்ளை நிறம் போல கிச்சடிக்கு மங்கலகரமான மஞ்சள் நிறம்! உப்புமாவை உதிராக புட்டு போலவும் செய்யலாம் நல்ல குழைவாகவும் செய்யலாம்!
ஆனா கிச்சடியை குழைவாக மட்டுமே செய்யணும்! கேப்பக் களி பார்த்து இருக்கிங்களா அந்த கன்ஸிஸ்டன்ஸியில் இருக்கணும். மேலே வெல்வெட் மாதிரி மென்மையா இருக்கணும்! சாப்பிட்டா அப்படி சாஃப்டா இருக்கிற கிச்சடியைத் தான் சாப்பிடணும். கிச்சடிக்கு மிகச் சரியான ஜோடி தேங்காய் சட்னிதான். சாம்பார் என்றால் அரைச்சிவிட்ட சாம்பார், கோசுமல்லி ரெண்டுமே பெஸ்ட்.
கிச்சடிக்கு தக்காளி சட்னி, புதினா சட்னி இதெல்லாம் ஆகவே ஆகாது.. அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் விழுற பந்தை பேட்டை தூக்கி விக்கெட் கீப்பர்ட்ட விடுறா மாதிரி விட்டுடணும்! அதைத் தொட்டா விக்கெட் காலி! நல்ல கிச்சடி சாப்பிட்ட அனுபவம் அவுட் ஆகிடும்! கிச்சடியோட மொறு மொறுன்னு உளுந்துவடை இருந்தா நம்ம டீமில் பும்ரா இருப்பது போல அவ்வளவு சிறப்பாக இருக்கும்!
இதிலேயும் மசால்வடை, தவளைவடை, போண்டா எல்லாம் கிச்சடிக்கு நல்ல நண்பர்களே கிடையாது! உளுந்துவடை தான் பெஸ்ட்! அடுத்தது சாம்பார் வடை! உப்புமாக்கு சர்க்கரை தொட்டு சாப்பிடுறா மாதிரி கிச்சடிக்கு சர்க்கரை செட்டாகாது. அது கோட் சூட் போட்டுகிட்டு காலில் கொலுசு அணிந்தது போல இருக்கும்! கிச்சடியை எப்பவும் ஆவி பறக்க சூடாக மட்டுமே சாப்பிடணும்!
உப்புமா அப்படி இல்லை லேசா ஆறியிருந்தா கூட சாப்பிடலாம். ஐஸ்க்ரீம் ஸ்கூப் போல கரண்டியில் வழித்து இலையில் போட்டா தளதளன்னு அது தளும்பனும். அதன் மேனியில் நெய் மினுக்கணும் கிச்சடியை கிளறி முடிச்சதும் மேல கொஞ்சம் கரம் மசாலா தூவி 10 நிமிடம் அப்படியே மூடி வைப்பாங்க! அதெல்லாம் தெய்வ லெவல்! அதில் லைட்டா லெமன் பிழிஞ்சாலும் நல்லா இருக்கும்!
ஒரு ஸ்வீட் சாப்பிட்டுட்டு பிறகு கிச்சடி சாப்பிட்டா நீங்க எவ்வளவு பாவம் செஞ்சிருந்தாலும் உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்! நன்கு தாளித்து செய்த தேங்காய் சட்னியில் சூடான கிச்சடியை குழைச்சு சாப்பிடுறது சிறப்புன்னா, கிச்சடியில் வெந்திருக்கும் கீறி போட்ட ப. மிளகாயுடன் ருசிப்பதே சம்பவம் எனப்படும். கிச்சடியில் ப.மிளகாய் போடலைன்னா மிளகாய் சட்னியும் பெஸ்ட் காம்போ!
குழைவான கிச்சடிக்கு நடுவே குழி பண்ணி சாம்பார் விட்டு ஒரு மினியேச்சர் டேம் கட்டி கிச்சடியை சாம்பார் பக்கம் சரித்து சரித்து சாப்பிடுவது மிக மிக ரசனைக்குரிய செயலாகும். சாம்பார் வடையை குட்டி குட்டியா ஸ்பூனில் கட் பண்ணி அந்த சாம்பார் டேமில் படகு போல மிதக்கவிட்டு சாப்பிடுவது சிறப்போ சிறப்பு. சாம்பாரும் வடையும் நன்கு சூடாக இருப்பது மிக மிக முக்கியம்!
கிச்சடியில் முழு முந்திரி போடாமல் உடைத்த முந்திரிகளை வறுத்துப் போடுவதே நல்லது. முந்திரி காஸ்ட்லி என்பவர்கள் வறுத்து உடைத்த நிலக்கடலையை சேர்த்துக்கலாம்! சிராஜ் என்ற முந்திரி இல்லாவிட்டாலும் பிரசித் கிருஷ்ணா எனும் நிலக்கடலை ருசியில் நம்மை ஏமாற்றாது. கிச்சடியின் சிறப்பே சமையலில் வெகு எளிதான செய்முறை & அதன் அபாரமான ருசி!
கல்யாண வீடுகளில் கிச்சடி ஒரு இன்றியமையாத மாலை நேரச் சிற்றுண்டி! கல்யாண கிச்சடின்னு ஒரு கிச்சடியே இருக்கு! ஒரு குலாப் ஜாமூன், சூடான உளுந்து வடை, முந்திரி, கல்யாண கிச்சடி, தேங்காய் சட்னி, அரைத்துவிட்ட சாம்பார் இந்த மெனு ஒண்ணு போதும் சார் பந்திக்கு கிச்சடியை திரும்பத் திரும்ப எட்றா.. எட்றா எட்றான்னு குரல் கேட்டுகிட்டே இருக்கும்! கிஸ்.. கிஸ்.. எட்றா💖
No comments:
Post a Comment