#பாவாடை_தாவணியில்
சீட்டிப் பாவாடை என ஒன்று 1970 - 80களில் பெண்களின் விருப்ப உடையாகவும் அன்றைய பெற்றோர்களின் பொருளாதாரத்திற்கு உகந்ததாகவும் இருந்தது! காடா துணி போல முரட்டுத் துணியில் இருக்கும். அடர்வண்ணங்களான கறுப்பு, நீலம், சிவப்பு பின்னணியில் ரோஜா, சாமந்தி, செம்பருத்தி போன்ற பூக்கள் பெரிது பெரிதாக மேலே பிரிண்ட் செய்யப்பட்டு பார்க்கவே அமர்க்களமாக இருக்கும்!
3 முதல் 10 வயதுள்ள சிறு பெண்கள் பஃப் கை வைத்த முதுகுப்புறம் ஊக்குகள் உள்ள மேல் சட்டையும் கீழே முழுநீள பாவாடையும் அணிவார்கள். விளையாடும் போது இரு கை விரித்து கிறு கிறுவென சுற்றி சட்டென்று தரையில் அமர்ந்தால் காற்று புகுந்த அப்பாவாடை கவிழ்த்த கிண்ணம் போல அவர்களை சுற்றி நிலத்திலிருக்கும். அதை பார்க்கும் போது தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி /சரஸ்வதி..
போன்ற கடவுளர்கள் நினைவுக்கு வருவார்கள்! இத்துணிகளின் நல்ல தரத்தால் பல வருடங்கள் இந்தத் துணி கிழியாமல் உழைக்கும்! அதை அணியும் பெண்களின் வயது ஏற ஏற இந்த முழுப் பாவாடையும் கணுக்காலுக்கு மேல் முக்கால் பாவாடையாக மாறும்! அப்படியே இது கிழிந்து போனாலும் வீட்டில் அடுப்படியில் கரித் துணியாகவும் சைக்கிள் & சுவேகா (அன்றைய மொபெட்) துடைக்கவும் பயன்படும்.
மென்மையான பெண்களுக்கு முரட்டுத்தனமான இத்துணி தன் மேல் பட்டுக் கொண்டே இருப்பது, இன்றைய ஜீன்ஸ் பேண்ட் போல ஒரு வகையில் மனரீதியான பாதுகாப்பு உணர்வு அளித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். நான் நினைத்தது சரியா என யாராவது பெண்கள் தான் பதில் தர வேண்டும். இதுவே அப்பெண்கள் வயதுக்கு வந்த பின் பாவாடை ஜாக்கெட்டை சீட்டித் துணியிலும் காட்டன் அல்லது..
ஃபுல்வாயிலில் தாவணியும் அணிவார்கள்! அதிலும் எங்கள் தெருவில் அவதரித்து வாழ்ந்த ‘விஜி’ ஒரு தாவணி அணிந்த தேவதை! (பெயர் மாற்றியுள்ளேன்) அவளது ரசனை மிக அபாரமானது. அடர் கறுப்பு பின்னணியில் பெரிய சூரிய காந்திபூக்கள் பூத்த பாவாடை ஜாக்கெட்டும் அப்பூவின் மஞ்சள் நிறத்தில் தாவணியும் அணிவாள்! காதோரம் மஞ்சள் ரோஜாவுடன் அவள் நடந்து வரும் போதுதான்..
ஒரு சூரியகாந்தி பூந்தோட்டமே நடந்து வரும் என நான்(ங்கள்) அறிந்து கொண்டேன்(டோம்). அதே உடையில் தாவணியை மட்டும் வெள்ளையாக அணிந்து வெள்ளை ரோஜாவுடன் வந்து மிகப்பெரிய சேஞ்ச் ஓவர் தருவாள். அடர் சிவப்பில் சந்தன நிறப் பூக்கள் உள்ள பாவாடை சட்டை அதற்கு சந்தன நிற தாவணி, கருநீலத்தில் ஆகாய நீலப் பூக்கள் தெளித்த பாவாடை சட்டைக்கு ஆகாய வெளிர்..
நீல தாவணி என எங்களை துவம்சம் செய்வாள்! அநேகமா பலர் எழுதும் கவிதைகளுக்கு காரணமாகவோ அல்லது பல கவிஞர்கள் உருவாகக் காரணமாகவோ அவள் இருந்திருக்கிறாள் என்பதை விட அவளது அந்தப் பாவாடை தாவணி இருந்திருக்கிறது! 38 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் என் கண் முன்னே விரிகிறது அவளது அந்த அசைகின்ற அன்ன நடையும் அந்த அழகிய உடையும்!
அதன் பின்பு வந்தது 2 இன் 1 சட்டைக் கலாச்சாரம்! பாவாடைக்கு தாவணி அணியாமல் (வாங்க வசதியில்லாமல்) வயதின் வளமையும் குடும்பத்து வறுமையும் ஒரு புள்ளியில் சமாளித்தனர்! அதாவது கீழே பாவாடை அதற்கு மேலே வீட்டு ஆண்கள் அணியும் சட்டை! இதில் ஒளிந்திருக்கும் தகவல் அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்பதை சட்டையை வைத்தே தெரிந்து கொள்ளமுடியும்!
சட்டை டிஸைன் மிக ஓல்டாக இருந்தால் அப்பா! லேட்டஸ்ட்டாக இருந்தால் சகோதரன் என இனம் கண்டு தைரியமாய் சைட் அடிக்க முடிந்தது! சீட்டிப் பாவாடையின் இறுதி காலத்தில் பாலியஸ்டர், நைலக்ஸ், ஃபுல்வாயில் போன்ற துணிகளில் பாவாடை தாவணிகள் வந்தன. இன்று கூட தாவணின்னு யாரும் சொல்வதில்லை அது லேட்டஸ்ட் வெர்ஷனில் லெஹங்கவாக மாறி வாழ்ந்து வருகிறது!
சரி இந்த ஜீன்ஸ், லெக்கின்ஸ், குர்தா, சுடிதார், மிடி, இதெல்லாம் அப்போ இல்லியா? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், அவரவர் வாழும் காலங்களில் அந்தந்த டிரெண்டுக்கு ஏற்றது போல ஆடைகள் அவர்களுக்கு பிடித்ததாய் அமையும் என் டீன்ஏஜ் காலத்தில் விஜியைப் போன்ற பெண்கள் இந்த ஜீன்சோ லெக்கின்சோ அணிந்து இருந்தால் இவ்வளவு ரசித்து நான் எழுதியிருப்பேனா என தெரியாது.
அதேபோல இப்போதய ஈராயிரக் குழவிகளுக்கு அந்த காலத்து ஆடை பிடித்து இருக்காது! ஆடை அவரவர் செளகரியமும் அவரவர் சொந்த விருப்பமுமே. இதை அணி.. இதை அணியாதே என யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது! ஆணோ பெண்ணோ அவரவர்க்கு பிடித்ததை அணியும் உரிமையுண்டு அதை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் அல்லது அந்த ஆடை சுதந்திரத்தைப் பற்றி தவறான புரிதலில் விமர்சிக்காமலாவது இருப்பது மிகவும் சிறந்ததாகும்!
பாவாடை தாவணியைப் பற்றி இன்று நான் எழுதியது போல எதிர் காலத்தில் ஜீன்ஸ், லெக்கின்ஸ், குர்தா, சல்வார் பற்றி யாரேனும் எழுதலாம்! ஆனால் அப்போதும் பெண்களுக்கு நீ இந்த ஆடையை அணியாதே.. அந்த ஆடையைத் தான் அணியணும் எனும் சமூகக் கட்டுகள் இல்லாமல் இருக்குமா? தெரியவில்லை!
{அது போகட்டும் கண்ணே விஜி! இப்போது நீ எங்கிருக்கிறாய் }
🩷🩷🩷🩷
No comments:
Post a Comment